Tuesday 4 December 2012

போகப் போகத் தெரியும- 31


      சக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து வந்து காத்திருந்தாள்.
   அவன் வருவதற்கு முன் அவளுடைய நண்பர்கள் வந்து நலம் விசாரித்தார்கள். சக்திவேல் மாடியிலிருந்து இறங்கி வந்தான். மீனாவைப் பார்த்து இலேசாகப் புன்முறுவல்!
   'என்ன மீனா.. இப்போ எப்படி இருக்குது?"
   'ம்.. பரவாயில்லை."
   'நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. வெளியில கொஞ்சம் வேல இருக்குது. நா போயிட்டு வர்றேன்." கிளம்பினான்.
   'சக்திவேல்.. ஒரு நிமிஷம் இருங்க." மீனா சொல்ல நின்றான்.
   'எனக்கு கை வீக்கம் இப்போ நல்லா கொரஞ்சிடுச்சி. அதனால என்னோட மோதரத்த குடுக்கிறீங்களா..?" மெதுவாகக் கேட்டாள்.
   ஏற்கனவே மருத்துவமனையிலிருந்து வரும் போழுது ஒரு முறை கேட்டாள். 'கை காயம் ஆறட்டும்" என்றான். இன்று..
   சற்று யோசித்தவன் தன் பாக்கெட்டிலிருந்து ஊதா நிற காகிதம் சுற்றின மோதிரத்தை எடுத்து நீட்ட அவள் அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள். அதை பார்த்தது தான் தாமதம்! அவன் முகத்திலேயே அதை விட்டெரிந்தாள்.
   அவளுக்கு எப்படி அப்படியானதொரு கோபம் வந்தது? அன்பு அதிகமாக உள்ளவர்கள் மீது தான் அதிகமாகக் கோபித்துக் கொள்ள உரிமை வருமாம். அப்படியான கோபமா..? அல்லது தன்னை ஏமாற்றியதால் தன்னையும் மீறி எழுந்த ஆத்திரத்தின் எல்லையா..? துவக்கமா..?
   துவக்கம் தான். கோபமாக எழுந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து கொண்டாள்.
   'சக்திவேல்.. என்னோட மோதரத்த குடத்துடு. என்னோட உயிரே அதுதான்னு ஒனக்கு நல்லா தெரியுமில்ல. தயவுசெஞ்சி குடுத்துடு. நா ஒனக்கு கெடைக்கலன்னதால.. எனனோட மோதரத்த மறச்சி வச்சி என்ன பழிவாங்காத. என்னோட மோதரத்த குடு.. .."
   உலுக்கினாள். அவன் கல்போல் நின்றிருந்தான். மற்றவர்கள் என்ன செய்வது என்றறியாமல் நின்றிருந்தார்கள்! அகிலாண்டேசுவரி தான் கோபத்துடன் மீனாவின் அருகில் வந்தார்!
   'மீனா.. சட்டைய வுடு மொதல்ல. ஒரு பொண்ணுமாதிரி நடந்துக்கோ." சத்தமாகச் சொன்னாள்.
   மீனா இப்பொழுது அவனை விட்டுவிட்டு இவளை முறைத்தாள்!
   'என்ன சொன்ன நீ..? பொண்ணு மாதிரி நடந்துக்கணுமா? அப்ப நா என்னா பேயா..? ஆமா. பேய் தான். அனாத பேய். என்னோட மோதரம் மட்டும் கெடைக்கலன்னா நா யாரையும் சும்மா வுட மாட்டன். ஏய் கெழவி;;.. நீதான சொன்ன? உம்புள்ளகிட்ட.. அந்த மோதரத்த எங்கிட்டர்ந்து புடுங்க சொல்லி? சொல்லு. ஏன் சொன்ன..? ஒனக்கு நா என்ன பாவம் செஞ்சேன்..? சொல்லு. சொல்லு.. .."
   வழிகள் இரண்டும் பிதுங்க இவளை அழுத்தி உலுக்கினாள். அவள் இடுப்பில் இருந்த வெள்ளை நிற கட்டு சிகப்பானது! அவள் அணிந்திருந்தச் சட்டையை மீறி வெளியே தெரிந்தது. இதை நர்ஸ் கவனித்துச் சக்திவேலிடம் சொல்ல.. அவன் அதிர்ச்சியாகத் தன் நண்பர்களைப் பார்த்தான். அவன் பார்வையில் புரிந்து கொண்ட மாதவனும் சேகரும் மீனாவைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போய் நாற்காலியில் அமர வைத்தார்கள்.
   மீனா மேஜையில் முகத்தைக் கவிழ்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். யாரோ தன் தலையை மெதுவாகத் தடவ நிமிர்ந்து பார்த்தாள். யோகி ரத்தினம்! அவளருகில் அமர்ந்திருந்தார்.
