Friday 26 October 2012

போகப் போகத் தெரியும் - 28


   கூட்டம் கலை கட்டியது! ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகப் பேச.. கடைசில் இந்த வருடம் எட்டாம் வகுப்புவரை இருந்த பள்ளியைப் பத்தாம் வகுப்பு வரையில் அதிகப்படுத்துவதாக முடிவானது.
   மீனா எதுவும் பேசாமலேயே அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள். கடைசியில் சக்திவேல் தான் கேட்டான்;
   'மீனா.. இந்த முடிவுக்கு நீ என்ன சொல்லுற?" என்று.
   'உங்க ஊருக்கு எது சரியோ.. அதன்படி செய்யிங்க." அவளின் இந்த அலட்சியப் பதில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
   'ஏன்.. இந்த ஊருமேல ஒனக்கு அக்கரை இல்லையா..?"
   'அக்கர எல்லாம் இருக்குத்தான். ஆனா என்னோட விருப்பத்த சொல்ல எனக்கு அறுகத இருக்குதான்னு தான் தெரியல."
   'மீனா.. இது பொதுக் கூட்டம். இங்க தனிப்பட்ட விசயம் எதுவும் பேசக்கூடாது. அறுகத இல்லாதவங்கள நாங்க கூட்டத்துக்கு கூப்பிட வேண்டிய அவசியம் கெடையாது. நீ இந்த ஊருல பல விசயங்கள எடுத்துக் காட்டி நல்லது நடக்க ஒதவியா இருந்திருக்கிற. அதுக்காகத்தான் ஒங்கிட்ட அபிப்பிராயம் கேட்டோம். இப்ப சொல்லு. இந்த முடிவு சரியா? இல்லையான்னு.."
   கணேசன் கோபமாகச் சொன்னான். சட்டம் பேச வேண்டிய நேரத்தில் பேசித்தானே ஆக வேண்டும்.
   'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க." நிதானமாகச் சொன்னாள்.
   'ஏன்..?"
   'நீங்க ஆம்பளைங்க. உங்களோட பிரச்சனைங்க வேற. எங்களோட பிரச்சனைங்க வேற. எட்டாங்கிளாசு வர கிராமத்துல படிச்சாலும்.. பிறகு டவுனுக்குப் போய்ப் படிக்கும் போதே நெறைய மாற்றங்கள். படிப்பிலேயும் சரி. போய்வரும் பாதையிலும் சரி. சிறுவயசா இருக்கும் போது அது எங்களுக்குப் பெரிசா படாது. ஆனா.. பத்தங்கிளாசு முடிச்சிட்டுப் படிக்கக் கிராமத்த விட்டு டவுனுக்கு  போவும்போது வயசுவந்த பொண்ணுங்களுக்கு நெறைய சிரமங்கள் இருக்குது. தவர இந்த ஊருல ஒம்பது பத்துப் படிக்க நெறைய பேர் இல்ல. அதனால பத்தம் வகுப்பு வர பெரிசுபடுத்த அவசியம் இல்ல."
    அனைவரும் அவள் பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள். அவளே தொடர்ந்தாள்.
   'ஆனா.. இதையே வேற மாதிரி யோசிக்கலாம். சின்னதா ஒரு கம்பியூட்டர் சென்டர் தொறக்கலாம். இதனால மாணவர்கள் என்றில்லாமல் நம்ம ஊர்ல படிச்ச பொண்ணுங்களுக்கும் கத்துத் தரலாம். இதுக்குன்னு ஆளு வக்கவேண்டிய அவசியம் இல்ல. ஏற்கனவே கத்துக்கினு இருக்கிறவங்க மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். இன்டர்நெட் போட்டுட்டா.. கம்பியூட்டர் இருந்த எடத்திலேர்ந்தே உலகத்தைப் பாக்க முடிஞ்ச ஓரு அருமையான சாதனம்! இப்படி செஞ்சா மாணவர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருமே பயனடையலாம்."
   எழுந்து நின்று சொன்னவள் அமர்ந்தாள். ஒரு பெண் எழுந்தாள்.
   'ஆமாண்ணா.. நா டவுனுல தான் பத்தாவது படிக்கறேன். ரெண்டு வருஷமா பஸ்சுல போய்வரதால டவுன் எனக்குப் பழகி போயிடுச்சி. மீனா அக்கா சொன்னமாதிரி செஞ்சா எங்களுக்கும் வசதியா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சி அங்கேயே கத்துகறத விட இங்க இருந்தா எங்களுக்கு வசதியா இருக்கும். நேரமும் மிச்சம்." என்றாள்.
   'அப்போ பள்ளிக்கூடத்த பெரிசு படுத்த வேணாங்கிறிங்களா..?"
   'வேணாங்கில. இந்த வருஷம் வேணாம். பிறகு பாத்துக்கலாம்." மீனா சொல்ல எல்லோருமே இதையே ஆதரிக்க இதுவே முடிவானது.
   'சரி. வேற ஏதாவது சொல்லணும்ன்னா சொல்லலாம்." சக்திவேல் சொல்ல மீனா கை தூக்கினாள்.
   'என்ன சொல்லு?"
   'உங்க ஊருல ஆத்துக்கு வடபுறமா.. பக்கத்து கிராமத்துக்கு ஓரத்துல இருக்கிற நெலம் உங்களுக்கு சொந்த மானது தானே..?"
   அவள் இப்படி கேட்க.. அவள் அருகில் அமர்ந்திருந்த சேகர்.. 'உங்க ஊருன்னு ஏன் சொல்லுற. நம்ம ஊருன்னு சொல்லு." கடுகடுப்பாகச் சொன்னான்.
   'நம்ம  எடந்தான். அதுக்கென்ன..?" சக்திவேல் கேட்டான்.
   'ஏன் அந்த எடத்த தரிசாவே வச்சிருக்கீங்க?"
