Wednesday 27 March 2013

போகப் போகத் தெரியும் - 45





   கடிகாரம் அதிகாலை நான்கரை மணிக்குக் குயில் போல் கூவியது. கணவனின் அரவணைப்பில் படுத்திருந்த மீனா.. அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு எழப்போனாள். ஆனால் முடியவில்லை! சக்திவேலுவின் முரட்டு கை மீண்டும் அவளை இழுத்து உடம்போடு சேர்த்து அணைத்தது.
   'ஐயோ.. என்ன இது? விடுங்க. மணி நாலரை ஆவுது. நா இப்பவே கீழப் போனால் தான் நல்லது. இல்லன்னா யார் கண்ணுலயாவது மாட்டிக்குவேன்." என்றாள் சிணுங்களாக. அவளுக்கும் அவனை விட்டு போக மனம் இல்லை தான். ஆனால் போய்தானே ஆக வேண்டும்!
   இந்த ஒரு வாரமாக.. அவனுடைய(?) ஆசைக்காக நடு ஜாமத்தில் எழுந்து வந்து அதிகலையில் திரும்பவும் தன்னறைக்கே போய் படுத்து விடுவதால் யார் கண்களிலும் படாமல் பிரச்சனை இல்லாமல் இருந்தாள்.
   ஆனால் ஒவ்வொரு நாளும் அவனிடம் சின்னதாகச் சண்டைப் போட்டு விட்டுதான் வர வேண்டி இருந்தது. இன்றும் அப்படித்தான்! அவளை விட அவனுக்கு மனம் இல்லை. ஆனால் போக வேண்டுமே..!
   'இதோ பாருங்க.. நீங்க இந்த மாதிரியே நடந்துகிறதா இருந்தா நாளையில இருந்து நா வரமாட்டேன்." கோபத்தை வார்த்தையில் காட்டினாள்.
   'ஏய்.. நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கிறத நம்மோட எதிரிங்க பாத்தக்கூடத் தப்பா சொல்ல மாட்டாங்க. நீ என்னன்னா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறியே.."
   'ஆமா. எதிரிங்க பாத்தா தப்பா நெனைக்க மாட்டாங்க. ஆனா உங்க அம்மா பாத்துட்டா அவ்வளவு தான். நா போறன் பா."
   அவன் கையை நகர்த்திவிட்டு எழுந்து கீழே கிடந்த புடவை ஜாக்கெட்டை உடுத்தினாள். அவனைப் பார்த்தாள். அவள் உடுத்துவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் இவளை பொய் கோபத்துடன் முறைத்துவிட்டு 'சீ.. போடி" என்று சொல்லிக் குப்புறப் படுத்துக் கொண்டான். மீனா சிரித்து கொண்டே மாடியை விட்டு கீழிறங்கினாள்.
   எதிரில் அகிலாண்டேசுவரி அம்மாள்! இவளை எரித்து விடுவது போல் பார்த்தாள்!
   மீனா.. இதைக் கொஞ்சமும் எதிர் பார்த்திருக்கவில்லை! பயமும் வெட்கமும் மாறிமாறி வந்தாலும் பயமே ஜெயித்தது. சட்டென்று தனதறைக்குள் புகுந்து கொண்டாள். ஆனால் பின்னாலேயே அந்த அம்மாளும் வருவாள் என்று நினைக்கவில்லை.
   'என்னோட வார்த்தைக்கு நீ தர்ற மறியாத இதானா..?" காலை வேலையிலும் குரல் கடுமையாகத் தான் இருந்தது.
   'அது.. வந்து.. உங்கபுள்ள..தான்.." வார்த்தைகளைத் தேடினாள்.
   'ஆம்பளைங்கன்னா.. அப்படித் தான் அவசரக் காரங்களா இருப்பாங்க. பொண்ணுங்க நாம தான் பெரியவங்க பேச்சிக்கி கட்டுபட்டு அடங்கி நடக்கணும். இத்தன நாளா நீ ஊருல இல்லாம நா நிம்மதியா இருந்தேன். இப்போ தொல்ல தொடங்கிடுச்சி. வந்ததே வந்த. இன்னும் நாலு மாசம் கழிச்சி வந்திருக்கக் கூடாது? "
   மீனா தலைகுனிந்து நின்றிருந்தாள். கோபமாகப் பேசியவள் என்ன நினைத்தாளோ..? அவளருகில் வந்தாள்.
   'ஏய் மீனா.. இங்க பாரு." திரும்பி இருந்தவளை தன் பக்கமாகத் திருப்பினாள். 'தோ பாரு மீனா.. நா ஒங்க ரெண்டு பேரோட நன்மைக்கி தான் சொல்றேன். நாளைக்கே ஏதாவது பொம்பள டாக்டர பாத்து கர்ப்பத்தட மாத்தர வாங்கி சாப்பிடு. இந்த மாதிரி மாத்தரையெல்லாம் சாட்டு ஒடம்ப கெடுத்துக்க கூடாதுன்னு தான் நா தோஷம் முடிஞ்சதும் கல்யாணத்த வக்கலாம்ன்னு சொல்லிட்டு இருந்தேன். ஆனா விதி யார விட்டது? ம்.. இனிமேல நீ கொஞ்சம் ஜாக்கரதையா நடந்துக்கோ. என்ன நா சொல்றது புரியுதா..?"