   அன்பானவர்கள் அருகில் வந்ததும் அழுகை அதிகமானது. கண்களைத் துடைத்துக் கொண்டு தேம்பலுடன் அவரைப் பார்த்தாள்.
   'ஐயா.. நா எதுக்காக ஒலகத்துல உயிர் வாழணும்? அனாதையா கெடந்தது என்னோட தப்பா? அம்மான்னு ஒருத்தர் கெடச்சாலும் அனாதயாத்தான வளந்தேன். ;அ ;ன்னுற இனிஜியலுக்கு அனாதைன்னு தான் அர்த்தம்ன்னு சொன்னப்பக் கூட நா கவலப் படல. அப்டி மறுத்து போயிடுச்சி என்னோட மனசு. இருக்கிற வரைக்கும் எல்லாருக்கும் நல்லது செஞ்சே வாழ்ந்திடலாம்ன்னு நெனச்சாலும் அனாதைங்க நல்லது செஞ்சாக் கூட குற்றம்ன்னு நெனைக்கிற ஜென்மங்களும் இருக்காங்களே.. நா என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க. எனக்குன்னு என்னோட பிரண்ஸத் தவர யார் இருக்கா..? நட்புக்காக மட்டும் உயிர் வாழணுமா.. புரியலங்க?"
   மனம் அழ வாய் பேசியது.
   'ஏம்மா இப்படி சொல்லுற? உனக்குன்னு தன்னோட உயிரையும் தர்றதுக்கு உன்னோட சக்திவேல் இருக்காரே.."
   சட்டென்று நிமிர்ந்து முறைத்தாள்.
   'உயிர்? யாருக்கு வேணும் அவரோட உயிர்? ஆஸ்பத்திரியில முடியாம மயங்கி உழப்போனவள தூக்கி பிடிச்சது யாரு..? தலை சுத்தி வாந்தி எடுத்தப்போ.. கையால புடிச்சி தொடச்சிவுட்டது யாரு..? எல்லாமே என்னோட நண்பர்கள் ஆறு பேரும் தான்! அந்த ஆறு பேரும் இல்லன்னா.. இன்னிக்கி நான்.. .."
    பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு அந்த யோசனை!! நிமிர்ந்து தன் நண்பர்களைப் பார்த்தாள். அதில் சிவாவைக் காணோம்! இத்தனை நாளும் அவள் அவனைப் பார்க்கவில்லை. கேட்டதற்கு  ;நீ மயக்கத்தில் இருக்கும் பொழுது வந்தான். முக்கியமான விசயமா வெளியூர் போய் இருக்கிறான் ; என்று சொன்னார்கள். ஆனால்.. அவளுக்கு அந்த யோசனை..!!
   எழுந்து சேகரிடம் வந்தாள். 'சேகர் சிவா எங்க? எங்கிட்ட மறைக்காம உண்மையச் சொல்லு." அதட்டினாள். இரத்தம் கட்டையும் மீறி ஒழுக ஆரம்பித்தது.
   சேகர் கவலையாக ரத்தினத்தை பார்த்தான்.
   'மீனா இங்க வா. நான் சொல்லுறேன்." ரத்தினம் அழைக்க யோசனையுடன் சென்றாள்.
   'மீனா.. அந்தச் சண்டையில சிவாவோட தலையில அடிபட்டுடுச்சி. சின்ன ஆபிரேஷன் செஞ்சி இருக்காங்க. ஆஸ்பத்திரியில இருக்கான். இன்னும் ரெண்டு மூனு நாள்ல வந்திடுவான் " என்றார்.
   நின்றிருந்த மீனா விரத்தியாகச் சிரித்தாள்.
   இது தான் துன்பம் வரும் வேலையில் சிரிப்பது என்பதா..?
   'இன்னும் யார்யாருக்கு என்னன்ன ஆச்சி?.. சொல்லுங்க? "
   'வேற யாருக்கும் எதுவும் இல்லம்மா.." என்றார்.
   மீனா வேதனையுடன் அமர்ந்தாள்.
   'நா அன்னைக்கே சொன்னேன். என்னோட விசயத்துல யாரும் தலையிடாதீங்கன்னு. பாத்தீங்களா..? சிவா இப்ப ஆஸ்பத்திரியில! அந்த வேந்தன் நாய் சொன்னமாதிரி செஞ்சிட்டான்.. அவன.. .." பற்களைக் கடித்துக் கொண்டு எழுந்தாள்.
   'அவன உன்னால எதுவும் செய்ய முடியாதும்மா.."
   யோகி ரத்தினம் அழுத்தமாகச் சொல்ல.. மீனா மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் அவரைப் பயத்துடன் பார்த்தார்கள்.
   'ஏன்..?" மீனா கேட்டாள்.
   'அவன் ஜெயில்ல இருக்கான்."
   அனைவரும் நிதானமாக மூச்சுவிட்டார்கள்.
