Friday 31 August 2012

போகப் போகத் தெரியும் – 23





    மீனாவும் அறிவழகியும் சக்திவேல் வீட்டில் நுழையும் பொழுது அவன் காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
    சூரியன் உச்சி சிம்மாசனத்தை நோக்கி உறுதியுடன் நகர்வதால் அதன் கோபக்கனல் உயிர்களின் உடலை வியர்வையாக்கி நனைத்தது. காலையிலேயே அதற்கு இத்தனை கோபமா...?
    நெற்றியில் வழிந்த வியர்வையைத் தாவணி முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகம் மலர “வா மீனா... வந்து கொஞ்சம் சாப்பிடு...என்றான்.
    “இல்லை. நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க.“
    மீனா சொல்ல... அவன் அறிவழகியைப் பார்த்தான். “என்ன அத்தை.. காரணம் இல்லாம வரமாட்டீங்களே...!
    ஆமாப்பா... எங்கண்ணனுக்கு ஒடம்பு சரியில்லையாம். காலையில ஆள் வந்து சொன்னான். நான் ஒடனே கௌம்பலாம்னு இருக்கேன். இவ வரமாட்டேங்கிறா. அதுவும் நல்லதாத்தான் படுது. அதனால ஒங்கிட்ட சொல்லிவிட்டு ஒன்னோட பாதுகாப்புல வுட்டுட்டு போலாமேன்னு தான் வந்தேன். நீ என்னப்பா சொல்லுற?“
    அறிவழகி அடக்கமாகக் கேட்டாள்.
    “எனக்கு ஒன்னும் ஆட்சேபண இல்ல, அம்மாகிட்ட விசயத்த சொல்லிடுங்க!என்றான் மீனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
    “மீனா.. நீ இங்கேயே இரு. நான் போயி அவங்க்கிட்ட பேசிட்டு வந்துடறேன்  சொல்லிவிட்டு அறிவழகி அந்த அம்மாள் இருந்த அரையை நோக்கி நடந்தாள். மீனா அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அதே நேரம் சக்திவேலின் கைபோன் பாட அதை எடுத்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.
    மீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். கல்லூரி தொடங்கி இந்த மூன்று மாதத்தில் அவள் அவனை இன்று தான் சற்று அருகில் பார்க்கிறாள்! மனம் எதையாவது பேசிடத் துடித்தாலும்... அவளுக்கு எதையும் பேச வார்த்தை வரவில்லை. அவனும் இவளை எதிரில் பார்த்தாலும் இலேசான புன்முறுவலுடன் சென்று விடுகிறான்.
    ஏன் அப்படி...? தன் மீது காதல் என்பதால் வெட்கமா...? அப்படி இருக்க முடியாது! எதையும் தைரியமாகப் பேசக்கூடிய ஆளாயிற்றே இவர்! பிறகு ஏன் நம்மிடம் பேசுவது கிடையாது? ஒரு சமயம் உண்மையில் அவருக்குத் தன் மீது விருப்பம் இல்லையோ...! வெற்றிவேல் அன்று சொன்னது போல யாரோ ஒரு பெங்களுர்ப் பெண்ணை விரும்புகிறாரா...?
    இருக்கலாம். அதனால் தான் இவர் படிப்பு முடிந்த பிறகும் அடிக்கடி பெங்களுர் போகிறார்.! அன்றொருநாள் “நீங்கள் ஏன் கண்மணியைக் கைவிட்டீங்க?“ என்று கேட்டதற்கு “என் மனசுல வேற ஒரு பெண் இருக்கிறாள்“ என்று தன்னிடமே சொல்லி இருக்கிறார் தானே... அப்படியானால் அவர் மனத்தில் இருக்கும் பெண்.. அந்தப் பெங்களுர் பெண்ணாகத்தான் இருக்கும்!
    இப்படி நினைக்கும் பொழுது அவளுக்கு இலேசான கவலை கலந்த பெருமூச்சு வந்தது. தன் விரலில் இருந்த மோதிரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.
    காரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கவலைப்படுவது தானே மனித மனம்!
    “தம்பி... சாப்டியாப்பா...? அம்மா ஒன்னையும் மீனாவையும் கூட்டியார சொன்னாங்கப்பா...அங்கே வந்த அறிவழகி சொன்னாள்.

    மீனாவும் சக்திவேலும் அந்த அறையில் நுழையும் பொழுது அந்த அம்மாள் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். மீனாவைப் பார்த்ததும் அவர் கண்கள் இலேசாக்க் கலங்க... அன்புடன் அவளைக் கைநீட்டி அழைத்தார்.
    அவள் அவர்ருகில் சென்றதும் அவள் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தார். சற்று நேரம் பேசாமல் அவளை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டே இருந்தார்.
    அவளுக்கு வயது ஐம்பதுக்குள் தான் இருக்கும். பருமனான தேகம். திடமாகத் தெரிந்தாலும் நோயாளியைப் போல் படுக்கையில் இருந்தார்!
    மீனா கேட்டாள், “சக்தியம்மா... உங்களுக்கு உடம்பு சரியில்லையா...?“
    மீனா அவளைச் “சத்தியம்மா“ என்று கூப்பிட்டதை நினைத்து தன்னையும் அறியாமல் சிரித்துக் கொண்டாள்.
    “உடம்பு நல்லா தான் இருக்கும்மா... கால் முட்டிதான் தேஞ்சி போச்சாம்... கொஞ்ச நேரம் கூட நிக்க முடியாது. கால் வீங்கிப் போயிடும் என்றாள்.
   “அச்சோ... ஏன் சக்திவேல், இப்போல்லாம் கால் முட்டியில ஆபரேஷன் செஞ்சி பிளாஸ்டிக் மூட்டு கோப்பைன்னு பொருத்துறாங்களே... நீங்க ஏன் உங்க அம்மாவுக்குச் செய்யலை...? சக்திவேலிடம் கேட்டாள்.
    “அவங்க ஆஸ்பிட்டல், ஆப்ரேஷன்னா ரொம்ப பயப்படுறாங்க மீனா...
    “பயந்தா அப்படியே விட்டுடுறதா? நீங்க தான் தைரியம் சொல்லி இதையெல்லாம் செய்திருக்கணும். இப்போல்லாம் இது ரொம்ப சாதாரண விசயமா போயிடுச்சி தானே...?“
    “சாதாரண விசயம் தான். இவ்வளவு நாள் நான் சொல்லி அவங்க கேக்கலை. இப்போத்தான் நீ வந்திட்டியே... நீயாவது சொல்லு. பயம் போகுதான்னு பாக்கலாம்என்றான்.
    மீனா அந்த அம்மாவைப் பார்த்தாள். “சக்தியம்மா... நீங்க பயப்படாதீங்க. இந்த லீவுல உங்கக் காலைச் சரிப்பண்ணிடலாம். நான் உங்கக்கூடவே இருக்கிறேன். எதுக்கும் கவலைப் படாதீங்க.என்றாள்.
    பயம் என்பது சில நேரங்களில் தானாகப் போகும். சில நேரங்களில் வேறு யாராவது பயத்தைப் போக்க தைரியம் சொல்ல வேண்டும். ஆனால் ஒருவன் எதற்காகப் பயப்படுகிறானோ அதனுள் சென்று பார்த்தால் தான் உண்மையில் அந்தப் பயம் தெளியும்!
    அந்த அகிலாண்டேசுவரி அம்மாளுக்குப் பயத்தைப் போக்க மீனா தைரியமூட்டி பேசினதும் முகம் சந்திரனைக் கண்ட அல்லி போல் மலர்ந்தது.
    குழந்தையின் சிரிப்பையும் நோயாளியின் சிரிப்பையும் அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.
    அந்த அம்மாள் “என் ராசாத்தி“ என்று சொல்லிவிட்டு மீனாவின் முகத்தை வழித்து நெட்டி முறித்தாள்.
    சக்திவேலுக்கு உள்ளம் இன்பத்தால் நிறைந்ததை முகம் காட்டிக் கொடுத்தது.
    ஆனால் மீனாவிற்கு ஒன்று தான் புரியவில்லை. கோவில் பூசை முடிந்து காரில் இந்த அம்மாளுடன் இருந்த பொழுது அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னை ஓர் அனுதாபத்துடன் கூடப் பார்க்காமல் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்ட இவருக்கு இன்று மட்டும் எப்படி வந்தது இந்தக் கரிசனம்?
    யோசித்தாள். முடிவு தெரியவில்லை! முடிவு என்பது ஏதாவது ஒன்றின் தொடக்கம் தான் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    மீனா சொன்னது போலவே செய்து முடித்துவிட்டாள். அகிலாண்டேசுவரி இப்பொழுது சற்று நடக்கத் தொடங்கி இருந்தாள். இரண்டு கால்களிலும் அடுத்தடுத்து அறுவை சிகிட்சை முடிந்து விட்டதால் தனியாகவே எழுந்து அவளால் நடக்க முடிந்த்து. மீனா அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.
    அறிவழகி போய் மூன்று மாதங்கள் கரைந்து விட்டு இருந்தாலும்... மீனாவிற்கு அறிவழகியின் ஞாபகமே வரவில்லை! அந்த அளவிற்கு அகிலாண்டேசுவரி அம்மாள் இவளிடம் அன்பு காட்டினாள். அவள் மட்டுமா...? அந்த ஊர் மக்கள் அனைவரும் அவளிடம் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் பழகினார்கள்!
   ஆனால் சக்திவேல்...!!!
    அவன் மீனா என்றொரு பெண் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் தான் நடந்து கொண்டான்.!