   மீனா தலையாட்டினாள். அதுவரைக்கும் ஏதோ இந்த அளவுக்கு பொறுமையாகப் பேசினாங்களே..! அவர் சொன்னதை யோசித்தாள். என்ன தோஷமாக இருக்கும்? அதுக்கு இவங்க எதுக்கு இவ்வளவு பயப்படணும்? ஏற்கனவே பட்டு இருக்கிறாங்க. அனுபவசாளி. அதனால தான் இவ்வளவு ஜாக்கிறதை! இவ்வளவு பயம் அதன் மேல்!!
   ஜோதிடம் சில நேரங்களில் சில மனிதர்களை நம்பிக்கையடையச் செய்வதைவிட அடிமை படுத்திவிடுகிறது. இந்த அடிமைத்தனம் சிலரைத் திருப்தியடையச் செய்வதுடன் பயப்படவும் வைக்கிறது.
   மீனாவிற்கு இப்பொழுது இந்தப் பயம் தொத்திக் கொண்டது. மாமியார் நமது நன்மைக்குத்தானே சொல்கிறாள்! ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது. அதைத் தடுக்க இது ஒரு முயற்சி போலும். நாளைக்கே டாக்டரிடம் அப்பாய்மண்ட் வாங்க வேண்டும். முடிவெடுத்தாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   தட்டில் குட்டிக் குட்டி நிலவுகளாக மூன்று இட்டிலிகளை வைத்து அதனருகில் புதினா சட்டினியையும் வெங்காயச் சட்டினியையும் ஊற்றிவிட்டுக் கணவனின் எதிரில் அமர்ந்தாள். தட்டினுள் தேசியக் கொடியின் வண்ணத்தில் சிரித்தது.
   ஆரஞ்சு வெள்ளை பச்சை நிறங்கள். இன்னும் சற்று நேரத்தில் வயிற்றுக்குள் போய் எல்லாம் கலந்துவிடும்! அதனதன் குணத்திற்கு ஒவ்வொரு நிறங்கள்! ஒவ்வொரு வடிவங்கள்! ஒவ்வொரு சுவைகள்! இப்படி தனித்தனியாக மாறுபாடாக படைக்கப் பட்டிருந்தாலும் கடைசியில் அனைத்தும் ஒன்றாகக் கலந்து மடிந்து மக்கிப் போகிறது. மனிதர்களைப் போலவே..!
   அதற்காகப் பிறக்காமலேயே  இருந்து விடுவதில்லையே.. பிறந்து விட்டால் விதியின் கால்களில் மதியைப் படுக்க வைத்து விடுவதும்.. கடைசி வரை அதன் கால்களைப் பிடித்துக் கொண்டே வாழ்ந்தாகவும் வேண்டும். இது தான் உலக நியதி. இதில் மாற்றத்தை யாராலும் செய்ய முடியாது. இப்படி வாழ்வதற்குப் பிறக்காமலேயே இருந்து விடலாம்!
   'என்ன மீனா.. தட்ட பாத்து யோசனைப் பண்ணுற..? புதுசா ஏதாவது கண்டுபிடிக்க போறியா..?"
   'புதுசா இல்லைங்க. எல்லாம் பழசு தான். காலையில நா மாடியிலேர்ந்து வந்தப்போ உங்கம்மா பாத்துட்டாங்க."
   'பாத்துட்டாங்களா..? அப்பா.. ரொம்ப நல்லதா போச்சி. இனிமேல நீ மறஞ்சி மறஞ்சி நடு ஜாமத்துல வரவேண்டியது இல்லை." திருப்தியாகச் சொன்னான்.
   'ம்.. ஆசத்தான் உங்களுக்கு. அவுங்க திட்டினாங்க. இனிமே மேல போவக்கூடாதுன்னு சொன்னாங்க. "
   'இன்னாது..?"
   'ஆமா.. டாக்டர் கிட்ட போயி கருத்தட மாத்தர வாங்கி சாப்ட சொன்னாங்க. இன்னம் நாலு மாசம் தான் அப்புறம் உங்க இஷ்டம் போல இருங்கன்னாங்க."
   'ஓ.. மாத்தர சாப்ட சொன்னாங்களா..? அப்புறம் எதுக்கு விரதம்? அப்பாய்மெண்ட் வாங்கு. நானும் ஒங்கூட வர்றேன்."
   தட்டிலேயே கையலம்பிவிட்டு எழுந்து போனான்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   அப்பொழுது போனவன் தான். இருட்டினப் பிறகு வந்தான். அவன் தலையில் பெரிய கட்டு! தோள்பட்டையில் பெரிய பேண்டேஜ்! மீனா பதறிவிட்டாள்.
   அவன் சிறிய விபத்து நடந்துவிட்டது என்று சொன்னாலும் அவளால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் ஊரில் இருந்த நிறைய ஆண்கள் வந்துவிட்டார்கள்!
   ஆனால் வந்தவர்கள் அவனை எந்தக் கேள்வியையும் கேட்காமல் இருந்தது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
   தொலைபேசி கூப்பிட்டது. அவள் எடுக்கப்போவதற்குள் அவன் சட்டென்று பாய்ந்து தடுத்தான். மீனா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அவன் தன் பாக்கெட்டிலிருந்தப் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டி..

  'நா கலையில வெளியப் போவக்குள்ள சாஸ்திரி பணம் கேட்டாரு. வந்து தர்றேன்னு சொன்னேன். பாவம். என்ன அவசரமோ.. நீ போய் இந்தப் பணத்த குடுத்திட்டு.. பார்வதி அம்மா ஒங்கிட்ட என்னமோ பேசணுமாம்.. அதையும் என்னன்னு கேட்டுக்கினு வா.." என்றான்.