   'எதுக்கு?"
   'உன்ன கடத்திக்கினு போய்க் கட்டாயத் தாலி கட்டினதுக்காக."
   மீனா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். அவன் தனக்கு தாலி கட்டியிருக்கிறான். அப்படியானால் அவன் தான் தன் கணவனா..? அப்படித்தானே சமுதாயம் சொல்லும். நினைக்கவே சிரிப்பு  வந்தது. ஆனால் வேதனை கலந்து வந்தது.
   'ஐயா.. " நிமிர்ந்து ரத்தினத்தை நோக்கினாள்.
   'என்னம்மா..?"
   'நான் விதவையா..?"
   அவள் மிகச் சாதாரணமாகக் கேட்க.. அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர். யோகிக்கூடச் சற்று யோசித்தார்.
   'ஐயா.. அந்த வேந்தன் தாலின்னு சொல்லி மஞ்ச கயிற் இல்லாத தங்க செயின மந்திரம் ஓத என் கழுத்துல போட்டான். அத அப்பவே கழற்றி எரியிற நெருப்புல போட்டுட்டன். ஆனா சக்திவேல் போட்ட மோதிரத்த தாலியாவே நெனச்சி வாழ்ந்தேன்.  இப்போ அவரே அத கயற்றிக்கினாரு. அடுத்தவன் பொண்டாட்டி கையில தான் போட்ட மோதரமான்னு.. ஆனா நா இப்ப ரெண்டையும் எழந்து நிக்கிறன். அப்படீன்னா நா ஒரு விதவத்தானே..?" என்றாள்.
   'இல்லம்மா. நீ தப்பா புரிஞ்சிக்கினு இருக்கே.. கட்டாயப்படுத்தி கட்டினாக்கா அது தாலி கெடையாது. அது அடிமக் கயிறு. அத நீ அப்பவே அறுத்தெரிஞ்சிட்ட. உனக்கு ஆசையா போட்ட மோதிரத்துக்குச் சொந்தக் காரன் சக்திவேல் இருக்கும் போது நீ எப்படி விதவன்னு சொல்லமுடியும்? "
   'இல்லிங்கையா.. என்னோட மோதிரத்த அவரு திருப்பித்தர்ற வரைக்கும் நா விதவையாத்தான் வளைய வரப்போறேன். இனிமே நா பொட்டோ பூவோ மஞ்சளோ போடப் போறது கெடையாது. "
   கோபமாகச் சக்திவேலை முறைத்தபடிச் சொன்னாள்.
   யோகி ரத்தினம் யோசித்தார். காலத்தின் கட்டாயம் விதிவடிவில் நடப்பதுத் தானே..! எந்தெந்த நேரத்தில் எதுவெது நடக்க வேண்டுமோ.. அதுஅது அந்தந்த நேரத்தில் நடத்திவிடுவது தானே விதியின் சாமார்த்தியம்?
   பயிரைப் பாதுகாக்க வேலி போடலாம். ஆனால் பறவை வந்து கொத்திக் கொண்டு செல்வதில்லையா..? ஆனால் இது மாயப் பறவை! தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்ற உணர்வை மெய்பிக்க வந்த விதிவடிவப் பறவை!
   விதியின் வேகத்தை வேதனையுடன் விழுங்கிவிட்டுத் திரும்பிச் சக்திவேலைப் பார்த்தார்.
   'ஏம்பா..சக்திவேல்! அந்த மோதரத்த கொடுத்திடேன்!" குரலில் கெஞ்சளின் சாயல்!
   வேதனை என்ற புண்ணுக்கு மருந்து போட முடியவில்லை என்றாலும் மேலும் கோபம் என்ற ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்கலாம் என்ற உணர்வுடன் சொன்னார்!
   'என்னங்கையா..? நீங்களே இப்படிக் கேக்குறீங்க? எங்கிட்ட இருந்திருந்தா நா இவள இப்படியா அழ வச்சி வேடிக்கப் பாத்துக்கினு இருப்பேன்? அந்த மோதரம் வெற்றிவேல்கிட்ட இருக்குது. கேட்டதுக்கு.. மோதரத்துக்குண்டான பணத்த தந்துடறேன்னு சொல்றான். அதுமட்டுமில்ல. மீனா அவன் தம்பி பொண்டாட்டியாம். அவள அவன் வீட்டுக்கு அனுப்பிட வேணுமாம்." சக்திவேல் கோபமாகச் சொன்னான்.
   இதைக் கேட்ட மீனா வாயில் கைவைத்து கொண்டு அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளுக்கு அதற்கு மேல் யாரிடமும் பேசவிருப்பமில்லை என்பது போல் எழவும்.. நர்ஸ் அவளை மெதுவாக அழைத்துச் சென்றாள்.