   'அது ஊருக்கு ரொம்ப தொலைவுல இருக்கு. அது மட்மில்ல பக்கத்தூருகாரனுவ ஏதாவது பிரச்சன பண்ணுவானுங்க. சரியா கவனிக்க முடியாது. ஆத்தோரத்துல இருக்குது. லேச செம்மண் கலந்த நெலம்." என்றார் ஒரு பெரியவர்.
   'இருந்தா என்ன? மண்ண கொஞ்சம் கொண்டு போயி மண்வள ஆராய்ச்சி காரங்க கிட்ட கொடுத்தா அவங்க ஆராஞ்சி பாத்து அந்த நெலத்துல என்ன உரம் சேத்தா என்ன தன்ம வரும். என்ன பயிர் செய்யலாம்ன்னு சரியா சொல்லிடுவாங்க. தரிசா தானே கெடக்குது. ஏதாவது மரம் வச்சா பிறகு பயனாவும் இல்லையா..? இப்போத்தான் விவசாயத்துக்கினு எவ்வளவோ நவீன கருவிங்க வந்திடுச்சே.. நீங்க ஏன் அந்த நெலத்த உங்க ஒழைப்பால மதிப்பாக்கக் கூடாது? தரிசா இருக்கிற வரைக்கும் அது வெறும் மண்ணு தான். உழைச்சா அதுக்கு மதிப்பு வந்திடும் இல்லையா..?" கேட்டாள்.
   அங்கிருந்தவர்கள் இதை அசை போட்டபடி சக்திவேலைப் பார்த்தார்கள்.
   'இதுவும் நல்ல விசயம் தான். இதுக்கான முயற்சிய நாங்க கூடிய சீக்கிரம் தொடங்கறோம். ரொம்ப நன்றி மீனா.' என்றான்.
   கூட்டம் கலைந்தது. மீனா யோகி ரத்தினத்திடம் பேசிக் கொண்டு இருந்தாள். ஒரு சிறுவன் வந்து அவளிடம் சொன்னான்.
   'அக்கா.. உன்னோட ப்ரென்சுங்க உன்ன வர சொன்னாங்க."
   'ம். தோ வர்றேன்னு சொல்லு."
   அவனை அனுப்பிவிட்டு ரத்தினத்திடம் பேச வேண்டியதைப் பேசிவிட்டு நண்பர்களைத் தேடிச் சென்றாள்.
   மனத்தில் சந்தோசத்தை உணர்ந்தாள். நண்பர்கள் சந்தோஷத்தை மட்டுமல்ல. துன்பத்தையும் பங்கு போட்டுக் கொள்பவர்கள் தானே..!
   உண்மையான நட்பு தன்னுடைய துன்பத்தைச் சொல்லி அவர்களையும் துன்பத்தில் தள்ளிவிடக் கூடாது என்று நினைப்பது தான்! 
   மீனாவும் நினைத்துக் கொண்டாள்.. தனது துன்பம் தன்னுடனே இருக்கட்டும் என்று!
   ஆனால்.. உடுக்கை இழந்தவன் கை போல தானாகவே வந்து உதவுவது தான் உண்மையான நட்பு என்பதை மறந்து விட்டாள் போலும்!!

  
   வானத்திற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் இன்;று குருடாகத்தான் இருந்தது. கழுவிவிட்ட கரும்பலகையைப் போல. ஒரு விமானம் மின்மினிப் பூச்சியாகப் பறந்து கொண்டிருந்தது.
   மீனா பள்ளிக்கூட வகுப்பில் நுழைந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். ஆறு பேரும் இருந்தார்கள். யார் முகத்திலும் சிரிப்பு மருந்துக்கும் இல்லை! அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கவும் இவளே பேச ஆரம்பித்தாள்.
   'என்ன..? எல்லாரும் நல்லா இருக்கிறீங்களா..?"
   'நாங்க நல்லா இருக்கிறது இருக்கட்டும். நீ ஏன் இப்படி மாறி போன?" சேகர் கேட்டான். கோபம் இருந்தாலும் நிதானமாகப் பேசினான்.
   'மீனா ஒனக்கு என்னப் பிரச்சனை..? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு." இது ஜுவானந்தம்.
   'ஏன் எங்கள விட்டு விலகிப்போக நெனைக்கிற..?" இது சசிதரன்.
   மீனா பேசாமலேயே அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் இலேசாகக் கலங்கத் துவங்கின.
   'மீனா இதுக்கெல்லாம் பதில் சொல்லலைன்னாலும் பரவாயில்ல. ஆனா இந்த ஒரேயொரு கேள்விக்கி மட்டும் பதில் சொல்லு. நீ சக்திவேலை விரும்புறியா..? இல்லையா..?" சரவனன் அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான்.
   'இல்லை சரண். எனக்கு அந்தத் தகுதியில்ல!"
   நிதானமாகச் சொன்னாள். அனைவருக்கும் அதிர்ச்சி!!
   'என்ன சொல்லுற நீ..?" சிவா கோபத்தோடு கேட்டான்.
   'ஆமா சிவா. சக்திவேல் இந்த ஊருக்கே நிழல் தர்ற பெரிய மரம். நாமெல்லாம் அதோட நெழல்ல தங்கி இளைபாறிவிட்டு போயிடணுமே தவிர.. அங்கேயே தங்கிட நெனைக்கக்கூடாது. அந்த மரம் தர்ற நெழலுக்கும் பழத்துக்கும் நம்மால பதில் உதவி செய்ய முடியாது சிவா. அதுவும் நா அந்த நெழல்ல நின்னு அதுக்குக் கொடக்கூலி கேட்டுத் தரத் தகுதியில்லாததால என்ன வெளியில இல்லயில்ல. வெய்யிலுல தள்ளி விடுறவங்களும் இருக்காங்க சிவா.." குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
   'யார் உன்ன அப்படி செஞ்சது?" கோபமாகக் கேட்டான் சரவணன்.
   'யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு எல்லாருமே வேணும். ஆனா எனக்குத்தான் யாருமேயில்ல."
   'மீனா.. நீ இப்படிப் பேசக்கூடாது. நா இருக்கறேன். நீ சரின்னு ஒரு வார்த்தைச் சொல்லு. நா ஒன்ன என்னோட சகோதரியா சட்டபடி ஏத்துக்கறேன். நான்னு இல்ல. எங்க ஆறு பேரையும் உன்னோட உறவா ஏத்துக்கோ." அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சளாகச் சொன்னான்.
   மீனா அடக்கிய கண்ணீர் ஆறாக இறங்கியது. கையை அவன் கையிலிருந்து உருவினாள்.
   'வேணாம் சரண். ஒனக்கு ஒன்னு தெரியுமா? சின்ன வயசுல நா யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாக்கூட அனாத நாயே.. நானா ஒனக்கு அம்மா..ன்னு திட்டுவாங்கித் திட்டுவாங்கியே.. நா யாரையுமே அம்மா அண்ணன் அக்கா மாமான்னு ஒறவுமொற வச்சி கூப்பிடறது கெடையாது. அது பழகிடுச்சி! பெரிசா படல. ஆனா என்ன வளத்தவங்களே.. என்ன அனாதைன்னு சொன்ன அந்த நிமிஷமே நா செத்துப் போயிடN;டன் தெரியுமா..?
   ஆனா சரண்.. எனக்கு இந்த உறவு முறையவிட நீங்க ஆறு பேரும் பெருசா தெரியிறீங்க! உங்கள என்னோட அம்மா.. அப்புறம் சக்திவேலு இவங்களல்லாம் விட உயர்ந்த எடத்துல வச்சிறுக்கிறேன். உங்க ஆறுபேரோட நட்பு என்னோட கடைசி நிமிஷ உயிர் இருக்கிற வரைக்கும் நீடிச்சி இருக்கணும். நா எதையுமே மனசால ஆசப்பட்டது கெடையாது. ஆனா இந்த ஆசய நீங்க நிறைவேத்தணும்.
   என்ன பொருத்தவரைக்கும் தாய்பாசம் காதல் இதவிட நட்பு சிறந்தது. இன்னைய நிலையில நீங்க மட்டும் தான் எனக்கு இருக்கிறீங்க. உங்கள நா எந்த விதத்துலேயும் எழக்க விரும்பல."
   'எதுக்காக இழந்துடுவேன்னு நெனைக்கிற?"
   'நா காலேஜுப்ரோகிராம் முடிச்சிட்டு வந்த அன்னைக்கி அந்த வேந்தன் என்ன வழிமறிச்சிக் குடி போதையில என்னன்னமோ சொல்லித் திட்டினான். அவன் உங்க ஆறு பேரையும் சக்திவேலையும் சாகடிக்காமட விடமாட்டேன்னு சொன்னான். அவன நெனச்சாலே எனக்கு பயமா இருக்குது. அதனால தான் முடிவெடுத்தேன். என்னால இந்த ஊருல யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு.
   சக்திவேல் என்னை விரும்பரார்ன்னு எனக்குத் தெரியும். ஆனா வேந்தனும் என்னதான் கட்டிக்குவேன்னு சொல்லி மெறட்டுறான். இந்தப் பிரச்சனையில நா உங்களையோ சக்திவேலையோ எழக்க  முடியாது! அது மட்டுமில்ல. எனக்காக யாரும் எந்தப் பிரச்சனையிலும் தலையிடக் கூடாது. பிரச்சனைன்னு வந்தா.. நானே அத போக்கிக்க முயற்சி பண்ணுறேன்;. நா டவுனுல இருக்கிற வரைக்கும் அவனால எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனா இங்க வந்தாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு.
   அதனாலத்தான் சொல்றேன். எனக்காக யாரும் வராதீங்க. இது தான் நா உங்ககிட்ட வேண்டி கேட்டுக்கிற உதவி! தயவு செஞ்சி என்னோட வழியில என்னை விட்டுடுங்க." கைகூப்பி சொன்னாள்.
   ஆறு பேருமே அவள் செய்கையை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். மீனா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தாள்.
                           (தொடரும்)                     
      

Tuesday 23 October 2012

போகப் போகத் தெரியும் - 27



   நேற்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டபடி மீனா தன் உடமைகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்;. நேற்றைய நிகழ்ச்சிகள் இன்று ஞாபகாத்தங்களாகி விடுகிறது.  இப்பொழுது என்பதும் அந்த நொடியிலேயே ஓடி விடுகிறது. அப்படியானால் காலத்திற்குத் தான் எத்தனை கால்கள்?
   மீனா அனைத்தையும் அடுக்கிவிட்டு நிமிர்ந்தாள். அப்பொழுது அங்கே சக்திவேல் இல்லை. அவளுக்குத் தெரியும்! இந்த நேரத்தில் நிச்சயமாக அவன் வீட்டில் இருக்கமாட்டான் என்று!
   கமலா தான் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மீனா எதையோ தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தாள். சிறிது நேரம் கழித்து மாடிக்குப் போனாள்.
   அவள் இப்பொழுது இங்கே வந்தது இதற்குத்தானே..!
   எப்படியாவது சக்திவேலின் ஒரு புகைப்படத்தையாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அவளது எண்ணம்!
   மாடியில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது அவனது படம் இருந்ததைப்  பார்த்திருக்கிறாள்.  அது தான் இப்பொழுது அவளுக்கு வேண்டும்.
   சட்டத்திலிருந்து மெதுவாக அவன் படத்தை உருவினாள்.
   என்ன அதிசயம்!!
   படத்திற்குள் படம்! அதுவும் மீனாவுடையப் படம். கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்திருக்க வேண்டும். சிகப்புச் சராரா உடையில் இருந்தாள். அவளின் படத்தை அங்கே பார்த்ததும் மனம் படபடப்பாகியது. சட்டத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு அருகில் இருந்த புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை உருவி அதனுள் எடுத்தப் படத்தை வைத்து கொண்டு கீழிறங்கினாள்.