   'இவ்வளவு பேர் இருக்காங்க இல்ல? அவங்கள்ல ஒருத்தர அனுப்புங்களேன்."
   'பார்வதியம்மா ஒங்கிட்ட தான் பேசணுமாம்.. போ.." என்றான்.
   அவனை யோசனையுடன் பார்த்தபடி பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினாள்!
   அவள் போனதும் அலறிக்கொண்டிருந்த போனை எடுத்துக் காதில்  வைத்தான். எதிர்முனையில் தேனப்பன்!!
   'நீ தான்னு நெனச்சேன்! ஒனக்கு அறிவிருக்குதா..? நீயெல்லாம் உண்மையான ஆம்பளையா..? துர்.. ஏன்யா..? ஆளா அனுப்புற? அதுவும் பின்னாடி இருந்து அடிக்கச்சொல்லி? போ. போயி.. அவனுங்கள ஆஸ்பத்திரியில பாரு. குத்துயிரும் கொலைவுயிருமா இருப்பானுங்க. டேய்ய்.. நீ உண்மையான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேரா வா.. நீயா..? நானான்னு பாத்துக்கலாம்."
   'வர்றேன்டா.. வர்றேன். நாளை காலையில சரியா பத்து மணிக்கெல்லாம் வர்றேன். உன்னோட ஊருக்கே வந்து உன்னையும் அந்தப் பசங்களையும் ஒம்பொண்டாட்டியையும் கொலப் பண்ணி போட்டாத்தான் என்னோட மனசு ஆறும். காலையில சுடுகாடு போவ தயாரா இரு."
   'வாய்யா..வா.. சுடுகாட்டுக்கு யார் போறான்னு நாளைக்கி தெரிஞ்சிடும் வா.."
   அவன் பேசிக் கொண்டிருக்கும் போழுதே 'அண்ணே.. மீனா வருது." சேகர் சொல்லச் சட்டென்று தொலைபேசியை அதனிடத்தில் வைத்தான். கோபத்தில் மூச்சிரைத்தது. அதே கோபத்துடன் கேட்டான்.
   'நா என்ன சொன்னன்? நீ ஏன் இவ்ளோ சீக்கிரம் வந்த..?" மீனா அவனை விநோதமாகப் பார்த்தாள்.
   'கொஞ்சம் தூரம் போனேன். சாஸ்திரியே எதுருல வந்தாரு. பணத்த குடுத்துட்டு உங்க வீட்டுக்குத்தான் போறேன்னு சொன்னேன். அவர் பார்வதி காலையில பொறந்த வீட்டுக்கு போயிருக்கான்னு சொன்னார். அதான் திரும்பி வந்துட்டேன். ஏன்..? என்ன விசயத்த எங்கிட்ட மறைக்கப் பாக்குறீங்க?"
   சந்தேகத்துடன் கேட்க.. அதே சமயம் தொலைபேசி அழைக்க.. சட்டென்று எடுத்து பேசிய சேகர் ரிசிவரை மீனாவிடம் நீட்டினான்.
   வாங்கி பேசியவள்  ;நாளை காலை ஒன்பதரை மணிக்கு அப்பாய்ட்மெண்ட் ; என்பதைக்  குறித்து கொண்டு திரும்பினாள்.
   ஆனால்.. அங்கே இருந்த ஆண்கள் அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர்! ஏமாற்றமாகத் தன் மாமியாரைப் பார்த்தாள்.
   'நான் படிச்சிப் படிச்சி சொன்னேன். நீ அவங்கிட்ட நெருங்காதன்னு. இப்போ பாத்தியா..? யார் அனுபவிக்கிறாங்கன்னு.. ஏய் தோ பாரு. ஊருல எந்தப் பிரச்சன வந்தாலும் சரி. நீ போயி டாக்டர பாத்து நா சொன்னபடி செய்யி." என்றார் மாமியார் கோபமாக.
   எதற்காகவோ.. எதைஎதையோ.. சேர்த்து முடித்துப் போட்டுப் பேசியது போல் இருந்தது. குழப்பத்துடன் 'சரி" என்று தலையசைத்தாள்.

                           (தொடரும்)

Friday 15 March 2013

போகப் போகத் தெரியும் - 44




   சோதனைகள் வந்தால் தான் மனிதனின் குணங்களைப் புரிந்து கொள்ள முடியும். சந்தோசமான நேரங்களில் அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
   மீனா.. இந்தச் சோதனையான நிகழ்ச்சியால் அவள் தன் கணவனைப் புரிந்து கொண்டாள். ஆனால் இது அதிகப் படியான சோதனை! பட்டை தீட்டினால் தான் வைரத்தின் அழகு தெரியும். ஜொலி; ஜொலிப்புத் தெரியும். அதற்காக வைரமே தேயும் அளவிற்கா பட்டை தீட்ட வேண்டும்?
   அதிகமான மனத் தேய்மானம்.. அவனுடலையும் பாதியாகத் தேய்த்து விட்டிருந்தது. இத்தனைப் பேர் அவளுடன் பேசியதில் ஒன்று மட்டும் அவளுக்குச் சரியாகப் புரிந்திருந்தது. அவனுக்கு ஆறுதல் தேவை! அதைத் தன்னால் தான் தர முடியுமாம்!