  (தொடரும்)

Monday 26 November 2012

போகப் போகத் தெரியும் - 30

   
     எது எது எந்தெந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்தந்த நேரத்தில் நடந்து விடும்! இது காலத்தின் அவசரமா..? காலத்தின் கட்டாயமா..?
   அவசரமோ.. கட்டாயமோ.. நடப்பது நடந்தே தான் தீரும் என்பதை விதியின் மேல் பழியைப் போட்டு விடலாம்!
   சக்திவேலுவும் அவன் ஊர்காரர்களும் அந்தக் கல்யாண மண்டபத்தில் நுழையும் பொழுது.. கைகளைப் பின்புறம் கட்டப்பட்டு.. வாயைத் துணியால் கட்டி.. இரண்டு பேர் பிடித்திருக்க.. மீனாவின் கழுத்தில் வேந்தன் தாலியுடன் இருந்த தங்கச் சங்கிலியை மாலை போல் அணிவித்தான்!
   வந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நின்று விட்டார்கள். எல்லோருடைய கண்களிலும் மனத்திலும் அதிர்ச்சி!
   மீனாவின் பின்புறம் வெற்றிவேலுவும் லட்சுமணனும் நின்றிருந்தார்கள். தாலிகட்டிவிட்ட வேந்தன் வீராய்ப்பாய்ப் சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பலை கல்யாண மண்டபத்தில் அங்குமிங்கும் மோதி எதிரொலித்தது.
   சக்திவேலைப் பார்த்து ஏளனமாகச் சொன்னான்.
   'டேய் சத்திவேல்.. அன்னைக்கி என்ன செஞ்ச..? இவ கையில மோதரத்த போட்டு இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொன்னயில்ல. இதோ பாரு. நா தாலியே கட்டிட்டன்;. இப்போ என்ன செய்வியாம்? இனிமே இவ என்னோட பொண்டாட்டி."
   மீனாவிடம் திரும்பினான்.
   'ஏய் மீனா.. அன்னைக்கி நீ இன்னா சொன்ன? தாலிய கட்டிட்டு தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல.. தோ தாலிய கட்டிட்டன். போதுமா..? இன்னும் வேற ஏதாவது செஞ்சாத்தான் நா அம்பளன்ன ஒத்துக்குவியா..? டேய்.. இன்னும் ஏன் அவள புடிச்சிக்கினு இருக்கீங்க? கட்ட அவுத்து வுடுங்கடா.."
   மீனாவைப் பிடித்திருந்த இருவரும் கட்டை அவிழ்த்துவிட்டு நகர்ந்தார்கள்.
   மீனா எழுந்து நின்றாள். வாயில் கட்டியிருந்தத் துணியைக் கழற்றினாள். நிமிர்ந்து பெண்புலியைப் போல் வேந்தனைப் பார்த்தாள்.
   'டேய் வேந்தா.. என்னை என்ன பட்டிக்காட்டு பத்தம்பசலின்னு நெனச்சிட்டியா..? நீ கைய கட்டி வாய கட்டி தாலி கட்டிட்டா.. நா ஒனக்கு பொண்டாட்டி ஆயிடுவேன்னு நெனச்சிட்டியா..? நாயே.. இந்தா நீ கட்டுன தாலி.."
   சொல்லிக் கொண்டே கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி.. எரிந்து கொண்டிருந்த அக்னியில் எறிந்தாள்!!!
   அதை அதிர்ச்சியுடன் பார்த்த வேந்தன்.. வேதனையும் கோபத்துடனும் மீனாவை ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். அந்த வேகத்தில் விழுந்த மீனாவின் தலை சுவற்றில் மோதி மயங்கி சரிந்தாள்!!


  கண்விழித்துப் பார்த்த பொழுது அந்த மண்டபமே போர்க்கோலம் பூண்டு இருந்தது. அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளருகில் வெற்றிவேல் சக்திவேலின் கழுத்தைப் பிடித்து இருக்கிக் கொண்டிருந்தான். லட்சுமணன் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான். வேந்தன் சிவாவுடன் கட்டிப்புரன்டு உருண்டு; கொண்டிருந்தான்.
   இரண்டு ஊர்க்காரர்களும் ஒருவரை ஒருவர் கத்தி கம்பு கொண்டு தாக்கிக் கொண்டும் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார்கள்!
   மீனாவிற்குச் சில நொடிகள் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குழப்பத்துடன் பார்த்தாள்! புரிந்த போது அதிர்ச்சியுடன் சக்திவேலை நோக்கினாள். அவன் கண்களில் மிருக வெறி! தன் கழுத்தைப் பிடித்திருந்த வெற்றிவேலின் கைகளைப் பிடித்துத் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் வெற்றிவேல் நிலைதடுமாறி.. எறிந்து கொண்டிருந்த குத்துவிளக்கில் விழப்போனான்!
   கண் இமைக்கும் நேரம் தான். மீனா.. சட்டென்று அவனைத் தடுக்க.. அவன் விழுந்த வேகம்.. கனம் தாங்காமல் அழுத்த.. குத்துவிளக்கின் கூரிய முனை மீனாவின் உள்ளங்கையில் நுழைந்து மேல் புறத்தில் வெளிவந்தது.
   வெற்றிவேல் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டான். மீனா தடுத்திருந்திருக்கா விட்டிருந்தால்;.. குத்துவிளக்கின் முனை அவன் முதுகில் இறங்கியிருக்கும்.
   ஏற்கனவே ஐந்து முகங்களில் எறிந்து கொண்டிருந்த விளக்கு! இரத்தத்துடன் எண்ணையில் பதிந்து கை சுடவும் மீனா வலி தாங்க முடியாமல் கத்தினாள்.
   வெற்றிவேல் சட்டென்று அவளின் கையைப் பிடித்துக் குத்தியிருந்த குத்துவிளக்கை மெதுவாக உருவினான். சக்திவேல் அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த மோதிரம் எண்ணையில் வழுக்கிவிழ வெற்றிவேல் அதை எடுத்து யாருக்கும் தெரியாமல் தன் பாக்கெட்டில் மறைத்தான்.
   இரத்தம் ஊற்றிக் கொண்டிருந்த கையை அங்கே கிடந்த துண்டை எடுத்து கட்டினான் சக்திவேல். அவன் பின்னால் வேந்தன் கையில் பிச்சுவா கத்தியுடன்! மீனா கவனித்துவிட்டாள்! வேந்தன் சக்திவேலை ஆத்திரத்துடன் குத்தவர.. மீனா சக்திவேலை தன் பலங்கொண்ட மட்டும் தள்ளிவிட.. கத்தி அவள் இடுப்புப் பகுதியில் இறங்கியது.
   யாரும் எதிர் பார்க்காமல் நிகழ்ந்தது தான்! ஆனால் இதை விபத்து என்று சொல்லிவிட முடியாது.
   தன்னைக் குத்திவிட்டு இவன் ஏன் கண்களை விரித்து வாயைத் திறந்து கொண்டு.. என்ன இது..? ஏன்..? எதற்காக வேந்தன் இப்..ப..டி..? மீனா சிரமத்துடன் கண்களைத் திறந்து பார்க்க.. வேந்தனின் பின்னால் வெற்றிவேல் குரூர கண்களுடன்..
   மீனா மயங்கிச் சரிந்தாள்!
   