   மனம் பட்டாம்பூச்சியாகப் பறந்தது. சந்தோஷம் முகத்தில் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. மறைக்க முயன்றாள். முடியவில்லை. கமலா தன்னை வினோதமாகப் பார்ப்பதை போல் உணர்ந்தாள். அவள் தன் முகத்தைப் பார்க்காதவாறு திருப்பிக் கொண்டாள்.
   தனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு அகிலாண்டேசுவரி அம்மாள் எதிரில் வந்து நின்றாள்.
   'சக்தியம்மா.. நா கௌம்புறேன்;.." அவளின் முகத்தை பார்த்து மெதுவாகச் சொன்னாள்.
   'ம்..ம்.. சரி சரி போ. திரும்பி அடிக்கடி வராத. எம்மகன ஒன்னோட அழகக் காட்டி மயக்கிடலாம்ன்னு மட்டும் நெனைக்காத. அவன் ஒன்னமாதிரி அனாதைய கட்டிக்க மாட்டான். அவனோட மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கிறா.. அத நல்லா மனசுல பதிய வச்சிக்கோ. பணம் காசு ஏதாவது தேவன்னா.. சொல்லு. தர்றன். பணத்துகாகச் சக்திவேலுதான் ஏம்புருஷன்னு இனிமே யார்கிட்டயும் சொல்லாத. ம்.. கௌம்பு."
   ஏதோ எழுதிவைத்ததை மனப்பாடம் செய்து சொல்வது போல் சொன்னாள். பார்வையும் சுவர்றைப் பார்த்தபடி இருந்தது.
   இதைக்கேட்ட மீனா சிலையாக நின்றுவிட்டாள்! அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பிருந்த மகிழ்ச்சி காய்ந்து தீய்ந்து போய்விட்டது.
   அவர் சொன்ன வார்த்தைகள் உண்மைதானா..? அவளால் இப்படியான கசப்பான வாரத்தைகளைக் கூட துப்பமுடியுமா..?
   அதுவும் துப்பியது தன் முகத்தில் அல்லவா..? புண் ஆறினாலும் வடு மறையாதே..! மீனாவால் இதை ஜுரணிக்க முடியவில்லை. திரும்பவும் அவர் சொன்ன வார்த்தைகளைப் பின் நோக்கிக் கேட்டாள். வெறுத்த மனது விதியை நொந்தது.
   கையிலிருந்த பெட்டியை வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று அந்த பிளாஸ்டிக் பொட்டலத்தைக் கொண்டுவந்து அந்த அம்மாள் முன் நீட்டினாள்.
   'என்ன இது?"
   'ஒங்க புள்ளகிட்ட இருக்கிற பணத்துக்கோ அழகுக்கோ நா அவர விரும்பல. அவர் கிட்ட இருக்கிற  நல்ல மனசும் சுத்தமான எண்ணமும் இத மட்டும் தான் நா ஆசப்பட்டது. இது தப்பா கூட இருக்கலாம். அதனால எனக்கு உங்க மகனும் வேணாம். அவர் வாங்கித்தந்த பொருளும் வேணாம். இந்தாங்க."
   அவர் அருகில் வைத்துவிட்டு அதன் மீது அவன் கொடுத்த கைபோனையும் வைத்தாள்.
   'நா கௌம்புறன்." கிளம்பினாள்.
   'நில்லுடி" அதிகாரக் குரல் அவளை நிற்க வைத்தது.
   'அவன் தந்த எல்லா பொருளையும் தந்துட்ட. ஆனா.. அவன் போட்ட மேதிரம் மட்டும் வெல அதிகமானதுன்னு தர்ற மனசு வரலையா..?"
   அவர் மோதிரத்தைக் கேட்கவும் மீனாவின் மனம் மட்டுமல்ல முகமும் இருண்டது.
   'இந்த மோதரம ;மூவாயிரம் நாலாயிரம் இருக்குமா..? பணத்த குடுத்துடுறன்."
   'மூவாயிரம் நாலாயிரமா..? ஒருலட்ச ரூவாடி.."
   'என்னது? ஒரு லட்சமா..?"
   'ஆமா. அதுல இருக்கற ஆறு கல்லும் வைரம். கயற்றி குடுத்துட்டு போ."
   மீனா சற்று யோசித்தாள். பிறகு தன் பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த நகைபெட்டியில் இருந்த நெக்லசை எடுத்தாள். அந்த அம்மாள் கையில் திணித்தாள்.
   'வைரம் தான வேணும்? இதுவும் வைரநெக்லஸ் தான்! இத வாங்க எங்க ஊருல ஆளே இல்ல. இவ்ளோ நாளா என்னோட அம்மா இத பாதுகாப்பா வைக்க சொன்னாங்க. ஆனா இது எனக்கு தேவயில்ல. இந்த மோதரத்துக்குப் பதில் இந்த நெக்லச எடுத்துகோங்க போதுமா..? நா கிளம்புறேன்.."
   கோபமாகக் கிளம்பிப்போனாள்.
   சற்று நேரம் கையில் இருந்த நெக்லசையே பார்த்துக் கொண்டிருந்த அகிலாண்டேசுவரி 'ஐயோ.. மீனா என்ன மன்னிச்சிடுமா.." என்று சொல்லியபடி கைகளால் முகத்தை மூடியபடி அழுதாள்!
   அருகில் நின்றிருந்த கமலா அதிசயமாக அந்த அம்மாளைப் பார்த்தாள்!


  ²²²   ²²²  ²²²   ²²²   ²²²   ²²²²   ²²²


   இனி இந்த ஊருக்கே வரக்கூடாது. என்று தான் மீனா முடிவெடுத்திருந்தாள்.