   நினைத்ததும் சிரிப்பு வந்தது. கொலையைச் செய்தது யார்? என்ற கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுக்காமல்.. ;அது யார்ன்னுத் தெரியறது முக்கியம் இல்லை. முதலில் சக்திவேலுவைச் சமாதானப் படுத்தி அவனைப் பழைய நிலைக்குக் கொண்டு வா.. ; என்றார்கள்.
   என்ன சொல்லிச் சமாதானப் படுத்துவது? இவர்கள் போனால் என்ன? வேற ஒருத்தர் கிடைப்பார் என்றா..? இந்தச் சட்டை கிழிஞ்சிட்டா.. வேற சட்டை வாங்கிக்கலாம்.. என்பது போலவா..? அல்லது  ;நல்லவர்களைத் தன்னுடனே அழைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் நினைக்கின்றார். அவர்கள் சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்பார்கள் ; என்று பிரசாங்கம் பண்ணுவதைச் சொல்லிச் சமாதானம் படுத்த முடியுமா..?
   யோசனையுடன் மாடி ஏறி வந்தாள். சக்திவேல் தோட்டத்து பக்கப் பால்கனிச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான். சூரியன் மறைந்துவிட்டாலும் வானம் இன்னும் வெளிச்சமாகத் தான் இருந்தது.
   தோட்டத்து மரக்கிளையில் இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்திப் பின்பு சமாதானமாயின.  அவைகளின் சந்தோசத்திற்கு மரக்கிளை ஊஞ்சலாக ஆடியது.
   'என்னங்க.." இவள் கூப்பிடத் திரும்பினான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.
   'வா மீனா" என்றவனின் குரலில் சுரத்தை இல்லை.
   'என்னை மன்னிச்சிடுங்க."
   'எதுக்கு..?"
   'நா உங்கள தப்பா பேசிட்டேன்."
   'ப்ச்சி. விடு மீனா.. நா அத அப்பவே மறந்துட்டேன். கோபத்துலேயும் கவலையிலும் பேசும் வார்த்தைகள் உண்மையைத் தான் பேசும். என்னைப் பத்தி நீ புரிஞ்சிக்கினது இவ்வளவு தானான்ன நெனச்சி கவல பட்டேன். ஆனா நானும் அதுக்குக் காரணம் இல்லையா..? நிருஜா.. பெங்களூர்.. இதுபத்தி எல்லாத்தையும் நான் உங்கிட்ட சொல்லி இருக்கணும். ஆனா அதுக்கெல்லாம் அப்போ நேரம் கெடைக்கல. இப்போ நேரம் இருக்குது. ஆனா நிம்மதி இல்ல. விடுமா.." திரும்பவும் தோட்டத்தைப் பார்த்தான்.
   'என்னங்க.." திரும்பினான்.
   'நாம கொஞ்ச நாள் ஏதாவது வெளியூர் போயி இருந்துட்டு வரலாமா..?"
   அவன் அவளையே பார்த்தான்.
   'ஏன் மீனா.. அப்படி வெளியூர் போனா நம்மால சரணையும் மாதவனையும் மறக்க முடியும்ன்னு நெனைக்கிறியா..? நா இவ்ளோ நாளா வெளியூருல தான இருந்தேன். என்னால இன்னமும் மறக்க முடியலையே.."
   அவன் குரலுடைய சொல்ல மீனா கவலை தாங்காமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவன் கண்ணீர் இவள் கன்னத்தில் விழுந்த போது தான் சுய நினைவுக்கு வர முடிந்தது.
   ஆறுதலாகப் பேச வந்தவள் அழலாமா..? அவனை விட்டு நகர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள். பேச்சை வேறு திசைக்கு மாற்ற வேண்டும். என்ன பேசுவது..? எதைப்பற்றிப் பேசுவது..?  அவளை அதிகம் யோசிக்கவிட வில்லை அவன்!
   'மீனா.. இன்னைக்கி நீ கல்யாணத்துல கலந்துக்கினது எனக்குத் திருப்தியா இருந்துச்சி. எங்க வராம இருந்துடுவியோன்னு நெனச்சிட்டேன். ஆமா.. அப்புறம் எங்க போயிட்ட?"
   'கோயிலுக்கு."
   'கோயிலுக்கா..? நீயா..? என்ன சாமிகிட்ட சண்ட போடப் போனியா..?"
   அவன் முகத்தில் சிரிப்பு படர்ந்தது. அதைப் பார்க்க அவளுக்கும் சந்தோசமாக இருந்தது. ஆனால் சிலவினாடிகள் தான்!
   'ப்ச்சு.. சண்ட போட்டா கூட அவனுங்க நமக்குக் கெடைக்க மாட்டானுங்க." பெருமூச்சு விட்டான். என்ன நினைத்தானோ.. தன் மனைவியைப் பார்த்தான்.
   'மீனா.. அந்தத் தேனப்பன் மட்டும் எங்கையில கெடச்சா.. அவன நா அப்டியே.. நசுக்கி சாறு புழிஞ்சி குடிச்சிடுவேன்." கண்கள் விரிய பற்களைக் கடித்து கொண்டு சொன்னான்.