----------------------------------------------------------------------------------------------------------------------
   பண்பாடு என்பது நமது முன்னோர்கள் மற்றவர்கள் சரியான வழியில் வாழ்வை நடத்திச்செல்ல வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட கட்டுப்பாடு!
   ஒவ்வொரு நாட்டிலும் அவர்களின் பண்பாடு அம்மக்களின் மனத்தில் ஊறிப்போன மாற்ற முடியாத உணர்வுக்கூறு. அதை அவர்களால் தனது வழியில் தானே போக முடியாதவாறு இறுக்கிக் கொண்டிருக்கும் இதயத்தின் மௌனச் சங்கிலி;.
   கலாச்சாரமும் பண்பாடும் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்நோக்கிப் போய்க் கொண்டே.. ஆனால் முடிவடைய முடியாத வீழ்ச்சியில் வீழ்ந்து கொண்டே இருப்பது தான்.
   இது தவறு இல்லை. மக்கள் காலத்திற்குத் தகுந்தது போல் சங்கிலியைத் தளர்த்திக் கொண்டு விட்டார்கள். ஆனால் அதைக் கழற்றித் தூக்கிப் போட்டு விட இன்னும் அவர்களுக்குத் தைரியம் வரவில்லை.
   ஆனால் மீனாவிற்கு அந்தத் தைரியம் அப்போழுது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை!
   தமிழ்க் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டது தான் மஞ்சள் கயிறு என்றாலும் அவளுக்கு விருப்பமில்லாமல் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கழுத்தில் கட்டிவிட்டால்.. அது புனிதமாகி விடுமா..?
   புனிதத் தன்மை பொருந்த மந்திரம் ஓதி கட்டப்பட்ட கயிறே.. மனப் பொருத்தம் இல்லாமல் நீதி மன்றத்தில் வாதாடி கழுற்றப் படும் பொழுது.. கட்டாயத்தில் கட்டப்பட்டதை உடனே கழற்றி எறிவது ஒன்றும் தப்பில்லையே..
   ஆனால்.. ஒருமுறை ஒருவன் தாலிகட்டி விட்டாலும் அது திருமணம் தான். தாலியை உடனே கழற்றி எறிந்து விட்டாலும் அவள் திருமணம் ஆனவள் தான்! இப்படித்தான் சொல்கிறது பண்பாடு.. கலாச்சாரத்தில் ஊறிப்போன சமூகம்!
   பாவம்!!
   மனிதர்களுக்குத்தான் இந்தக் கட்டுப்பாடு!
   சிங்கம் மானை அடித்துச் சாப்பிடுவது அதன் சுபாவம். இயற்கை. அதே போல் மான் சிங்கத்திடமிருந்து தப்பித்து ஓடி தன் உயிரை காப்பாற்றிக் கொள்வது மானின் சுபாவம்!
   ஆனால் சிங்கத்தின் வாயில் கடிபட்டுப் பின்பு தப்பித்து வந்தால்.. அது மானின் குற்றமாகிவிடுமா..? இது தவறு என்று மான் இனம் அடிபட்ட மானைத் தள்ளி ஒதுக்கி விடுவது இல்லை!
   மிருகங்களுக்குள் இந்த ஒற்றுமை குணம் இருக்கும் பொழுது மனிதர்களுக்கு இருக்காதா என்ன?
    0      0      0       0       0       0