             (தொடரும்)

Tuesday 28 August 2012

போகப் போகத் தெரியும் - 22



       மீனா சக்திவேலின் அலுவலக அறையில் அவன் எதிரில் அமர்ந்திருந்தாள். அவர்களுடன் எப்பொழுதும் போல் ஆறு நண்பர்களும்!
   அந்த மோதிர நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து இன்று தான் அவள் சக்திவேலுவைப் பார்க்கிறாள்! இதுவும் அவன் ஆளைவிட்டு அவளை அழைத்திருந்தான். எதற்காகக் கூப்பிட்டிருப்பான்? அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள்.
   'மீனா.. ப்ளஸ்டூல்ல ப்பஸ்ட் கிளாசுல பாஸ்பண்ணி இருக்கே. கங்கிராஜிலேஷன்! மேல என்ன படிக்கபோற?"
   சக்திவேல் ஏதோ தாள்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
   'எனக்கு அக்ரிகல்சர் படிக்கணும்ன்னு ஆச." என்றாள்.
   'மீனா.. அதெல்லாம் நமக்கு அனுபவத்திலேயே வரும். தவர அதுக்கின்னே நிறையப் பேர் இருக்காங்க. நீ வாங்கியிருக்க மார்க்குக்கு கம்பியுட்டர் சென்சு இல்லன்னா இம்பெர்மேஷன் டெக்னாலேஜின்னு இருக்கிற புதுசா ஏதாவது கோர்ஸ் எடுத்துப் படியேன்.."
   'ம்.. படிக்கலாம் தான்! ஆனா ஏர்பிடிப்பவனெல்லாம் எழுத்தாணி பிடிக்கப் போய்விட்டால் சோறு போடுபவன் யாருன்னு ஒரு கவிதை படிச்சேன். அதுல எந்த அளவு உண்மை இருக்குதுன்னு யோசிக்க வேண்டாமா..?"
   'நல்ல யோசனத்தான்! ஆனா உலகம் எவ்வளவோ மாறிடுச்சி. மாற்றங்கள் வேண்டாம்ன்னு ஒவ்வொரு மனுஷனும் நெனச்சாலும் உலகம் இன்னைக்கி முன்னேற்ற பாதையிலத் தான் போயிக்கினு இருக்குது என்பதை நாம ஏத்துக்கினு தான் ஆகணும்! பழைமையைத்தான் நாம புதுமையான கோணங்கள்ல கையாலுறோம். நம்மோட இன்றைய புதுமைகள் நளைய சந்ததியினருக்கு பழைமையாத்தான் மாறப்போவுது. அதனால நாம எப்போதும் புதுமையைத்தான் விரும்பணும் மீனா.." என்றான்.
   மீனா அவன் பேச்சை உன்னிப்பாகக் கேட்டாள். அதிலும் உண்மை ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.
   'சரி. உங்க விருப்பம் போல படிக்கிறேன்."
   'படிப்பை யார் மேலேயும் திணிக்க முடியாது. நீயா விரும்பி படிக்கணும்."
   'சரி. நான் கம்பியுட்டர் சைன்சு எடுத்துக்கிறேன்."
   'குட். இதுதான் கரேக்ட்! மீனா ஒனக்குக் காலேஜுல அட்மிஷன் வாங்கிட்டுப் பக்கத்துல இருக்கிற லேடீஸ் ஆஸ்டல்ல சேத்து விடுறேன். நீ லீவுக்கு வந்தால் மட்டும் போதும்." என்றான்.
   'என்ன லீவுக்கு மட்டுமா..? நா மாட்டேன். எனக்கு ஆஸ்டலே வேணாம். பஸ்சுலே காலேஜுக்குப் போயிட்டு வந்திடுறேன். என்ன போவ ஒருமணி நேரம். வர்ற ஒரு மணிநேரம். அவ்வளவு தான்." என்றாள் அவசரமாக!
   'ஏன்? என்ன காரணம்?"
   'காரணம்.. .. எதுக்கு வீண் செலவு? அதான்."
   'செலவபத்தி நீ கவலப்படாத. வேற காரணம் இருந்தா சொல்லு."
   அவன் அதிகாரமாகச் சொல்ல மீனா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பிறகு திரும்பித் தன் நண்பர்களைப் பார்த்தாள். எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
   'ம்.. சொல்லு." சக்திவேல் அவசரப் படுத்தினான்.
   'வந்து.. வந்து.. உண்மைய சொல்லட்டுமா..? பொய் சொல்லட்டுமா..?"
   மெதுவாகக் கேட்டவளை நிமிர்ந்து நோக்கினான். வந்த சிரிப்பை அடக்கினான்.
   'உண்மைய சொல்லு."
   'ஆஸ்டல்ல தங்கி படிச்சா.. ரூம் மெட்ஸ் இருப்பாங்க. ஒழுங்கா படிக்கமுடியாது."
   'சரி. இப்போ உண்மைய சொல்லு."
   'இதான் உண்ம!"
   'இது பொய்! எனக்குத் தெரியும். போன வருஷம் நீ ஆஸ்டல்ல தங்கிகினே.. வேல வேற செஞ்சிகினே.. படிச்சி பஸ்ட் கிளாசுல பாஸ் பண்ணியிருக்கே. நிச்சயமா இது காரணம் இல்ல. அதனாலத் தான் கேக்குறேன். உண்மைய சொல்லு." என்றான்.
   'சொல்லவா..?"
   'சொல்லு."
   'எனக்கு இனிமே ஒரு நாள் கூட உங்கள பாக்காம இருக்க முடியாது. இது தான் உண்ம. போதுமா..?" என்றாள் அழுத்தமாக!
   அங்கே அமைதி நிலவியது. யாரும் எதுவும் பேசாததால் நிமிர்ந்து சக்திவேலுவைப் பார்த்தாள். அவன் தன் முகத்தில் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் காட்டவில்லை! எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்கமுடியும்? தான் இப்படி சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லையோ.. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
   'மீனா.. இப்போ ஒனக்குப் படிக்கிற வயசு. வீணா மனச அலைபாயவிடாத. ஆஸ்டல்ல தங்கிக்கினு படிச்சிக்கினே வீக்கெண்டுக்கு வந்தா போதும்." என்றான் மிக சாதாரணமாக!
   மீனா கவலையாக எழுந்தாள். அவன் மனத்தில் தன்னைப்பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லையோ.. .. என்ற குழப்பம் மனத்தை அரித்தது.
   'சரி சக்திவேல். ரொம்ப நன்றி! ஆனா.. இந்தக் கடனையெல்லாம் உங்களுக்கு எப்போ எப்படித் தரப் போறேனோ.. தெரியலை." என்றாள் கவலையுடன்.
   தன்னுடையவன் இல்லை என்றால் அவனுடையதை அவனிடமே திருப்பித் தந்து விடுவது தானே முறை!
   'என்ன..? கடன திருப்பித்தரப்போறியா..? ஏற்கனவே எனக்குக் கொடுக்கிறேன்னு சொன்ன பரிசையே இன்னும் நீ எனக்கு தரல! அது என்ன காசா? பணமா..?"
   அவன் அப்படி சொன்னதும் இவளின் முகம் சட்டென்று வெட்கத்தால் சிவந்தது. சற்று முன்பிருந்த கவலை தோய்ந்த துடிப்பு இப்பொழுது மறைந்து விட்டிருந்தது. மனம் சட்டென்று இலேசாகிவிட்டது போன்ற உணர்வு!
   'பொய் சொல்லி ஜெயிச்சவருக்குப் பரிசு கெடைக்காது." சொல்லிவிட்டு நகரப்போனவளை
   'அம்மணி ஒரு நிமிஷம் இருங்க. யார் பொய் சொன்னது? சக்திவேல் ஜெயிக்கணும்ன்னு சொன்னது நீங்க. அதே மாதிரி சக்திவேல் ஜெயிச்சாச்சி. பரிசைக் கொடுக்க வேண்டியது தானே..?"
   அவன் நாற்காலியை விட்டு எழுந்தான்.
   'அண்ணா.. நாங்க அப்புறம் வர்றோம்.." என்று சொல்லி நகரப்போன சேகரைக் கண்களால் தடுத்தான்.
   மீனாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெட்கமாக இருந்தது. நண்பர்களின் மத்தியில் இப்படியா பேசுவது?
   'என்ன பதிலையே காணோம்..?"
   'ம்.. இல்லாத சின்னதம்பிய வேணும்ன்னா கூட்டிக்கினு வாங்க. அவருக்கு வேணா.."
   அதற்கு மேல் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. வெட்கம் அவளைப் பிடுங்கி தின்றது. ;களுக்" கென்று சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள்.
   அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து அங்கே எல்லோரும் சிரித்துக்கொண்டார்கள்.
   இப்படியே வாழ்க்கை சந்தோஷத்துடனே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அமைதியான கடலைப் போல!
   கடல் அமைதியாக இருக்கும் வரையில் அழகு தான்! மனத்திற்கு அதைப் பார்க்க ஆறுதல் தான்! ஆனால் அதன் கோபமுகத்தைக் காட்டினால் தானே அதில் இருக்கும் ஆபத்து நமக்கு புரியும்?
   எந்த ஆபத்திலும் தன் வாழ்க்கை கப்பலை தைரியமாக கரை சேர்க்கிறவன் தானே சிறந்த மாலுமி! அமைதியான கடலால் சிறந்த மாலுமியை உருவாக்க முடியாது தானே..
   இதோ இங்கே சிறந்த மாலுமி யார்?
   சக்திவேலா..?
   வெற்றிவேலா..? வேந்தனா..? இல்லை.. வேறு ஒருத்தரா..?
   இங்கே அனைவரும் தன் கப்பலைச் சூராவளிக் கடலில் கூட நன்றாகத்தான் ஓட்டி செல்கிறார்கள்!
   ஆனால்.. கடலில் விழுந்து தத்தளிக்கப் போறவள் மீனா தானே..!