   ஏற்கனவே சிவா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ;இந்தக் கோபத்த மாத்தணும் நீ. இந்த ஒன்னரை வருஷமா இந்த வெறியோடத்தான் இருக்கிறான். இத மாத்தணும். அவன் தனி ஆள் கெடையாது. அவனுக்காக நீ இருக்கிற. எங்களுக்கு அவன் வேணும். அவன் மனச எப்படியாவது மாத்தி அமைதி படுத்து. உனக்கு அப்பவே நாங்க தகவல் சொல்லி இருந்திருப்போம். அவன் கன்டீஷனா வேணாம்ன்னு சொல்லிட்டான். நீ இருந்த எடமும் எங்களுக்குத் தெரியாது. ஒனக்காகத் தான் நாங்க எல்லாரும் காத்துகினு இருந்தோம். உன்னால தான் முடியும். ; என்று சொல்லி இருந்தான்.
   'அதுதான் தேனப்பனோ.. வெற்றிவேலோ.. காரணம் கெடையாதுன்னு போலிசு சொல்லிடுச்சே.. அப்புறம் எதுக்கு அவன் மேல கோபப்படணும்?"
   'வெற்றிவேல் கெடையாது. எனக்கு நல்லா தெரியும். ஆனா தேனப்பன் சொல்லி தான் இது நடந்திருக்கும். இந்தத் துணிச்சல் தேனப்பனுக்கு மட்டும் தான் இருக்குது. உனக்குத் தெரியாது மீனா.. இந்த ரெண்டு ஊர் சண்டையும் இன்னைக்கி நேத்து தொடங்கல. பரம்பர பரம்பரையா வருது. காரணம் நாலு தலைமுறைக்கி அப்பால இருந்திருக்கும். ஆனா இன்னமும் தொடருது. படிப்பறிவு இல்லாததாலத் தான் இப்படியெல்லாம் நடக்குதுன்னு என்னோட ஊருல இருக்கிற எல்லா புள்ளைங்களையும் படிக்கவச்சேன். ஏன் வெற்றிவேல் கூடப் படிச்சவன் தான்! அதனாலத்தான் அவன் வீணான சண்டையில தலையிடாம நகர்ந்துகிறான்.
   ஆனா தேனப்பன் அப்படி கெடையாது. அவன சாகடிச்சிட்டா இனி வர்ற தலைமுறை பிரச்சனை இல்லாம இருக்கும். அவன் மட்டும் எங்கண்ணுல படட்டும். அப்பறம் இருக்குது." மூச்சிறைக்கக் கத்தினான்;.
   'சக்திவேல் நீங்க தேனப்பன சாகடிச்சிட்டா.. எப்படி பிரச்சனை வளராம போவும்..? நீ சாகடிச்சா.. உன்ன சாகடிக்க வெற்றிவேல் கத்திய தூக்குவான். அப்புறம் உங்க புள்ள. அவன் புள்ளை. இப்படியே அனுமார் வாலாட்டம் நீண்டுக்கினே தான் போவும். என்ன புரியாம பேசுறீங்க..?"
   'அப்ப என்னை என்னத்தான் பண்ண சொல்லற..?"
   'அமைதியா இருங்க. காலம் தான் நல்ல மருந்து. இந்தத் தலைமுறை விட்டுக் கொடுத்துட்டா.. அடுத்த தலைமுறையாவது அமைதியா வாழலாம் இல்லையா..?  இப்போ பொருமையும் அமைதியும் தான் முக்கியம்."
   இதை அவன் யோசித்தான். அவன் யோசிக்கட்டும..; நாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்து நகரப் போனாள். 'மீனா இப்போ எங்க போர?" கோபமாகக் கேட்டான்.
   'ஏன்..? கீழத்தான். நா வந்து ரொம்ப நேரமாயிடுச்சி. இப்பவே கீழ போவலன்னா உங்க அம்மா என்ன நேரடியாவே திட்டுவாங்க.."
   'எதுக்குத் திட்டணும்..?" புரியாமல் கேட்டான்.
   'என்ன..? ஒன்னுந்தெரியாத மாதிரி கேக்குறீங்க? நா வந்த மறுநாளே..  ;இன்னும் நாலு மாசம் கழிச்சி வந்திருக்கக் கூடாது?  அவனோட ஜாதக தோஷம் முடிய இன்னும் நாலு மாசம் இருக்குதுன்னு ஜாட மாடையா சொன்னாங்க. இப்ப கூட நா மாடிக்கி வரும் போது ஒரு மாதிரியா பாத்தாங்க. எனக்கு அவங்கள பாத்தாலே பயம்! நா போறேன்பா.." நகரப் போனவளைச் சட்டென்று கையைப் பிடித்து இழுத்தான்.
   'என்ன இது? யாராவது பாத்தா தப்பா நெனைக்க போறாங்க..?" இவள் கையை இழுத்தாள். அவன் உடும்பாகப் பிடித்திருந்தான்.
   'ஏதாவது நெனைச்சிக்கினு போவட்டும். நீ இப்ப எங்கூடத்தான் இருக்கணும்." அவளை இழுத்து அணைத்தான்.
   'இந்த ஆச இவ்வளவு நாளா எங்க போச்சாம்..?" சிணுங்கினாள்.
   'ம்.. படிக்கப் போயிருந்துச்சி. உன்னோட ஆசைகள நிறைவேத்தணும்ன்னு மனச கட்டுபடுத்திக்கினு இருந்துச்சி. மத்தபடி யாருக்கும் பயந்தோ.. ஜாதகத்துக்குப் பயந்தோ.. உன்னையப் பிரிஞ்சி இருக்கல."