   மீனா மெதுவாக எழுந்து நடந்து வந்து வராண்டா சோபாவில் அமர்ந்தாள். இடுப்பு மடிப்பில் இருந்த காயம் சிலீரென்று வலித்தது. நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்பதற்குச் சரியான சான்று தான் நம் உடலில் ஏற்படும் வலி!
   இந்த வலித்தான் மீனா நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்று இந்தப் பத்து நாட்களாக அவளுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது.
   மனம் மறுத்துப் போய் இருந்ததால்.. எதையும் அவள் இலட்ச்சியப் படுத்தவில்லை. இது சரியா..? தவறா..? என்ற எண்ணக் குழப்பங்கள் அவளை அலைகழிக்கவில்லை. என்ன நடந்தது? ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? பதிலைத் தேட மனம் ஏங்கவில்லை.
   அவள் மனம் அந்த ஒன்றை மட்டுமே நாடியது! தேடியது! அதற்காகத் தான் அவள் வலியையும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து சோபாவில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள்.
   'மீனா.. நீங்க உயரமான நாற்காலியில உட்காந்தா வசதியா இருக்கும்" அவளைக் கவனித்துக் கொள்ள நியமித்த நர்சு சொல்லவும் திரும்பவும் எழுந்திருக்கச் சிரமப்பட்டுக் கொண்டு அங்கேயே சாய்ந்து உட்கார்ந்தாள்.
   இந்தப் பத்து நாட்களில் இரண்டு முறைதான் சக்திவேலுவைப் பார்க்க முடிந்தது. மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து கண்விழித்த போது.. அதோடு இரண்டு நாட்களுக்கு முன் டிச்சார்ஜ் ஆகி அவளை அழைத்துக் கொண்டு வந்த போழுது. அவ்வளவு தான்!
   நடுவில் இருந்த நாட்களில் மருத்துவமனையில் அவளுடன் கூடவே இருந்து உதவியவர்கள் அவளுடைய நண்பர்கள் மட்டுமே.. உண்மையான நண்பர்களைச் சோதனையான நாட்களில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்ற கூற்றின் படி அவள் தன் நண்பர்களின் உண்மையான அன்பை நன்றாகப் புரிந்து கொண்டாள்!
   மருந்துக்குக் கூட ஓர் ஊர்காரப் பெண்ணும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. இதற்காக அதிக வேதனை அவள் மனத்தை வேக வைத்திருந்தது.!
   கஷ்டத்தில் கை கொடுப்பவர்கள் நண்டர்கள் என்றால்.. விலகி இருப்பவர்களை விரோதி என்று எண்ணிவிட முடியுமா? அவளுடைய துன்பத்தைக் காணப் பொருக்காமல் மனத்தால் கலங்கிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்!
   அப்படிச் சொல்லிக் கொண்டு தான் அவளைப் பார்க்க ஊர் மக்கள் அனைவரும் வந்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார்கள். மீனா யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை.  அதிலும் அகிலாண்டேசுவரி அம்மாள் வந்த பொழுது.. மீனா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. சற்று நேரம் பேசாமலேயே அவளருகில் அமர்ந்திருந்தவர்.. பேசாமலேயே எழுந்து போய் விட்டார்!
   ஆனால் அறிவழகியிடம் அவளால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. கோபம் மனத்தில் இருந்தாலும் கண்கள் கருணையைத் தான் கக்கியது.
   ஆனால் சக்திவேல்..?
   'இப்போ எப்படி இருக்கு மீனா.." என்று கேட்க மாட்டானா.. என்று ஏங்கியது மனம்.
   அதனால்; அவனை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து வந்து காத்திருந்தாள்.
   அவன் வருவதற்கு முன் அவளுடைய நண்பர்கள் வந்து நலம் விசாரித்தார்கள். சக்திவேல் மாடியிலிருந்து இறங்கி வந்தான். மீனாவைப் பார்த்து இலேசாகப் புன்முறுவல்!

                                (தொடரும்)