                          (தொடரும்)

Wednesday 15 August 2012

போகப் போகத் தெரியும் - 21


     மீனா இருந்த காரை மறித்து அவளை வெற்றி வேலுவின் ஆள் ஒருத்தன் வெற்றிவேல் அவளை அழைத்து வரச் சொன்னதாக சொன்னதும் அவளுக்குப் பயத்தில் சுட்ட இரத்தம் வியர்வையாகி உடலை நனைத்தது.
    காரைத்திறந்து சக்திவேல் இறங்கச் சொன்னதும் தயங்கித் தயங்கி இறங்கினாள்.
    வெற்றிவேலைக் கண்களால் தேடினாள். அவன் சற்று தூரத்தில் தன் டாடாசுமோ மீது சாய்ந்த கொண்டு இவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனருகில் இன்னொரு வண்டி! அங்கே வேந்தனும் அவன் கூட்டாளிகளும் இருந்தார்கள்.
    அவள் வேந்தனைப் பார்த்ததும் தன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள்! தன் நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளைத் தன் புடைவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
    சக்திவேல் அவளின் செய்கையைப் பார்த்து இலேசாகச் சிரித்தான்.
'என்ன மீனா..? என்னமோ அவ்வளவு தைரியமா பேசுன.. இப்போ இப்படி பயந்து நடுங்கிறியே.. எல்லாம் வாய் பேச்சித்தானா..?"
    மீனா கவலையுடன் அவனைப் பார்த்தாள். எப்படி இவனால் இந்த நேரத்திலும் சிரிக்க முடிகிறது? துணிச்சல் காரர்கள் எப்பொழுதுமே வெற்றியடைவோம் என்ற எண்ணத்திலேயே இருப்பார்களோ.. நாம் இப்படி பயப்படுறோமே!
    என்ன செய்வது? எதன் மீதும் ஏறாதவன் எப்போழுதும் கீழே விழமாட்டான். அதனால் ஏறுகிறவன் தானே பார்த்து ஏறணும்?
பிரச்சனை இப்பொழுது அவனுக்கா நமக்கா..?
    நமக்குத்தான். காப்பாற்ற சக்திவேல் இருக்கிறான் என்ற நமபிக்கை மனத்தில் இருந்தாலும் அதுவே பயத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை வந்துவிடுமோ..
    அவளின் சிவந்த முகத்தைப் பார்த்த சக்திவேல் சொன்னான்.
'மீனா பயப்படாத..! தைரியமா போய்ப் பேசு. ஒனக்கு நா இருக்கறேன்." என்று.
    'எனக்கு அது தான் பயமா இருக்குது." என்றாள் சட்டென்று.
    'என்ன..?" கோபமாக முறைத்தவன் சட்டென்று நிலைமையை உணர்ந்து 'உன்ன அப்படியே விட்டுட்டுப் போயிடட்டுமா..? ஆனா ஆதுவும் முடியாது. நீ இப்ப போய் அவங்கிட்ட பேசலைன்னா இங்கிருந்து யாருமே இந்த ஊரவிட்டு போவ முடியாது. அங்க பாரு.." கண்களால் காட்டினான்.
    மீனா பார்த்தாள். அங்கே யானைகள் எந்த வண்டியையும் போக முடியாதவாறு வழி மறித்து நின்று கொண்டிருந்தன!
    'மீனா போய் பேசு. எந்தக் காரணம் கொண்டும் அவன கோவப்பட வைக்காத. சிரிச்சிக்கினே பேசு. அதுக்குள்ள நம்ம ஊருகாரங்க எல்லாரும் போயிடுடட்டும். அப்புறம் எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம்! ம்.. போ.." என்றான்.
    மீனா ஒரு பெருமூச்சு விட்டு விட்டு வெற்றிவேல் அருகில் போனாள். அவன் 'வா மீனா" என்றான் புன்முறுவலுடன்!
    'என்ன வெற்றிவேல். கூப்பிட்டிங்களா..? என்ன விசயம்..?" முகத்தில் சிரிப்பைக் கட்டாயமாக வரவழைத்து கொண்டு கேட்டாள்.
    'ஆமா மீனா. உன்ன பத்தி நெறைய கேள்விபட்டேன். நீ நெறைய நல்லது செஞ்சிறுக்காப்பல இருக்கு! ஆத்தூருல நெறைய போர் பேசிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு மீனா. நீ ஏன் எங்கூட வந்து இதே மாதிரி ஒதவிகள என்னோட வூருக்காரர்களுக்குச் செய்யக் கூடாது?" கேட்டான் தலைக்கும் வாலுக்கும் இடையில் உடல் இல்லாதது போல!
    உதவி என்று இவன் எதைச் சொல்கிறான்? அறியாமையை அகற்றினால் அது ஓர் உதவியா..? அதுவும் எந்த உரிமையில்..? புரியாமல் அவனைப்பார்த்துக் கேட்டாள்.
    'எந்த உரிமையில நா உங்க ஊருக்கு வர முடியும்..?"
    'இப்ப எந்த உரிமையில ஆத்தூருல இருக்கியோ.. அதே உரிமையில வாயேன்.." என்றான்.
    என்ன இவன் குழப்புகிறான்? புரியாமல் அவனைப் பார்த்தாள்.
    'என்ன மீனா..? புரியலையா..? வெளக்கமா சொல்றேன். கேட்டுக்கோ! அதோ நிக்கிறானே வேந்தன். அவன் என் தம்பிதான்."
    அவன் வேந்தனைச் சுட்டிக்காட்ட அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
    'என்ன.. அவர் உங்க தம்பியா..?"
    'ஆமா.. வேந்தன். இலங்கை வேந்தன்! அவனுக்குப் பக்கத்துல இருப்பவனும் என் தம்பி தான்! பேர் லட்சுமணன்!"
    அதிர்ச்சியுடன் இருந்த மீனா இதைக் கேட்டதும் சிரித்தாள்.
    'இலங்கை வேந்தனுக்கு லட்சுமணன் தம்பியா..?" மேலும் சிரித்தாள்.
'மீனா சிரிக்காத. இங்க யாரும் ராமாயணத்த படிச்சிட்டு வந்து பேர் வக்கல! என்னோட சின்னம்மா ஒரு இலங்கை காரங்க. அதனால என்னோட அப்பா அவனுக்கு அந்த பேர வச்சார். இப்போ அது பிரச்சனை இல்ல. என்னோட தம்பி வேந்தன் இதுவரைக்கும் எங்கிட்ட பேசனது கெடையாது. இன்னைக்கி தான் மொதோ மொறையா எங்கிட்ட பேசினான். அதுவும் என்ன தெரியுமா? உன்ன அவனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணுமாம்.."
    அவன் முடிப்பதற்குள் மீனா குறுக்கிட்டாள்.
    'என்ன.. என்னையா..?" குரலில் அதிர்ச்சி கலந்த கோபம்!