   'என்ன..? என்னோட ஆசையா..?" நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் கைகளைத் தளர்த்தினான்.
   'ஆமா மீனா.. நீ மொதோ மொதோ எங்கிட்ட வந்து 'சக்திவேல் நா உங்கள விரும்பறேன்"ன்னு மட்டும் சொன்னதோட நிறுத்தியிருந்தா.. எப்படி எப்படியோ போயிருக்கும். ஆனா நீ என்ன சொன்ன..? எனக்கு படிக்கணும். எப்படியாவது ஒரு டிகிரி வாங்கணும்ன்னு சொன்ன. ஒனக்கு ஞாபகம் இருக்குதா? இல்லையா?..ன்னு தெரியல. ஆனா எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது. உன்னோட ஆசைய எப்படியாவது நிறை வேத்தணும்ன்னு தான் நா உன்ன விட்டு வெலகியே இருந்தேன். இப்போ அந்த ஆசை நிறைவேறிடுச்சி. பிறகென்ன..?"
   அவள் கண்கலங்கத் தன் கணவனைப் பார்த்தாள். கண்ணீரைச் சுண்டிவிட்டான்.
   'அப்போ.. ஜாதகம் தோஷம் எல்லாம் பொய்யா..?"
   'அது பொய்யோ.. மெய்யோ.. எனக்குத் தெரியாது. எனக்கு ஜாதகத்து மேல நம்பிக்கை கெடையாது. என்னைப் பொருத்தவரைக்கும் ஜாதகம் ஜோசியம் இதெல்லாம் சுத்த பித்தலாட்டம். நா பொறந்ததும் எங்கப்பா ஒரு வருஷத்தல இறந்திடுவாருன்னு ஒரு ஜோசியர் சொன்னாராம். அதே மாதிரி நடந்திட்டதால எங்கம்மா அதையே புடிச்சிக்கினாங்க. எனக்கு இருவத்தெட்டு வயசுல தான் கல்யாணம் நடக்கும்ன்னு சொன்னாங்க. ஆனா இருவத்தஞ்சி வயசுலேயே ஆயிடுச்சி. ரத்த சொந்தத்துல தான் பொண்ணு அமையும்ன்னு சொன்னாங்க. ஆனா நீ எனக்கு மனைவியா அமைஞ்ச.. ஜாதகம் சரின்னா இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்..?
   எனக்கு அதெல்லாம் நம்பிக்க இல்ல. நா அம்மாவ மதிக்கறேன். அவங்க மனசு நோவக் கூடாதுன்னு தான் நெனைக்கிறேன். ஆனா.. எனக்கு நீயும் வேணும். இனிமேலும் உன்ன பிரிஞ்சிருக்க முடியாது. புரிஞ்சிக்கோம்மா.."
   கெஞ்சளாகச் சொன்னான். அவளுக்கு அவன் கையை விலக்கிவிட்டு நகர்ந்து போக மனம் வரவில்லை!
   இவர்களைக் கண்ட மல்லிகை மொட்டுக்கள் கொடியில் இதழ் விரித்துச் சிரித்துத் தலையசைத்து ரசித்தன!

                           (தொடரும்)

Friday 8 March 2013

போகப் போகத் தெரியும் - 43




   என்றுமே வற்றாத குளம். பெண்களின் கண்ணீரைப் போல! சின்னக்கல்லை எறிந்தால் கூடப் பெரிய பெரிய வளையங்களை வரச்செய்து தன்னுடைய ஆதங்கத்தைக் காட்டியது. ஆனால் பின்பு அடங்கிப் போய் விடுகிறது மனிதர்களின் மனம் போலவே.. ஆனால் அதனுள் விழுந்த கல்..? இன்னும் அங்கேயே தானே இருக்கிறது?
   பாவம்! அந்தக் கல்லும் அகலிகைக் கல்லைப் போலத்தான்! தரையில் கிடக்க வேண்டியது. இப்போது தண்ணீரில்! சாப விமோர்சனம் தர எந்த இராமன் வருவானோ..?
   தன் அருகில் அசைவு தெரியத் திரும்பிப் பார்த்தாள். யோகி ரத்தினம்! அவர் மேல் அவளுக்கு அதிக மரியாதை உண்டு. எழப்போனவளைக் கையமர்த்தி விட்டு தானும் அவள் அருகிலேயே அமர்ந்தார். அவரிடம் பேசுவதற்கு அவளுக்கு எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை. தன் மீது அக்கரை உள்ளவரை பார்த்ததும் கண்கள் தானாகவே கலங்கி நீரை வடித்தது.
   'மீனா.. அழுவாதம்மா. துக்கங்கள் காலத்தின் கட்டாயங்கள். மரணம் நடக்காத வீடு எது? மரணம் வரணும். வந்தால் தான் மனிதனுக்கு நிரந்தரம் என்பது ஒன்றுமில்லைன்னு புரியும். யாரோ நமக்குத் தெரியாதவங்க இறந்து போயிட்டா.. அது நம்மள தாக்காது. ஆனா நமக்கு வேண்டியவங்கள இழந்துட்டா உலகமே வெறுமை தான்னு புரிஞ்சி போகும். ஆனால் அந்த வெறுமையான உலகத்துல தான் நாம வாழ்ந்தாக வேணும். அதுவும் சந்தோஷமா வாழணும். நமக்காக இல்லைன்னாலும் மத்தவங்களுக்காகச் சந்தோஷத்த வரவழைச்சிக்கணும்.