Tuesday 20 November 2012

போகப் போகத் தெரியும் - 29



   சாலை விளக்குகள் இருட்டுக்கு வர்ணம் பூச முயன்று தோற்று போயின. விளக்கிற்கு அடியில் மட்டும் வெளிச்சத் தீவுகள்!
   வழியில் சக்திவேல் தன் வண்டியில் சாய்ந்த படி நின்றிருந்தான். மணி பத்துக்கு மேல் இருக்கும். இந்த நேரத்தில் இவர் இங்கே எதற்காக..? மீனா யோசனையுடன் அவனைத்தாண்டி நடக்க.. அவன் அவளின் எதிரில் வந்து வழி மறித்து நின்றான்.
   'மீனா.. நா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்."
   'மணியாயிடுச்சி. காலையில பேசலாமே.." வார்த்தைகள் சாதாரணமாக வர மிகவும் முயற்சி செய்திருந்தாள்.
   'ஏன்.. அவனுங்ககிட்ட மட்டும் பேசுவ. எங்கிட்ட பேசக்கூடாதா..?"
   'அவங்க எல்லாம் என்னோட ப்ரென்ஸ்"
   'அப்ப நானு..?"
   'நீங்க எனக்குப் படிக்க ஒதவி செய்றவரு. அவ்வளவு தான்." அவளின் பதில் அவனை கோபமாக முறைக்கச் செய்யவும் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.
   'மீனா.. என்ன பாரு.." அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
   'மீனா.. நான் உன்ன விரும்புறேன்.. ஐ லவ் யுமா" என்றான் குரலை மென்மையாக்கிக் கொண்டு.
   மீனாவின் முகத்தில் விரத்தியான புன்னகைப் பூத்தது. அவன் கையை எடுத்துவிட்டு எச்சிலைக் கூட்டி விழுங்கினாள். பிறகு சொன்னாள்..
   'சக்திவேல்.. நீங்க ஒருநாள் சொன்னீங்க. அழுகைக்கூட ஆறுதல் கிடைக்கிற இடத்துல அழுதால் தான் அதற்கு மரியாதைன்னு. அதே மாதிரித்தான் காதலும்! உங்க தகுதிக்குத் தகுந்தவளா பாத்துக் காதலியுங்க. உங்க காதல் நிச்சயம் கைகூடும். என்னை மாதிரியான அனாதை எல்லாம் அதுக்குத் தகுதியில்லதவள் சக்திவேல்." என்றாள்.
   'அப்போ.. சக்திவேலத்தான் கட்டிக்குவேன்னு ஊரெல்லாம் சொன்னது காதல் இல்லையா..?"
   'அது காதல் இல்லை. மத்தவங்ககிட்டர்ந்து என்ன காப்பாத்திக்க நானே எனக்குப் போட்டுக்கின வேலி."
   'ஆனா நா ஒங்கிட்ட அப்படி நெனச்சி பழகுலையே.. உன்னை என்னுடையவள்ன்னு நெனச்சித்தானே ஆசய வளத்து வச்சிருக்கேன். என்ன புரிஞ்சிக்கோ மீனா." குரலில் கெஞ்சலின் சாயல் ஒலித்தது.
   'மன்னிச்சிடுங்க சக்திவேல். எனக்கு அந்த மாதிரியான எண்ணம் என்னோட மனசுல வரல. நா கௌம்புறேன்." கிளம்பினாள்.
   'நில்லு." அவன் கோபமாகச் சொல்ல நின்றாள்.
   'மீனா.. ஒனக்கு நான் வேணான்னா.. நான் போட்ட மோதிரத்தை திருப்பிக் குடுத்துடு. " கையை நீட்டினான்.
   மீனா அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள். இவ்வளவு நேரம் மனத்தில் பேசி வைத்ததைப் பேசியாகிவிட்டது. ஆனால் அவன் மோதிரத்தைத் திருப்பிக் கேட்பான் என்று கொஞ்சமும் அவள் எதிர்பார்க்கவில்லை.  என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றுவிட்டாள்.
   அவளின் மௌனம் அவனை யோசிக்க வைத்தது.
   'மீனா.. கற்பனையில் சாப்பிட்டால் பசி போவாது. நான் போட்ட மோதிரம் ஒனக்குத் தாலியாவாது. நிஜத்துக்கு வா மீனா.." என்றான்.
   மீனா வெறுமையாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்.
   'சக்திவேல் நிஜவாழ்க்கையில நா நெனச்சத சாப்பிட முடியாது. மோதிரம் தாலி இல்லத்தான். சில நாடுகள்ல தாலிக்கி பதில் மோதிரம் தான் அணியிறாங்க. எனக்கு இந்த மோதிரமே போதும். இத மட்டும் கேக்காதீங்க. இதையும் இழுந்தா.. என்னோட உயிரே போயிடும். என்ன புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.."
   கண்கலங்கச் சொன்னவள் அவனைத் தாண்டி நடந்தாள்!

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   பூக்களில் படிந்திருந்த பனித்துளியைச் சூரியன் யாருக்கும் தெரியாமல் உரிஞ்சினான்!
   'தம்பி.. எழுந்திரிப்பா.. மீனாவ காணோம். எங்கப் போனான்னு தெரியல.."
   கமலா பதட்டத்துடன் எழுப்ப சக்திவேல் சட்டென்று எழுந்தான். இரவு வெகு நேரம் வரை தூங்காமல் படுத்திருந்தவன் விடிந்த பிறகு தான் கண்ணயர்ந்து இருப்பான். கண்களைக் கசக்கிக் கொண்டு கேட்டான்.
   'என்ன சொல்ற நீ?"
   'மீனா எப்பவும் காலையிலேயே எந்திரிச்சிடும். காபிய குடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கும். ஆனா இப்ப காணோம். நேத்துக் கொண்டாந்த பைக் கூட இங்கத்தான் இருக்குது." என்றாள்.
   'சரி. நல்லா தேடி பாரு தோ வர்றேன்."
   அவன் மாடியிலிருந்து இறங்கும் பொழுது யோகி ரத்தினம் அவசரமாக வந்தார். தலையில் கைலித்துணியால் கட்டுப் போடப்பட்டு இருந்தது. அவர் யார் வீட்டிற்கும் போவது கிடையாது. சக்திவேல் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் பார்த்தான்!
   'தம்பி. நேத்து கூட்டம் முடிஞ்சதும் மீனா எங்கிட் வந்து மனசு சரியில்ல. மனம் அமைதியா இருக்க எனக்கு யோகாசனம் கத்துத் தர்றீங்களான்னு கேட்டா. நானும் இன்னைக்கி காலையில வா. சொல்லித் தர்றேன்னு சொன்னேன். அதே மாதிரி அஞ்சி மணிக்கெல்லாம் வந்துட்டா. நானும் சில மூச்சி பயிற்சி சொல்லி குடுத்தேன். அப்போ வேந்தனும் வெற்றிவேலோட ஆளுங்களும் வந்து என்ன அடிச்சி போட்டுட்டு மீனாவ தூக்கிக்கினு போயிட்டங்கப்பா. நா மயக்கமாயிட்டேன். கோயிலுக்கு வந்தவுங்க தண்ணித்தெளிச்ச பிறகுத்தான் விழிப்பு வந்துச்சி. அதாம்பா ஓடியாந்தேன். என்னால தடுக்க முடியலப்பா.." பதட்டத்துடனும் கவலையுடனும் சொன்னார்.
   சக்திவேல் ஒருநிமிடம் யோசித்தான். போனை எடுத்து எண்களை அழுத்தினான்.
   பேசினதில்.. 'இன்று வேந்தனுக்கும் மீனான்னுற பொண்ணுக்கும் ஓடத்தூர் எல்ல காளியம்மன் கோயில் மண்டபத்துல கல்யாணம் நடக்க இருக்குது. அவசர கல்யாணம். ஆம்பளைங்க மட்டும் தான் கல்யாணத்திற்கு போய் இருக்காங்க. இந்நேரம் கல்யாணம் முடிஞ்சி இருக்கும்" ஓடத்தூர் பெண் தகவல் சொன்னாள்.
   இந்தச் செய்தியைக் கேட்டதும் கண்கள் சிகப்பேற அரிவாலுடன் புறப்பட்டான் சக்திவேல்.
   அவன் பின்னால் அவனூர் மக்கள்!
                              