    'ஆமா. உன்னத்தான். அவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சிறுக்காம். காலையில எங்கிட்ட வந்து சொன்னான். என்னதான் இருந்தாலும் அவன் என்னோட தம்பி. அதுவும் மொதோ முறையா எங்கிட்ட உதவின்னு கேட்டு இருக்கான். அவனும் ஒன்னும் கெட்டவனில்ல. சந்தர்பம் சூழ்நெல அவன கெட்டவன் போல காட்டுது. அதனால நீ நா சொல்லுறத நல்லா கேட்டுகோ. நீ போய்ப் பேசாம எங்காருல ஏறி ஒக்காந்துடு. மேல எது நடந்தாலும் நா பாத்துகிறேன்." என்றான்.
    மீனா அவன் பேச்சை நம்ப முடியாதவளாகக் கேட்டாள். என்ன சொல்கிறான் இவன்? தன் தம்பியைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கிறானா..? அல்லது.. கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று கட்டளை இடுகிறானா..?
    ஆனால் இரண்டுமே தன்னால் முடியாதே! திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் தன் ஊர்காரர்களைப் பாலத்தைத்தாண்டி அனுப்பிவைப்பதிலேயே குறியாக இருந்தான். பெண்கள் அவசர அவசரமாகக் குழந்தைகளை இழுத்துக்கொண்டு நடந்தார்கள். விழாவில் எதையும் விளையாடவில்லையே.. எதையும் வாங்கி சாப்பிட முடியவில்லையே.. என்ற ஏக்கம் சிறுபிள்ளைகளின் கண்களில் தெரிந்தது!
பெருமூச்சுடன் வெற்றிவேலின் பக்கம் திரும்பினாள்.
    'என்ன மீனா.. இன்னும் யோசனை? தோ பாருமா.. எங்கிட்ட சக்திவேலோட சொத்தவிட நாலு மடங்கு அதிகமா இருக்குது. நீ சம்மதிச்சா அதுல ஒனக்குப் பாதி எழுதி வச்சிடுறேன். வா.. போலாம்.." அவன் கையைப் பிடிக்கப் போனான். அவளுக்கு மனத்தில் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியவில்லை. அதை மனத்தில் நிறுத்தி அசடாகச் சிரித்தாள். அவன் முறைத்தான்.
    'வெற்றிவேல் நா எதுக்காக ஒந்தம்பிய கல்யாணம் பண்ணிக்கணும்? பேசாம நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கோ. ஒம்பொண்டாட்டியா வந்து உன்னோட ஊருல இருக்கேன். ஆனா நீ கண்மணிய சக்திவேலுவுக்கு விட்டுகொடுத்திடணும். சரியா..?" மெதுவாகச் சென்னாள்.
    'ஏய்.. வாய அடக்கி பேசு. உன்ன மாதிரி அனாதைய கட்டிக்க எனக்கொன்னும் தலையெழுத்து இல்ல. நீயே என்னோட பேசாம வந்துட்டா ஒனக்கும் அவனுக்கும் ஊரறிய கல்யாணம்! இல்லன்னா கூக்கினு போய்த் தாலிகட்ட வைப்பேன்." என்றான் கோபமாக.
    'நீ மட்டும் அப்படி செஞ்சா அன்னைக்கே ஓந்தம்பிய கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர ஒந்தம்பி மாதிரியான மிருகத்துக் கூட வாழ மாட்டேன்." கோபமாகச் சொன்னாள்.
    'என்ன சொன்ன?" அவள் கன்னத்தில் அறைந்தான். மீனா நிலை தடுமாறி விழ அங்கே காரின் கைபிடியில் அவள் நெற்றிமோதி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அவள் தன்னைச் சுதாரித்து எழுவதற்குள் சக்திவேல் அங்கே பறந்து வந்துவிட்டான்.
    அவன் இவனை முறைத்துவிட்டு மீனாவைக் கைத்தாங்களாகப் பிடித்துத் தூக்கி 'வா மீனா போலாம்" என்றான்.
    'அவ ஒங்கூட வரமாட்டா.. நீ ஒன்வழிய பாத்துக்கினு போ." வெற்றிவேல் கர்ஜுக்க 'அத சொல்ல நீ யாரு..? வா மீனா போலாம்." சக்திவேல் மீனாவை அவன் பக்கமாக இழுத்தான். மீனா என்ன செய்வது என்றரியாமல் நின்றிருந்தாள்.
    'ஏய்.. சக்தி.. நீ எந்த உரிமையில அவள கூப்புடுற?"
    'அவ என்னோட அத்த பொண்ணு."
    'அத்த பொண்ணா..? அனாத பொண்ணுன்னு சொல்லு. அதுமட்டுமில்ல. அறிவழகி எனக்கும் ஒரு வகையில அத்தை முறத்தான். அந்த வகையில இவ எனக்கும் சொந்தமானவத்தான்."
    'அப்படிபாத்தா கண்மணி எனக்குச் சொந்தமானவன்னா ஒத்துக்குவியா..?"
    இந்தப் பதில் வெற்றிவேலுவின் கண்களைச் சிவக்கவைத்தது.
    'கண்மணிய பத்தி பேசாத! அவள நான் ஊரறிய பரிசம் போட்டு எனக்குன்னு நிச்சயம் பண்ணியிருக்கேன். நீ என்ன இவள ஒனக்குன்னு நிச்சயமா பண்ணியிருக்க? ஒனக்குதான் இருக்காளே அந்தப் பெங்களூர் காரி! அவ போதாதா? ஊருக்கு ஒருத்தி வேணுமா..? பேசாம இவள வுட்டுடு." என்றான் வெற்றிவேல்.
    சக்திவேலின் கண்களில் அதிர்ச்சி! திரும்பி மீனாவின் முகத்தைப் பார்த்தான். அவளும் இவனைக் குழப்பமாகப் பார்ப்பது புரிந்தது. வெற்றி வேலுவைப் பார்த்தான். அவன் சரியான நேரத்தில் சரியான விசயத்தைச் சொல்லிவிட்டோம் என்றத் திருப்தியில் இருந்தான்.
    போட்டி முடியாத பொழுதே ஒரு சிலர் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாமதையில் தோல்வியைத் தெரியாமல் தழுவிவிடுவார்கள். சக்திவேல் சற்று யோசித்தான். பிறகு
    'வெற்றிவேல்.. மீனா எனக்குத்தான் சொந்தம். அச்சாரம் தானே போடணும்? இதோ பார் உன்னோட எதிரிலேயே போடுறேன். நல்லா பாத்துக்கோ."
    சொல்லிகொண்டே தன் பாக்கெட்டிலிருந்தப் பெட்டியை எடுத்து திறந்து அதிலிருந்த மோதிரத்தை எடுத்தான்;
    'மீனா கையைக் காட்டு." அவள் எதுவும் சொல்லாமல் உடனே கையை நீட்ட அந்த மோதிரத்தை அவள் வெண்டைவிரலில் அணிவித்தான்!
    இதை யாரும் எதிர் பார்த்திக்கவில்லை! 'வா.. மீனா போலாம்.." அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.
    வெற்றிவேல் எதுவும் பேசாமல் செய்யாமல் நின்றிருந்தது வேந்தனை வேதனைப்படுத்திக் கண்களில் இரத்தச் சிகப்பேறச் செய்தது.