   முடிவெடுப்பது என்பது சில நேரங்களில் முன்னுக்கு வரும் முயற்சிக்குக் கூட முட்டுக்கட்டையாகி விடுகிறது. முடிவு என்பது எப்பொழுதுமே ஏதோ ஒன்றின் துவக்கம் தான்!
   அவளுடைய முடிவு சக்திவேல் தொலைபேசியில் ~இன்று நடக்கும் ஊர்ப் பொதுக் கூட்டத்திற்கு நீ அவசியம் வர வேண்டும் ;  என்று சொன்ன பொழுதே அதன் இறுக்கம் தளர்ந்து போய் விட்டது.
   அவனும் அதிகமாக எதையும் பேசவில்லை. நலம் விசாரித்துவிட்டு இந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து கொண்டான். அவளின் பதிலைக் கூட எதிர் பார்க்கவில்லை.
   இது தான் அதிகாரம் என்பதோ?
   அவளுக்கு அவனது அலட்சியம் மனத்தை இலேசாக புண்படுத்தினாலும் அவனுடன் பேசிய இந்த வார்த்தைகளை எண்ணி மகிழ்ந்திருந்தாள்.
   இது தானே பெண் மனது? தனக்குப் பிடித்தவர்கள் அடித்தலும் அது ஆசையின் அடையாளம் என்று நினைத்து விடுவது!
   ஆனாலும் அவள் அப்பொழுதும் அந்த ஊருக்குப் போகக்கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து மணியளவில் மாதவன் தனது சுசுகியுடன் வந்து அழைக்கவும் அவளால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.
   சக்திவேலின் வீட்டில் நுழையும் பொழுது மனது படபடப்பாகத் தான் இருந்தது. அந்த அம்மாள் என்ன சொல்வாளோ..?
   அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் முள்ளாகக் குத்தின மனத்தில்! அவள் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள்.  ஆனால் தன் முகத்தைப் பார்க்காமல் நிலைக் கண்ணாடியைத் துடைப்பது சாத்தியமாகாதே..!
   வேறு வழி..? மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். அலுவலக அறையி;ல் யாரோ ஓர் ஊர்க்காரருடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் இவளைப் பார்த்ததும் முகம் மலர 'வா மீனா" என்றான்.
   மீனா இலேசாக முறுவளித்து விட்டுச் சென்றாள். நேராக அகிலாண்டேசுவரி அம்மாள் இருந்த அறைக்குள் சென்றாள். அவளைக் கண்டதும் அவரின் கண்களில் சந்தோஷ பூ பூத்தது! ஒரு சில விநாடிகள் தான். உடனே சட்டென்று வாடிவிட்டது!
   'என்ன விசயம்?" குரலில் கடுமை.
   'இன்னைக்கி இந்த ஊருல கூட்டமாம். என்னையும் உங்க புள்ள வரச் சொல்லி அழச்சிருந்தாரு." மெதுவாகச் சொன்னாள்.
   'ஏன்? நீ வரலன்னா கூட்டம் நடக்காதா..?"
   'நானும் அதத்தான் கேட்டன். ஆனா நா வந்தே ஆகணும்ன்னு சொல்லி ஆளு அனுப்பி அழச்சிக்கினு வந்தாங்க."
   'ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. தான் நெனச்சத சாதிச்சிடணும்ன்னு நடந்துக்கு வாங்க. ஆனா பொண்ணுங்க தான் புரிஞ்சி நடந்துக்கணும். ஒன்னோட தகுதி என்னான்னு நா ஏற்கனவே சொல்லி தான் இருக்கேன். அதையும் மீறி வந்திருக்கே. கூட்டம் முடிஞ்சதும் கௌம்புற வழியப் பாரு. என்னா..?" வார்த்தை நனைந்த நெருப்புத் துண்டாக வந்தது.
   'இல்ல சக்தியம்மா. இத சொல்லத்தான் வந்தேன். கூட்டம் முடிய மணி எப்படியும் எட்டாயிடும். அப்புறம் பஸ்ச புடிச்சி போவணுமின்னா.. ரொம்ப கஷ்டம். அதனால இன்னைக்கி ராத்திரி மட்டும் இங்க தங்கிட்டு நாளைக்கி காலையிலேயே போயிடுறேன்." கெஞ்சலாகக் கேட்டாள். வேந்தனை மனத்தில் நினைத்துக் கொண்டு.
   'சரிசரி. இங்க நாம பேசனது யாருக்கும் தெரிய வேணாம். போ."
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
   'மீனா.. ஒன்ன தம்பி கூப்பிடுது." கமலா வந்து சொல்ல அலுவலக அறைக்கு வந்தாள்.
   'வா மீனா. உக்காரு." அவன் சொல்ல அமர்ந்தாள்.
   'இப்போ சொல்லு. நா உங்கிட்ட என்ன சொன்னேன்? நீ ஏன் இப்படி நடந்துகிற..?"
   புரியாமல் நிமிர்ந்தாள்.
   'புரியலயா..? எக்ஸாம் முடிஞ்சதும் ஊருக்கு வந்திடணும்ன்னு தான சொன்னேன். ஏன் வரல? ஊருல எல்லாரும் நீ வரலைன்னதால என்ன தான் கேட்குறாங்க தெரியுமா..?"
   'எனக்கு ஒரு முதியோர் இல்லத்துல வேல கெடச்சியிறுக்கு. இந்த லீவுல வேல செஞ்சாக்கா எனக்கு அந்த பணம் ஒதவியா இருக்கும். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் பணம் கட்டினாலும் எனக்குன்னு சில தேவைங்க இருக்கில்லையா..? அதுக்கெல்லாம் இந்தப் பணம் தேவைப்படும்." என்றாள் மிக மெதுவாக.
   'ஏன்? எங்கிட்ட கேட்டா நா செய்யமாட்டேனா..?"
   'வேணாம். எனக்கு யாரோட ஒதவியும் வேணாம். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் செய்யிற ஒதவியே அதிகம். இது போதும்."