   மீனாம்மா.. உன்னோட துக்கத்த கொஞ்ச நேரம் ஒதுக்கி வச்சிட்டு ருக்மணி நல்லா இருக்கணும்ன்னு அவ புருஷங்கிட்ட பேசி அனுப்பி வச்சியே.. அந்த நேரம் தாம்மா நிரந்தரம். எல்லாருடைய மனசும் நிறைஞ்சி போச்சி. ஒவ்வொருத்தரோட மனசுலேயும் காலத்தால அழிக்கமுடியாத ஓவியமா நின்றுவிட்ட காட்சி அது. அது மாதிரித்தான் வாழணும். மனுஷாளா பொறக்கிறது மத்தவங்களுக்கு உதவி செய்யத்தான். கவலப்படாதம்மா.."
   'அப்படீன்னா எனக்குன்னு எந்த உணர்ச்சியும் இருக்கக் கூடாதுன்னு சொல்லுறீங்களா..? எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குதே.. அது மறுத்துப் போகலையே.." அழுதாள்.
   'உன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான நிகழ்ச்சிகள பாக்கும் போது குருடா இருந்துடு. கேக்கும் போது செவிடா இருந்துடு. பிறவிக் குருடனுக்கு யானை எப்படி இருக்கும்ன்னு தெரியாது. அவனுக்கு விளக்கிச் சொல்லவும் முடியாது. அவனுக்கு யானை என்பது ஒரு மிருகம் என்பது மட்டும் புரிந்திருக்கும். இப்படித்தான் துக்கங்களை நாம் எடுத்து கொள்ளணும்.
   உனக்கு மனசு இருக்குதுன்னு சொன்னியே.. அது மத்தவங்க மனச எண்ணிப்பாத்துச்சா..? அதே விசயம் மத்தவங்களுக்கு எப்படி பட்ட வேதனையைக் கொடுத்திருக்கும்ன்னு நெனச்சி பாத்தியா..? அந்தச் சம்பவம் அன்னைக்கி தேவகி சரவணனை மடியில கெடத்திக்கினு அழுத அழுகை.. இன்னமும் ஒவ்வொருத்தர் காதுலயும் கேட்டுக்கினே இருக்குது. அன்னைக்கி சக்திவேல் அந்த அம்மாவைக் கட்டிபுடிச்சி 'அவன் போன என்னம்மா..? நா ஒங்களுக்கு மகனா இருப்பேன்" ன்னு சொன்ன ஒரு வார்த்தை தான் அவங்கள இன்னும் உயிரோட வச்சிருக்குது. அவஸ்த்தை படுபவர்களுக்கு ஆறுதல் தான் வேணும்.
   சக்திவேலுவுக்குக் கவலை இல்லையா..? அவன் அடுத்தவருக்கு ஆறுதல் சொல்லவில்லையா..? ஆனா எல்லாருக்கும் ஆறுதல் சொன்ன அவர் தான் ஆறுதல் அடையாம தவிக்கிறாரு. அவருக்கு ஆறுதல் வேணும். அதை எங்களால தர முடியாது. நீ தான் அவர் மனைவி. அவர் மனசுல இருக்கற காயத்த ஆத்தணும்ன்னா.. நீ தான் அன்பால மருந்து போடணும். நீ பெண் பிள்ளை. உங்கிட்ட நா விளக்கமா இதுக்கு மேல சொல்ல முடியாது. புரிஞ்சி நடந்துகோம்மா. நீ எப்ப வருவேன்னு நாங்க காத்துக்கினு இருந்தோம். உன்ன சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷமா வச்சிப் பாரு. உனக்குத் தானா சந்தோஷம் கிடைக்கும்." எழுந்து போனார்.


   கோவிலுக்கு வெளியே கிடந்த செருப்பைப் போடும் பொழுது.. முந்தானையை யாரோ இழுக்கத் திரும்பிப் பார்த்தாள். சின்னப் பெண்குழந்தை. ;அம்மா அம்மா ;.. என்றபடி தன்னைத் தூக்க வேண்டும் என்பதற்காகக் கைகளை விரித்துச் சிரித்தது.
   குழந்தையின் சிரிப்பு எல்லாத் துக்கங்களையும் மறக்க வைத்துவிடுகிறதே..! மீனா சட்டென்று தூக்கி அந்தக் குழந்தைக்கு முத்தமிட்டாள். யாரோட குழந்தையாக இருக்கும்..? அருகில் மாலதி நின்றிருந்தாள்.
   'மாலதி.. உங்கக் கொழந்தையா..? இவ என்ன போயி அம்மான்னு கூப்பிட்டா."
   'கூப்பிடட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்குது? நாளைக்கி எனக்கே ஒன்னுன்னா எங்கொழந்தைய ஒம்மகளா நெனைக்க மாட்டியா..?"
   'என்ன இது அர்த்தம் இல்லாத பேச்சி? நாம படுறதெல்லாம் போதாதா..?" கோபமாகக் கேட்டாள்.
   'மீனா.. நா ஒன்னும் அர்த்தம் இல்லாம சொல்லல. வாழ்க்கையில நாம ஒருத்தருக்கு ஒருத்தர் உறவுன்னு நெனச்சி தான் வாழணும். இன்னைக்கி மகன் போனாலும் சக்திவேல மகனா ஏத்துகினு அந்தம்மா வாழலையா..? இது தான் வாழ்க்க. இப்படி தான் வாழணுமின்னு கட்டாயம் இருக்குது. மீனா.. சரவணனையும் மாதவனையும் ஒனக்கு எத்தன நாளா தெரியும்? ஒரு மூனு நாலு வருஷம் இருக்குமா..? எனக்கு சின்ன கொழந்தையிலர்ந்து தெரியும்.