²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


    சூரியனை மேற்கின் இமை மூட வெளியுலகம் இருளைப் பூசத்துவங்கியது!
    'சக்திவேல்.. வீட்டுக்குப் போனதும் இந்த மோதிரத்தைத் திருப்பி வாங்கிக்கிவீங்களா..?"
    மோட்டார் வண்டியின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தவள் தன் விரலில் இருந்த மோதிரத்தை ஆசையுடன் தடவியபடி சக்திவேலுவிடம் கேட்டாள்.
    அவன் அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தி திரும்பி இவளைப் பார்த்துப் புரியாமல் கேட்டான்.
    'என்ன கேட்ட?"
    'இல்ல.. வீட்டுக்குப் போனதும் இந்த மோதிரத்த திருப்பி வாங்கிக்குவீங்களான்னு தான் கேட்டேன்.."
    'ஏன் இப்படி கேக்கிற?"
    'நீங்க இந்த மோதரத்த எத நெனச்சி போட்டீங்களோ எனக்குத் தெரியாது. ஒரு சமயம் வெற்றிவேலுகிட்டர்ந்து என்ன அந்த நேரத்துல காப்பாத்த கூடப் போட்டிருக்கலாம். இல்ல.. என்னோட அம்மாகிட் சொன்ன மாதிரி கொண்டு போயி வீட்டுல விடணுமேன்னு கடமையில கூடப் போட்டிருக்கலாம். ஆனா நா அதையெல்லாம் நெனைக்கில. இந்த மோதிரத்த நீங்க எனக்குக் கட்டின தாலிக்கி சமமா நெனச்சிட்டேன். அதனால தான்.."
    அவள் கண்களை அகலத்திறந்து கொண்டு வார்த்தையை இழுத்தாள்.
    அவன் இவளை யோசனையுடன் அழுத்தமாகப் பார்த்தான்.
    'அப்படியே நெனச்சிக்கோ. நா கேக்கமாட்டேன்." சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.
    மீனா மோதிரத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்.


                                (தொடரும்)

Tuesday 7 August 2012

போகப் போகத் தெரியும் - 20



   மீனா தன் கோபத்தை வெளியே காட்ட வழியில்லாமல் வார்த்தைகளை நெருப்புத் துண்டுகளாகக் கொட்டினாள். எழுந்தவள் என்ன நினைத்தாளோ சக்திவேலின் அருகில் வந்தாள்.
   'சக்திவேல் இந்த கொலுசுக்கு ஆசப்பட்டோ.. உங்கிட்ட இருக்கிற பணத்து மேல ஆசப்பட்டோ.. நா அந்தக் காளைய அடக்க சொல்லல. இருந்தாலும் என்ன அந்தக் கூட்டத்துல அவமானப்படுத்தாம இந்த கொலுச எடுத்து தந்ததுக்கு ரொம்ப நன்றி. இந்தாங்க உங்க கொலுசு!"
   அவன் கையைப் பிடித்துக் கொலுசுவை அவன் கையில் திணித்தாள். கொலுசெல்லாம் ஒரே இரத்தம்! சக்திவேல் அதிர்ச்சியாக அவள் கையைப்பார்த்தான். காயம் அவளின் துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்தது.
   'யார் அந்த கழுகு..?" சசிதரன் கேட்டான். அவன் இவளின் காயத்தையோ கட்டையோ கவனிக்கவில்லை.
   'எனக்கு அவன் யாருன்னே தெரியாது சசி. ஆனா அவன பாத்தாலே எனக்குப் பயமா இருக்குது. என்னை எப்படியாவது தூக்கிகினுப் போயி தாலி கட்டுவேன்னு சவால் விட்டு இருக்கான்." என்றாள் கவலையாக!
   திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவனும் யோசனையுடன் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதிர்ச்சி சில நேரங்களில் பேச விடாது! அவனைப் பார்த்துச் சொன்னாள்.
   'அவன் மட்டும் அப்படி செஞ்சான்னா.. நடக்கப்போற ஓடத்தூர் தீமிதி திருவிழாவுல அப்படியே அந்த நெருப்புல எறங்கிடுவேன்.." என்று.
   அவள் இப்படி கோபமாகவும் அழுத்தமாகவும் சொன்னது சக்திவேலுவுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
   'நா கௌம்புறேன். அனாதைங்க யார் மேலேயும் அன்பு வைக்கக்கூடாது. அதெல்லாம் அவுங்களுக்கு அருகதையே இல்லன்னு நீங்க எல்லாரும் சேந்து புரியவச்சிட்டிங்க. ரொம்ப நன்றி!"
   சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பாரக்;காமல் நடந்தாள். அவள் போவதை அவர்கள் கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   மீனா கையில் இருந்த கொலுசுவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெள்ளியில் நிறைய சலங்கை கொத்துகள் சேர்த்துச் செய்யப்பட்டிருந்த அது மிக அழகான ஓசையைக் கொடுத்தது.
   நேற்று தன் நண்பர்களைத் திட்டிவிட்டு நேராக டாக்டர் வீட்டிற்குச் சென்று கட்டை மாற்றி ஒரு பேண்டேஜ் மட்டும் போட்டு கொண்டு அவர் கொடுத்த மாத்திரையை விழுங்கிவிட்டு படுத்தவள்தான்! காலையில் தான் கண்விழித்தாள்.
   கண்விழித்ததும் முதலில் தென்பட்டது இந்தக் கொலுசுத்தான்! அவளுக்கு ஆச்சர்யம்! அதே சமையம் சந்தோசம். எடுத்துக் கொண்டு ஓடிப் போய் அறிவழகியிடம் கேட்டாள். 
   'நேத்து ராத்திரி நீ தூங்கிட்ட பொறவு சத்திவேலுவும் அதோட அக்காவும் வந்தாங்க. கூட அந்த ஆறு பசங்களும் தான். நீ நல்லா தூங்கினு இருந்த. சத்திவேல் தம்பிதான் இந்த கொலுச ஒன் தலமாட்டுல வச்சிட்டு போச்சி." என்றாள் அறிவழகி.
   மீனாவிற்குச் சட்டென்று முகம் பூவாகப் பூத்தது.
   'அம்மா.. சக்திவேலுவுக்கு அக்காவா..? அது யாரு..? "
   'அதாமா.. அவருவுட்டுல இருக்குதே கமலா. அந்த பொண்ணுதான். அவருக்கு தூரத்து சொந்தம். பாவம். வெதவ!"
  'என்ன விதவையா..? " கண்கள் அகலக் கேட்டாள்.
   'ஆமா மீனா.. அந்தப் பொண்ணுக்குச் சத்திவேலேட அம்மா தான் கல்யாணம் செஞ்சி வச்சாங்க. ஆனா அந்தத் தேனப்பன்.. அதான் வெற்றிவேலோட அப்பா.. அவன் இந்தப் பொண்ணோட புருஷன ஒரு சண்டையில வெட்டிட்டான். அதுல கோவமான நம்ம சத்திவேலுதம்பி அந்த தேனப்பனோட கால வெட்டிட்டாரு."
   'என்ன சக்திவேலா அப்படி செஞ்சாரு?"
   'ஆமாம்மா. இது ஒரு ஆறேழுவருசத்துக்கு முந்தி நடந்த கத. அப்பெல்லாம் ஒரே வெட்டுகுத்துன்னு தான் இருக்கும். அதுவும் வெற்றிவேலும் சத்திவேலும் நேரா சந்திச்சா ஒரே சண்டத்தான் வரும். இப்போத்தான் மூனு வருஷமா நாம வந்த பொறகு சண்ட சச்சரவு இல்லாம இருக்குதுன்னு ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க."
   'ஏம்மா.. கால வெட்டினாரே.. போலிசு கேசு ஜெயிலுன்னு போவலையா..?"
   மீனா மிரண்டவளாகக் கேட்டாள்.
   'அதெல்லாம் பெரிய எடத்து வௌகாரம். ஊருக்குள்ளேயே பேசி தீத்துக்குவாங்க. வெளிய அவ்வளவா விசயம் போவாது. ஆனா இப்ப அப்டியில்ல. நம்ம சத்திவேலு தம்பி தலையெடுத்துதலேர்ந்து எல்லா புள்ளைங்களையும் படிக்கவச்சி எல்லாரையும் முன்னுக்குக் கொண்டாருது. அவரால இந்த கிராமம் இப்போ எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கு. இந்தக் கிராமத்துல அவரோட பேச்சிக்கி அவ்வளவு மரியாத இருக்குது." சொல்லிவிட்டுத் தன் வேலையைக் கவனித்தாள்.
  