   நிமிராமல் பதில் சொன்னாள். அவன் சற்று நேரம் அவளை உற்று பார்த்தான்.
   'சரி உன்னிஸ்டம். ஆமா.. என்னோட ரூமுல இருந்து ஒரு டைரிய எடுத்துக்கினு போனியே.. அத படிச்சியா..?"
   அவன் அப்படி கேட்க அவள் முகம் சிவந்தது. அன்று அவள் அதை டைரி என்று நினைத்து எடுக்கவில்லை. அவசரத்தில் அவனுடைய புகைப்படத்தை மறைப்பதற்காகத் தான் அந்தப் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு புத்தகம் என்று நினைத்துத் தான் எடுத்துக் கொண்டு போனாள்!
   மறுநாள் அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் அதைத் திறந்த பொழுது தான் அது ஒரு டைரி என்று அவளுக்குத் தெரிந்தது.
   அதில் அனைத்தும் கைபட எழுதியதுதான். ஆனால் என்ன பயன்? அது அவளுக்குத் தெரிந்த தமிழோ ஆங்கிலமோ இல்லை! அனைத்தும் கன்னட எழுத்துக்கள். அதில் ஓர் எழுத்துக் கூட அவளுக்குப் படிக்கத்தெரியாது.
   யாரிடமாவது கேட்கலாம் என்று நினைத்தால்.. அவன் எழுதியதில் என்ன விசயம் ஒளிந்திருக்குமோ.. பேசாமல் மூடி வைத்துவிட்டாள். இப்பொழுது அந்த டைரியைத் தான் அவன் கேட்கிறான். நல்ல வேலை. கையுடன் கொண்டு வந்திருந்தாள். எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் இலேசான சிரிப்புடன் சொன்னான்.
   'நா டைரிய கேக்கல. படிச்சியான்னுத் தான் கேட்டேன்?"
   'இல்ல. எனக்குக் கன்னடம் தெரியாது.."
   'நா வேணா அர்த்தம் சொல்லட்டுமா..?"
   'வேணாம். அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசயில்ல."
   'தெரிஞ்சாத் தானே நிஜம் என்னன்னு ஒனக்கு புரியும்!"
   'வேணா.." தலையை ஆட்டினாள். 'வேணாம். எனக்கு நிஜம் வேணாம். நெழலே போதும். அதுல வில்லனோ வில்லியோ இல்ல. இப்படியே இருந்துடறேன்."
   அவன் அவளை யோசனையுடன் சற்று நேரம் பார்த்து விட்டு 'மீனா.. நிழல்.. .." எதுவோ சொல்ல வருவதற்குள்.. கைபோன் அழைக்க எடுத்துப் பேசியவன் முடித்துத் திரும்பினான்.
   'மீனா.. வா போலாம்.. நமக்காகக் காத்துக்கினு இருக்காங்களாம்.." எழுந்தான்.
   'நீங்க போங்க. நா பின்னாலேயே வந்திடுறேன்."
   அப்படிச் சொன்னவளை முறைத்துவிட்டுக் கிளம்பினாள்.                          


                                       (தொடரும்)       

Thursday 4 October 2012

போகப் போகத் தெரியும் - 26



   மீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று!
   மீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று! அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.
   மூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.
   அறிவழகி காபி டம்ளர் அடுக்கிய தட்டை மகளிடம் நீட்டினாள். மீனா வாங்கவில்லை. கோபமாகத் தன் தாயை முறைத்தாள்.
   'மொறைக்காதடி. நாமெல்லாம் நெனச்சமாதிரி வாழ முடியாத ஜென்மங்க. கெடைக்கிற வாழ்க்கைய நமக்கு தகுந்த மாதிரி வாழப் பழகிக்கணும். இந்தா புடி. போயி மாப்புள கிட்ட குடு." என்றாள் கவலையை விழுங்கின அதிகாரத்துடன்!
   மீனா தாயை நிமிர்ந்து பார்த்தாள். 'ஏம்மா.. நீ எதுக்குத் தனியா வாழ்ந்த? ஒம்மனசுல நெனச்சவன் கெடைக்கலன்னு தான.. ஏன் நீ வேற ஒருத்தன கட்டிக்கினு அவனுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்து இருக்கலாம் இல்ல? ஒனக்கு இருந்த மனசு எனக்கு இருக்கக் கூடாதா..?"
   'வேணாம் மீனா. வீணா புடிவாதம் புடிக்காத. எனக்கு வாழ்க்க கெடைக்கலன்னாலும் என்னைய வச்சி காப்பாத்த என் அண்ணன் இருந்தாரு. ஆனா நீ..? ஒனக்கு எனக்குப் பெறகு யாரு இருக்கா..? அனாதைங்க யதையும் ஆசப்படக் கூடாதும்மா.."
   அவள் ஆறுதலுக்காகத்தான் சொன்னாள். ஆனால் மீனா.. அந்த வார்த்தையில் உடைந்து போய்விட்டாள். 'அனாதை" இந்த வார்த்தையை எத்தனையோ பேர்கள் சொல்லியிருந்தாலும்.. தன்னை வளர்த்த தாயே இன்று தன்னை 'அனாதை" என்று சொல்லிக் காட்டியது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் இருந்தது.
   அமைதியாக நின்று தன்னை ஒருநிலைப் படுத்தினாள். அறிவழகி கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் திரும்பி இவளைப் பார்த்தார்கள். அவளுக்கு யாருக்கும் காபியைக் கொடுக்க மனம் வரவில்லை. சிலையாக நின்றுவிட்டாள்.
   அவள் கண்களில் தேங்கிய கண்ணீர் வைரம் போல் ஜொலித்தது. அன்பிற்காக ஏங்கி விடும் கண்ணீர் ஆண்டவனின் இதயத்தை உடனே தட்டிவிடுகிறது போலும்!
   'மீனா.. உள்ள போ."