   தோ.. இந்தப் பசங்க குண்டு விளையாடுறாங்களே.. இதே மாதிரித்தான் அந்த ஏழு பேரும் வெளையாடுவாங்க. ஏழு பேருக்கும் ரெண்டு மூனு வயசு வித்தியாசங்கள் இருந்தாலும் இவங்க எப்பவுமே ஒத்துமையா தான் இருப்பாங்க. சக்திவேலுவுக்குப் பணக்காரன் என்ற கர்வமோ.. திமிரோ கொஞ்சம் கூட இருந்ததில்ல. ஊருல யாருக்காவது ஏதாவதுன்னா உயிர கொடுத்துக் காப்பாத்த முன் வருவாரு. ஆனா  அவருக்குன்னு எந்தச் சந்தோஷத்தையும் தானா தேடிக்கிட்டதில்ல. காதல் கூடத் தானா தான் கெடைச்சது. பாவம். நல்லவங்களுக்குத் தான் ஆண்டவன் சோதனையைக் கொடுப்பான். யார் கண்ணுபட்டுச்சோ..?
   அந்தச் சோகத்துல இருந்து எல்லாரும் மீண்டுட்டாங்க. ஆனா சக்திவேல் தான் இன்னும் மீளல. அவருக்கு ஆறுதல் சொல்ல எங்க யாராலும் முடியல. அதுக்கு நீ ஒருத்தி தான் இருக்கிற. ஆறுதலா பேசு. ஆறுதலா நடந்துக்கோ.. என்ன.. நா சொல்றது புரியுதா..?"
   புரிந்தது என்பதாகக் குனிந்து கொண்டே தலையாட்டினாள். ஒரு சிறுவன் வந்தான். 'மீனாக்கா.. உன்ன உன்னோட பிரன்ஸ்ங்க வரசொன்னாங்க." என்றான்.
   'ப்ரென்ஸ்ங்க.." முகத்தில் ஒரு வெறுமை!
   'மீனா.. முடிஞ்சி போனத மறக்க பாரு. போய் பேசு. கல்யாணத்துக்கு வந்தேன்;. காலையில கௌம்பிடுவேன்;. இன்னும் நாலு மாசம் இருக்குது தேருக்கு. அப்போ வர்றேன். சந்தோஷமா இரு. அவரையும் சந்தோஷமா வச்சிக்க."
   குழந்தையை வாங்கிக் கொண்டு போனாள்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²  ²²²

   மீனா வகுப்பறையில் நுழையும் பொழுது இரண்டு பேருடைய நாற்காலிகள் வெறுமையாக இருந்தது. கவலையாகப் பார்த்தாள். வந்த அழுகையை அடக்கினாள்.
   'சொல்லுங்க. என்ன நடந்துச்சி..? ஏன்..? எதுக்காக..? சொல்லுங்க."
   'மீனா.. ஏன்.. எதுக்குன்னு எங்களுக்கும் சரியா தெரியாது. அதுக்காக சக்திவேல நீ தப்பா பேசி இருக்ககூடாது. "
   நிமிர்ந்து சிவாவைப் பார்த்தாள்.
   'ஆமா மீனா.. அவரு நிருஜாவோட கல்யாணத்துக்குத் தான் போயிருந்தாரு. விசயத்த டெலிபோனுல சொன்னதும்.. அவர் அழுத அழுகைய பாத்துட்டு அந்த பொண்ணு நிருஜா.. கல்யாணம் முடிஞ்ச கையோட சாவுக்கு வந்திடுச்சி. சக்திவேலு வர்றதுக்குள்ள போலிசு கேசுன்னு போயி..  தேனப்பனுக்கும் வெற்றிவேலுவுக்கும் இதுல சம்மந்தமே இல்லன்னு முடிவாயிடுச்சி. ஆனா சக்திவேலு.. அவனுங்கள எப்படியாவது சாகடிக்காம விடமாட்டேன்னு கௌம்பிட்டாரு. அவர் இருந்த கோவத்துல எங்களால அவர கட்டப்படுத்தவே முடியல. ஆனா அந்தப் பொண்ணு நிருஜாத்தான் சண்ட போட்டு சமாதானம் படுத்தினா. ரொம்ப நல்ல பொண்ணு.
   சக்திவேல் இருந்த நெலைய பாத்து அந்த பொண்ணு தன்னோடவே கூட்டிக்கினு போயிட்டா. அவளுக்குக் காதல் கல்யாணம் தான். அவ புருஷனும் சக்திவேலுக்குப் பிரண்டுதான். அங்க போயி திரும்பவும் எம் பில் படிச்சாறு. நீ வந்துட்டன்னு தெரிஞ்சதும் ஓடி வந்துட்டாரு. நீ என்னன்னா அவர சந்தேக பட்டுட்ட." ஜுவா சொல்லி முடித்தான்.
   மீனா கேட்டாள்.
   'தேனப்பனோ.. வெற்றிவேலோ.. இல்லைன்னா.. இந்த கொலையை யார் செஞ்சியிருப்பா..?"
   யாருமே பதில் சொல்ல முன் வரவில்லை.

                          (தொடரும்)