   மீனா இதையெல்லாம் அசைபோட்டவளாய்க் காலையிலிருந்து அந்தக் கொலுசை கையில் வைத்துக் கொண்டே இருந்தாள்.
   எப்படிபட்ட ஆள் அவர்? அவரைப் போய் நேற்று அப்படி திட்டிவிட்டோமே! நம் நிலமை அவருக்கு எப்படி தெரிந்திருக்கும்? சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. யோசித்தாவது இருந்திருப்பார். பாவம் அவர்! அவரைக் கோபமாக நாம் பேசியிருக்கக் கூடாது. கவலை பட்டாள்.
   துப்பிய வார்த்தைகளை ஒரு பொழுதும் விழுங்கிவிட முடியாது தானே..! இனிக் கவலை பட்டு என்ன பயன்? வேண்டுமானால் மன்னிப்பு கேக்கலாம். ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?
   மனிதர்கள் தவறு செய்வது சகஜம் தானே! அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்டுவிட்டால்.. செய்த தவறு இல்லை என்று ஆகிவிடுமா..? இல்லையே..! மன்னிப்பு என்பதால் மறக்கலாம். அவ்வளவு தான்!
   'மீனா.." சேகர் கூப்பிட நிமிர்ந்து பார்த்தாள்.
   'எங்கள மன்னிச்சிடு மீனா.. நேத்து ஒன் நெலமத் தெரியாம நாங்க கோபப்பட்டுடோம்.." கெஞ்சலாகச் சொன்னான்.
   தவறே செய்யாவிட்டாலும் உரிமையுடன் மன்னிப்பு கேட்பது நட்பில் மட்டுமே சாத்தியமாக முடியும் போலும்!
   'பரவாயில்ல சேகர். நானும் தான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன். நீங்களும் என்னைய மன்னிச்சிடுங்க."
   மன்னிக்கும் மனத்தில் கோபம் கரைந்து காணாமல் போய்விடுகிறது. தண்ணீரில் கரைந்த சர்க்கரையைப் போல!
   'மீனா.. ஓடத்தூர்த் திருவிழாவுக்கு வரலையா..? நம்ம ஊருல முக்காவாசி பேர் போயிட்டாங்க. நீ இன்னும் வரலையேன்னு தான் கூப்பிட வந்தேன்."
   'நா வரல சேகர். நீங்க போயிட்டுவாங்க."
   'இல்ல மீனா நீயும் வா. நம்மூர் மட்டுமில்ல. இன்னிக்கி நாலஞ்சி ஊர்காரங்க ஓடத்தூருக்கு வந்து அம்மனுக்குப் பொங்க வச்சிப் படைப்பாங்க. அதுல நம்ம சத்திவேலு அண்ணனுக்குத் தான் மொதல் மரியாத நடக்கும். அதனாலத்தான். நீயும் வா."
   'இல்ல சேகர். எனக்குச் சாமி கும்புடுற பழக்கமே இல்ல. நா எதுக்கு அங்கெல்லாம்? எனக்கு இப்பல்லாம் வீட்டவுட்டு வெளியவரவே பயமா இருக்கு! நீங்கல்லாம் போயிவாங்க. நா வரல." முடிவாகச் சொல்லிவிட்டாள்.
   அவன் போய்விட்டான். அவன் போன ஐந்தாவது நிமிடத்தில் சக்திவேல் அங்கே வந்தான்.
   'என்ன மீனா.. இன்னுமா நீ கௌம்புல? கடைசியா ஒரு வண்டிதான் இருக்குது. அதுல ஒங்கூட வெளையாடுற சின்னபசங்கத்தான் இருக்கானுங்க. சீக்கிறமா கௌம்பு. அத்த இவள சீக்கிறமா கௌப்பிவுடுங்க" என்றான் அதிகாரமாக!
   மீனா பேசாமல் நின்றிருந்தாள்.
   'தம்பி.. அவ வூட்டுலேயே இருக்கட்டும்பா. கையில வேற காயம். சின்னவயசுலேர்ந்து ஏதாவது காயம் பட்டா அவ கொஞ்சம் கோவப்பட்டாலும் காயம் ஆராம ரத்தம் வடியும். அதனால தாம்பா." அறிவழகி தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
   'நா பாத்துகறேங்க. மீனா கௌம்பு. ஊருல யாரும் ஒனக்குத் தொணையாயில்ல. எல்லாம் வயசானவங்கத்தான் இருக்காங்க. உன்ன தனியாவுட்டுட்டு என்னால போவ முடியாது." என்றான்.
   மீனா யோசித்தாள். வேந்தனின் ஞாபகம் வந்தது.
   'சரி நா வர்றேன். ஆனா ஒரு கண்டீஷன்!"
   'என்ன..?"
   'எனக்கு ஏதாவது பிரச்சினைன்னா நீங்க அதுல தலையிட்டு பிரச்சனைய பெரிசு பண்ணக்கூடாது."
   அவன் முறைத்தான். பிறகு சொன்னான்.
   'பிரச்சனை வாய் பேச்சி அளவுல இருந்தா சரி." என்று.
   அறிவழகியிடம் திரும்பினான். 'அத்தை சீக்கிறமா கௌப்பி அனுப்புங்க. உங்க பொண்ண நானே கொண்டாந்து சேக்கறேன். போதுமா..? கோயிலுக்குப் போறோம். பொடவை கட்டி அனுப்புங்க. உங்க பொண்ணு இன்னும் சின்ன பாப்பா இல்ல."
   அதிகாரமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். எந்த நேரத்திலும் எப்படித்தான் சிலரால் அதிகாரமாகப் பேசமுடிகிறதோ..! ஒரு சமயம் இது தான் தைரியம் என்பதா? ஒருவர் தைரியசாளி என்பதால் அவர் குரல் எப்பொழுதுமே ஓங்கி ஒலிக்குமா..?
   யோசனையுடன் இருந்த மகளின் அழகுக்கு மேலும் மெருகூட்டி அனுப்பிவைத்தாள் அறிவழகி.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   குளத்தில் நிற்கும் ஒற்றைத் தாமரையாய் பிரம்புக் கூடையில் பொங்கல் பானை இருந்தது. அதைச் சுற்றி மாவிளக்கையும் தேங்காய் பூ பழம் வெற்றிலை பாக்கு இலை என்று ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே 'தம்பி.. பொங்க வச்சி மாவெளக்கும் செஞ்சாச்சி. கோயிலுக்குள்ள போலாமாப்பா..?" கமலா கேட்டாள்.
   யோசனையுடன் நின்றிருந்த சக்திவேல் 'நீங்க உள்ள போங்க. தோ வர்றேன்" சொல்லிவிட்டுப் பக்கத்தில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தப் பெண்ணிடம் வந்தான்.
   'உங்க வண்டியில தானே மீனா வந்துச்சி?"
   'ஆமாம்பா.. ஏன்..?"
   'எங்க அது?"
   'வண்டிய பாலத்துக்கு அந்தாண்டேயே வுட்டுட சொன்னாகப்பா. நாங்களும் நிறுத்திட்டு நடந்து வந்தோம். மீனா அந்தச் சின்னபசங்க கூடத்தான் இருந்துச்சி. எங்க இன்னும் காணாம்? நா.. பொங்க வைக்கணுன்னு அவசர அவசரமா வந்துட்டன்." யோசனையுடன் சொன்னாள் அவள்.
   சக்திவேல் திரும்பி கண்களைச் சுழலவிட்டான். சற்று தூரத்திலேயே வெற்றிவேல் அவன் குடும்பத்தார் அனைவரும் இருந்தார்கள். அவன் வீட்டு பெண்கள் கும்பலாக பொங்கல் வைத்து கொண்டு கலகலப்பாக இருந்தார்கள்.
   எதிரிகளைக் கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே வைத்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுது தான் பிரட்சனை பெரியதாக வராது!
   ஆனால் யார் எதிரி என்பதைத் தெரிந்திருக்க வேண்டுமே..! சக்திவேல் சற்றுக் குழம்பிப் பின் அருகிலிருந்த ஜீவானந்தத்தை அழைத்து அவன் காதில் எதையோ சொல்ல அவன் தலையாட்டிவிட்டுச் சென்றான். அவனை அடுத்து மாதவன் சேகர் சிவா சசி சரண் அனைவரும் ஒவ்வொரு பக்கமாகச் சென்றார்கள்!
   அடுத்த பத்தாவது நிமிடத்தில் சக்திவேலின் கைபோன் சிணுங்க எடுத்து பேசினான்.
   'மீனா பாலத்துக்கு பக்கத்துல சின்ன பசங்களோட வெளையாடிக்கினு இருக்குது." சரண் தகவல் சொன்னான். 'சரி நீ அங்கேயே இரு. நா வர்றேன்." என்றுச் சொன்னவன் தன் தாயிடம் திரும்பி 'அம்மா.. நீங்க எல்லாரும் கோயிலுக்குள்ள போங்க. நா ஒடனே வந்துடறேன்." என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திருக்காமல் நகர்ந்தான்.
 