   யார் அப்படி சொன்னார்கள் என்று அவளால் யோசிக்கவும் முடியவில்லை. பேசாமல் நின்றிருந்தவளை கமலா அழைத்துக் கொண்டு அறையினுள் சென்றாள்.
   சக்திவேலுவின் குரலைக் கேட்டதும் மரியாதைக்காக அனைவரும் எழுந்து நின்றார்கள். 'வா..தம்பி.." ஒரு பெரியவர் தான் வார்த்தையில் வரவேற்றார்!
   சக்திவேல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
   'என்ன விசயமா வந்தீங்க..?" கேட்டான்.
   'நம்ம அறிவழகி பொண்ணு மீனாட்சிய எம்பையனுக்குப் பேசி முடிக்கலாம்ன்னு தான். பொண்ண பாத்தாச்சி. கையோட நிச்சயம் பண்ணிட வேண்டியது தான்." பையனின் அப்பா வெற்றிலை காவி பற்களைக் காட்டிச் சிரிப்புடன் சொன்னார்.
   'ம்.. நிச்சயம் பண்ணுறது இருக்கட்டும். நீங்க தான ஓடத்தூர்ல பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு வந்தவங்க?"
   'ஆமாம்பா. பொண்ணு ஒன்னும் ரொம்ப படிக்கலையாம். பத்தங்கிளாசு தானாம். அழகுகூடக் கம்மிதான். அதனாலத்தான் வேணாம்ன்னு சொல்லிட்டோம்." என்றார் பெருமையாக!
   'ஐயா மன்னிச்சிடுங்க. ஓடத்தூர்காரங்களுக்கும் இந்த ஊர்காரங்களுக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது. நீங்க அங்க பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு எங்க ஊருல பொண்ணு எடுத்தா பிறகு பிரச்சனதான் வரும். அதனால இந்தப் பொண்ணுன்னு இல்ல. இந்த ஊருல வேற எந்தப் பொண்ணையும் கொடுக்கமாட்டோம். நீங்க சாப்ட்டு கௌம்புங்க."
   எழுந்து கைகூப்பி முடிவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
   இவர்கள் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனார்கள்.
   'பாவம். அனாத பொண்ணு. நாய்கிட்ட கெடச்ச மட்டத்தேங்கா மாதிரித்தான். சின்னாபின்னமாவப் போவுது."
   அவர்களில் ஒருத்தி வேண்டுமென்றே அறிவழகி காது பட சொல்லிவிட்டு;ச் சென்றாள்!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
  
   'அம்மா. நா போயிட்டு வர்றேன்."
   மீனா நேற்று நடந்த நிகழ்ச்சி தன்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல மறுநாள் காலையில் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள்.
   கன்னத்தில் கைவைத்த படி அமர்ந்திருந்த அறிவழகி ஆவேசத்துடன் எழுந்தாள்.
   'ஏய் மீனா.. நில்லு. நீ ஒன்னும் காலேஜுக்கி போவவேணாம். நா பத்துமணி பஸ்சுக்கு ஊருக்கு போறேன். நீயும் எங்கூட வா." என்றாள் கோபமாக.
   'நானா.. எதுக்குமா..?" புரியாதவளாகக் கேட்டாள் மீனா.
   'எதுக்கா..? இனிமே நாம வாழப்போற எடம் என்னோட அண்ணன் வுடுத்தான். படிச்சது போதும். போயி துணியெல்லாத்தையும் எடுத்து வையீ." என்றாள் அதிகாரமாக.
   மீனா அதிர்ச்சியாகத் தன் தாயைப் பார்த்தாள். அறிவழகியின் பேச்சில் அதிக அழுத்தம் இருந்தது. என் இப்படி பேசுகிறாள்..? என்ன காரணமாக இருக்கும்? திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் இது எதையும் கவனிக்காதவன் போல் அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தான்.
   அவனருகில் அகிலாண்டேசுவரியும் கமலாவும் இவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். யாராவது தனக்காகப் பரிந்து பேச மாட்டார்களா..? ஏங்கியது மனம். ஆனால் அவளுக்காக யாரும் பேச முன் வரவில்லை.
   'ஏய்.. சொல்றனில்ல. போயி துணிமணியெல்லாம் எடுத்துகினு கௌம்பு." திரும்பவும் அறிவழகி கத்தினாள்.
   தனக்காகப் பேச மற்றவர்கள் வரவில்லை என்றால் என்ன? தனக்குக் தைரியம் இல்லையா.. என்ன..?
   'நா வரமாட்டேன்.." அழுத்தமாகச் சொன்னாள்.
   'வரமாட்டியா..? ஏன்..?"
   'நா படிக்கணும்."
   'அங்க வந்து படிச்சிக்கோ."
   'முடியாது. நா அங்க வந்தா ஒன்அண்ண பசங்க என்ன படிக்கவுட மாட்டானுங்க. நா மாட்டேன்."
   அவள் அப்படி சொன்னது தான் தாமதம்! அறிவழகி அறிவிழந்து தன் மகளின் முடியைக் கொத்தாகப் பிடித்து முகத்தில் அறைந்தாள்.
   'ஏன்டீ.. அனாத நாயே.. நா சொல்றதுக்கு எதுத்தா பேசுற. ஒனக்காகவே வாழ்ந்தேனே.. ஒன்னோட சந்தோசம் தான் என்னோட சந்தோசம்ன்னு நெனச்சேனே.. என்னையா எதுத்துப் பேசுற? போ.. போயி கௌம்பு."
   'நா அங்க வரமாட்டேன்." அடியையும் வலியையும் பொருட் படுத்தாமல் மீனா நிமிர்ந்து நின்று சொன்னாள்.
   'வர மாட்டியா.. வரமாட்டியா..?" அறிவழகி அழுது கொண்டே மேலும் மேலும் அடித்தாள்.
   ஓர் அளவுக்கு மேல் பொருக்காத சக்திவேல் எழுந்து வந்து சட்டென்று அவள் கையைத் தடுத்தான்.