   தன் ஈரோவோண்டாவை மீனாவின் பக்கத்தில் நிறுத்தினான்.
   'மீனா கோயிலுக்கு வந்திட்டு இங்க சின்னபசங்களோட வெளையாடுறியா..? வா போலாம்.." முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு சொன்னான்.
   'இல்ல. நா வரல." அவசரமாக மறுத்தாள்.
   'ஏன்..?"
   அவன் கேட்டதும் அவள் கைவிரலால் ஒர் இடத்தைச் சுட்டிக்காட்டினாள். அங்கே பாலத்தின் மறுமுனையில் ஆறுயானைகள்! ஒவ்வொறு பக்கமாக மூன்று மூன்றாக நின்றிருந்தன! அவனுக்குப் புரிந்தது.
   'சரி. தண்ணியில எறங்கி வரவேண்டியது தானே. ஆழம் ஒன்னும் அதிகமா இல்லையே..!"
   'ஆழமில்லத்தான். ஆனா பாம்பு இருக்குமாம். சொன்னாங்க. அப்படியே தண்ணியில எறங்கி தாண்டி போனாலும் வழியிலத்தான் யானைங்க இருக்குது. நா வரலப்பா! எனக்குப் பயமாயிருக்கு. நீங்கல்லாம் சாமிகும்பிட்டு திரும்பி இந்த வழியாத்தானே வரணும்? நா காத்துகினு இருக்கேன். நீங்க போங்க." என்றவளின் கண்களில் பயம் தெரிந்தது.
   பெண்கள் என்றால்.. பல்லி கரப்பான்பூச்சி போன்ற சின்ன சின்ன ஜந்துக்களுக்குத்தான் பயப்படுவார்கள் என்று இல்லாமல்.. யானை பாம்பு போன்றவற்றிர்க்கும் பயந்தால்.. பின்பு எதற்குத்தான் பயப்பட மாட்டார்கள்?
   ஒரு சமயம் ஆண்களுக்கு மட்டும் தான் பெண்கள் பயப்பட மாட்டார்களோ..? சக்திவேல் மனத்துள் சிரித்தது அவன் கண்களில் தெரிந்தது. மீனா அவனை யோசனையுடன் பார்த்தாள்.
   'மீனா.. வந்து வண்டியில ஏறு. நல்லா கண்ணை மூடிக்கோ! நான் அழைச்சிக்கினு போறேன். ம்.. வா" என்றழைத்தான்.
   மீனாவும் அதே போலத்தான் செய்தாள். ஆனால் கிளம்பிய வண்டி சற்று தூரத்திலேயே நின்றுவிட்டது. மனது பக் பக் கென்று அடிக்க மீனா கண்களைத் திறக்காமல் சக்திவேலை இறுக்கக் கட்டிபிடித்துக் கொண்டாள்.
   'டேய்.. யானைகள நகர்த்துங்க.." சக்திவேலின் குரலை யாரும் லட்சியப்படுத்தவில்லை. யானைகள் அவனை வழிமறைத்து நின்று கொண்டிருந்தன.
   சக்திவேல் தன் கைபோனை எடுத்து எண்களை அழுத்த மறுமுனையில் வெற்றிவேல் 'அலோ" என்றான்.
   'வெற்றிவேல்.. உன்னோட ஆளுங்க யானைய வச்சி என்ன வழிமறைக்கிறாங்க. நீ சொல்லி அவனுங்கள வழிவுட சொல்லு." என்றான்.
   'என்னோட ஆளுங்களா..? இருக்காதே.. நா அப்படி செய்யல. எனக்கும் அதுக்கும் சம்மந்தம் கெடையாது." என்றவன் குரலில் அதிக யோசனை இருந்தது.
   'நீ இல்லாட்டி பின்ன யாராம்..?"
   'எனக்குத் தெரியாது. ஆனா.. அந்த யானைங்கள தாண்டி உன்னால வரவா முடியாது?"
   ஒருவனின் பலம் அவனுடைய எதிரிக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும்.
   'நா மட்டும்ன்னா இந்நேரம் வந்திருப்பேன். எங்கூட மீனா இருக்குது."
   'மீனாவா..?" வெற்றிவேல் திரும்பி வேந்தனைப் பார்த்தான். அவன் இன்று காலையில் வந்து அவனிடம் பேசியது ஞாபகத்தில் வந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக அவன் இவனிடம் பேசினான்.
   எப்பொழுதும் பேசுபவரைவிட எப்பொழுதாவது பேசினால் அதற்கு அதிக மதிப்பிருக்கும்.
   வெற்றிவேல் தன் கைபோனை வேந்தனிடம் நீட்டினான்.
   'உன்னோட ஆளுங்கள சக்திவேலுவுக்கு வழிவுட சொல்லு. மொதல்ல பூச முடியட்டும். பெறகு பாத்துக்கலாம்." என்றான்.
   வேந்தன் சற்று முறைப்புடனே போனை வாங்கி யாரிடமோ பேச.. சற்று நேரத்தில் யானைகள் சக்திவேலுவுக்கு வழிவிட்டன.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   பூஜைக்காக நின்றிருந்த நான்கு ஊர் பெரியமனிதர்களும் பார்க்கச் சக்திவேல் மீனாவின் கையைப் பிடித்து கோவிலுக்குள் அழைத்து வந்தான்.
   அவளைத் தன் தாயின் அருகில் நிறுத்திவிட்டு அவனும் அவளுடன் நின்று கொண்டான். எதிர்வரிசையில் நின்றிருந்த வெற்றிவேலுவும் வேந்தனும் மீனாவை வைத்தகண் வாங்காமல் பார்த்தார்கள்!
   ஐயரிடம் சக்திவேல் தன் பாக்கெட்டிலிருந்து சிறிய பெட்டியைக் கொடுத்து அவர் காதில் எதையோ கிசுகிசுத்தான். அவர் தலையாட்டிவிட்டு வாங்கிக்கொண்டு போனார். மீனா நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை. அவளின் பார்வை கவனம் முழுவதும் அம்மனுக்குப் படையலிட வைத்திருந்தப் பொங்கல் கூடையில் இருந்தது.
   காரணம் வெற்றிவேலுவின் பக்கம் கூடையில் இருந்த மாவிலக்கின் தீபம் காற்றால் நன்றாக ஆடி சட்டென்று நின்றுவிட்டது.