   'அத்தே.. மொதல்ல அவள அடிக்கிறத நிறுத்துங்க."
   அவன் கண்கள் சிவக்கக் குரலை ஓங்கிச் சொன்னான். அறிவழகி தன் மகளை அடிப்பதை நிறுத்திவிட்டு இவனிடம் திரும்பினாள்.
   'தோ பாருப்பா. இவ என் பொண்ணு. அவள அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ இதுல தலையிடாத.." அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு மீனாவிடம் திரும்பினாள்.
   'ஏய்..மீனா.. எழுந்து கௌம்பு. அனாத நாயே.. ஒனக்கு பொறப்புதான் சரியில்ல. ஜாதகமாவது சரியா இருந்துச்சா..? எல்லாம் ஒன்னோட தலஎழுத்து. இனிமே உன்னைய இங்க வுட்டுட்டு போவ முடியாது.. ஏதோ அனாதய எடுத்து வளத்துட்டன். ஒன்ன எவங்கையிலயாவது புடிச்சி குடுத்துட்டா.. எனக்கு ஒரு தொல்ல ஒழியும். ம்.. கௌம்பு." கத்தி பேசினதில் மூச்சி இறைத்தது.
   மீனா பேசாமல் தரையில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
   'எந்திருடி நாயே.. எந்திருக்கமாட்ட..?" மேலும் அடிக்கப் போனவளின் கையைச் சக்திவேல் கோபமாகப் பற்றினான். அவன் முறைத்த பார்வை அவளைப் பயங்கொள்ள வைத்தது.
   'தோ பாருப்பா. இது எனக்கும் எம்மவளுக்கும் நடக்கிற பிரச்சன. இவள இனிமேல இங்க வுட்டுவக்க முடியாது." சற்றுக் குரல் தணிந்து சொன்னாள்.
   'ஏன்.. என்னக்காரணம்..?" புருவங்கள் முடிச்சிடக் கேட்டான்.
   'எனக்கு ஒடம்புக்கு முடியல. என்னோட அண்ணனும் படுத்த படுக்கையாத் தான் இருக்காரு. எனக்காக எவ்வளவோ செஞ்ச அவருக்கு நா இப்போ ஒதவியா இருக்கோணும். அதுக்குத்தான் இவளுக்குக் கல்யாண ஏற்பாடு செஞ்சேன். கடைசில அது முடியாம போயிடுச்சி. அந்த வேந்தங்கிட்ட மாட்டி இவ சின்னா பின்னமாறத விட எங்கண்ணன் புள்ளைங்க யாருக்காவது கட்டி வச்சிட்டா எங்கடமை முடிஞ்சிடும். அதுக்கு தான். மீனா புடிவாதம் புடிக்காத. எந்திறுச்சி கௌம்பு." அதட்டினாள்.
   'அத்த.. அவ வரமாட்டா. நீங்க வேணா கௌம்பிப் போங்க." நிதானமாகச் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   'இவ்ளோ உரிமயா சொல்லுற.. நீ அவள கட்டிக்கிறியா..? சொல்லு. இப்டியே வுட்டுட்டு போயிடறேன்."
   ஒரு விரலை உயர்த்திக் காட்டிக் கேட்டாள் அறிவழகி!
   அவள் அப்படிக் கேட்டதும் அழுது கொண்டு அமர்ந்திருந்த மீனா கண்களைத் துடைத்துக் கொண்டு சக்திவேலை நிமிர்ந்து பார்த்தாள். அகிலாண்டேசுவரி கமலாவின் பார்வையும் சக்திவேலின் மீது பதிந்து இருந்தது.
   அவன் ஒரு நிமிட யோசனைக்கு பின் சொன்னான்.
   'நா அவள கட்டிக்கிறதும் கட்டிக்காததும் வேற விசயம். அவள நா படிக்க வைக்கிறேன்னு வாக்கு குடுத்து இருக்கேன். அவ படிச்சி முடிக்கிற வரைக்கும் என்னோட கண்கணிப்புலயே இருக்கட்டும். நீங்க கௌம்புங்க.' என்றான்.
   'முடியாது. இனிமேல அவள நா இங்க வுட்டுவைக்க முடியாது. அது மொறையுங் கெடையாது." அவனுடைய பதில் இவளை அலட்சியப் படுத்திப் பேச வைத்தது.
   இதையெல்லாம் கவனித்த மீனா வெறுமையாகச் சிரித்தாள். எழுந்தாள். தாவணியைச் சரி செய்தாள். கலைந்த தலைமுடியைச் சரி செய்து க்ளீப் வைத்தாள். அறிவழகியைப் பார்த்தாள்.
   'அம்மா.. நா இங்க இருக்கிறது தான ஒனக்கு புடிக்கல. நா இனிமே இங்க இருக்க மாட்டேன். போதுமா..? அதுக்காக ஒன்னோட அண்ணன் வீட்டுக்கும் வர மாட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கினே அங்கேயே இருந்துகினே படிக்கிறேன் போதுமா..? நீ கௌம்பு. ஒன்னோட வீராப்பு கொணத்துக்காக என்னோட படிப்ப என்னால வீணாக்க முடியாது. எனக்கு நீயும் வேணாம். இவங்களும் வேணாம். நா அனாத தான். ஏதோ எடுத்து வளத்தியே.. ஒனக்கு பெரிய கும்பிடு. அவுங்க படிக்க பணம் கட்டி சோறு போட்டாங்க. உங்களுக்கும் ரொம்ப நன்றி. இனிமே நா யாருக்கும் பாரமா இருக்கவிரும்பல. நா கௌம்புறேன்."
   கீழே சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
   வானம் கடைசியாக இருந்த மழைநீரை வடிகட்டியது. இன்னும் சற்று நேரத்தில் வெறுமையாகிவிடும். மீனாவின் மனத்தைப்போல!
                     

                              (தொடரும்)