   இதைக் கவலையுடன் பார்த்து கொண்டிருந்த மீனா உடனே சென்று திரியை எடுத்து சக்திவேல் வீட்டுக்கூடையில் எறிந்த தீபத்தில் காட்டி தீபமேற்றி அது இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்து காற்று திரும்பவும் அதை அணைத்து விடாதவாறு திருப்பி ஓரமாக வைத்தாள்.
   இந்தச் செய்கையை அனைவருமே பார்த்தார்கள். ஆனால் கமலா தான் திட்டினாள்.
   'ஏய் மீனா.. நீ சும்மா இருக்க மாட்ட? அவுக வூட்டு தீபம் அணைஞ்சாக்கா ஒனக்கென்ன?"
   'அவுங்க வீட்டுதா இருந்தா என்னவாம்? அங்க நம்ம கண்மணிதான் வாழப்போறா..?"
   வெற்றிவேலின் முகத்தில் புன்னகை பூத்தது.
   சக்திவேலுவின் கைபோன் சிணுங்க அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போய் பட்டனை அழுத்தினான். எதிர் முனையில் ஒரு பெண் குரல்!
   'யாரு..? சத்திவேலா..?"
   'ஆமா.. சொல்லு."
   'உங்க ஊருல மீனான்னு ஒரு பொண்ணு இருக்காளாம். அவள இன்னைக்கி கோயில் பூச முடிஞ்சதும் வெற்றிவேல் அவனோட ஆளுங்கள வச்சி கடத்தபோறதா பேச்சி அடிப்படுது. பாத்து நடந்துகோங்க."
    தொடர்பு உடனே அறுந்தது. சக்திவேல் யோசனையுடன் மீனா இருந்த இடத்தை பார்த்தான். அவள் அங்கே இல்லை!
   சற்று தூரத்தில் கோவில் மணியடிக்கும் ஒரு முதியவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
   சக்திவேல் அருகில் இருந்த மாதவனிடம் 'அம்மனுக்கு படையல் முடிஞ்சதும் நம்மூர் காரங்கள ஒடனே ஊருக்கு கௌம்பசொல்லு. கொஞ்ச நேரம் கூட தாமதிக்ககூடாது. எல்லாருக்கும் ஒடனே தெரியபடுத்து." என்றான். மாதவன் யோசனையுடன் தலையாட்டிவிட்டு சென்றான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   பூஜை முடிந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். கோவில் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டு நின்றிருந்த மீனாவிடம் வெற்றிவேல் வந்தான்.
   'மீனா.. குங்குமம் வச்சிக்கோ." உள்ளங்கையில் இருந்த குங்குமத்தை அவளிடம் நீட்டினான்.
   'வேண்டாம் வெற்றிவேல். எனக்குச் சாமி கும்புடுற பழக்கமே கெடையாது. நமக்கு ஏதாவது தேவைன்னு கேட்டுச் சாமி கும்புடுறதும்.. கெடைச்சா.. சாமிதான் தந்ததுன்றதும்.. கெடைக்கலன்னா நமக்கு அதிஷ்டமில்லன்னு சொல்லுறதும்.. எனக்குப் புடிக்கல வெற்றிவேல்." என்றாள்.
   'ஒனக்குப் புடிக்கலன்னாலும் பரவாயில்ல. எனக்காக வச்சிக்கோ."
   'வேண்டாம் வெற்றிவேல். நம்பிக்கயில்லாம வச்சா அதுக்கு மதிப்பு போயிடும்." அவள் மறுத்தாள்.
   'ஏன்..? என்ன அந்நிய ஆம்பளையா நெனைக்கிறியா..?"
   அவன் தன்னை வேண்டுமென்றே வம்பிற்கு இழப்பது புரிந்தது.
   'அப்படி பாத்தா ஐயரும் அந்நிய ஆம்பளத்தானே..! என்ன இப்படி பேசுறீங்க?" முகத்தில் சிரிப்பை வரவழித்தாள்.
   அதற்குள் அங்கே வந்த சக்திவேல் தன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியிலிட்டான்!
   'மீனா.. ஒனக்கு வேணும்ன்னா சாமி நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு நெறைய இருக்குது." என்றவன் 'வா.. போலாம்." என்று சொல்லிக் கொண்டே அவளின் கையைப்பிடித்து அழைத்து கொண்டு சென்றான்.
   வெற்றிவேல் கோபத்துடன் பற்களைக் கடித்தான்.
   வெளியே வந்ததும் அவன் அம்மா இருந்த காரில் ஏறச் சொன்னான். அவளும் உடனே ஏறிக்கொண்டாள். இன்னும் இரண்டு பெண்கள் ஏறக் கார் புறப்பட்டது.
   கொஞ்சம் தூரம் தான் சென்றிருக்கும். அதற்குள் காரின் எதிரில் ஒருவன் வந்து நின்றான். இன்னொருவன் மீனா இருந்த கதவு பக்கமாக வந்து 'மீனா ஒங்கிட்ட வெற்றிவேல் ஐயா பேசணுமாம். வரச் சொல்லி சொல்ல சொன்னார்." என்றான்.
   மீனா என்ன செய்வது என்றறியாமல் சக்திவேலுவின் தாயைப் பார்த்தாள். அவர் காந்தாரியைப் போலக் கண்களை கட்டிக் கொள்ளா விட்டாலும் கண்களை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டாள். மீனா திருதிருவென விழித்தாள். அவளுக்குக் கோவிலில் வேந்தனைப் பார்த்ததிலிருந்து உள்ளம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
   அதற்குள் சக்திவேல் அங்கே வந்தது மனத்துக்குச் சற்று ஆறுதல் அளித்தது. அங்கே இருந்தவன் மீனாவிடம் சொன்னதையே சக்திவேலிடம் சொன்னான்.
   'சரி. நீ போ. மீனா வருவா." அவனை அனுப்பிவிட்டு கார் கதவைத்திறந்து 'இறங்கி போய்ப் பேசு மீனா" என்றான்.

                               (தொடரும்)