  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   எது எது எந்தெந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்தந்த நேரத்தில் நடந்து விடும்! இது காலத்தின் அவசரமா..? காலத்தின் கட்டாயமா..?
   அவசரமோ.. கட்டாயமோ.. நடப்பது நடந்தே தான் தீரும் என்பதை விதியின் மேல் பழியைப் போட்டு விடலாம்!
   சக்திவேலுவும் அவன் ஊர்காரர்களும் அந்தக் கல்யாண மண்டபத்தில் நுழையும் பொழுது.. கைகளைப் பின்புறம் கட்டப்பட்டு.. வாயைத் துணியால் கட்டி.. இரண்டு பேர் பிடித்திருக்க.. மீனாவின் கழுத்தில் வேந்தன் தாலியுடன் இருந்த தங்கச் சங்கிலியை மாலை போல் அணிவித்தான்!
   வந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நின்று விட்டார்கள். எல்லோருடைய கண்களிலும் மனத்திலும் அதிர்ச்சி!

                            (தொடரும்)

Friday 26 October 2012

போகப் போகத் தெரியும் - 28


   கூட்டம் கலை கட்டியது! ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகப் பேச.. கடைசில் இந்த வருடம் எட்டாம் வகுப்புவரை இருந்த பள்ளியைப் பத்தாம் வகுப்பு வரையில் அதிகப்படுத்துவதாக முடிவானது.
   மீனா எதுவும் பேசாமலேயே அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள். கடைசியில் சக்திவேல் தான் கேட்டான்;
   'மீனா.. இந்த முடிவுக்கு நீ என்ன சொல்லுற?" என்று.
   'உங்க ஊருக்கு எது சரியோ.. அதன்படி செய்யிங்க." அவளின் இந்த அலட்சியப் பதில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
   'ஏன்.. இந்த ஊருமேல ஒனக்கு அக்கரை இல்லையா..?"
   'அக்கர எல்லாம் இருக்குத்தான். ஆனா என்னோட விருப்பத்த சொல்ல எனக்கு அறுகத இருக்குதான்னு தான் தெரியல."
   'மீனா.. இது பொதுக் கூட்டம். இங்க தனிப்பட்ட விசயம் எதுவும் பேசக்கூடாது. அறுகத இல்லாதவங்கள நாங்க கூட்டத்துக்கு கூப்பிட வேண்டிய அவசியம் கெடையாது. நீ இந்த ஊருல பல விசயங்கள எடுத்துக் காட்டி நல்லது நடக்க ஒதவியா இருந்திருக்கிற. அதுக்காகத்தான் ஒங்கிட்ட அபிப்பிராயம் கேட்டோம். இப்ப சொல்லு. இந்த முடிவு சரியா? இல்லையான்னு.."
   கணேசன் கோபமாகச் சொன்னான். சட்டம் பேச வேண்டிய நேரத்தில் பேசித்தானே ஆக வேண்டும்.
   'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க." நிதானமாகச் சொன்னாள்.
   'ஏன்..?"
   'நீங்க ஆம்பளைங்க. உங்களோட பிரச்சனைங்க வேற. எங்களோட பிரச்சனைங்க வேற. எட்டாங்கிளாசு வர கிராமத்துல படிச்சாலும்.. பிறகு டவுனுக்குப் போய்ப் படிக்கும் போதே நெறைய மாற்றங்கள். படிப்பிலேயும் சரி. போய்வரும் பாதையிலும் சரி. சிறுவயசா இருக்கும் போது அது எங்களுக்குப் பெரிசா படாது. ஆனா.. பத்தங்கிளாசு முடிச்சிட்டுப் படிக்கக் கிராமத்த விட்டு டவுனுக்கு  போவும்போது வயசுவந்த பொண்ணுங்களுக்கு நெறைய சிரமங்கள் இருக்குது. தவர இந்த ஊருல ஒம்பது பத்துப் படிக்க நெறைய பேர் இல்ல. அதனால பத்தம் வகுப்பு வர பெரிசுபடுத்த அவசியம் இல்ல."
    அனைவரும் அவள் பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள். அவளே தொடர்ந்தாள்.
   'ஆனா.. இதையே வேற மாதிரி யோசிக்கலாம். சின்னதா ஒரு கம்பியூட்டர் சென்டர் தொறக்கலாம். இதனால மாணவர்கள் என்றில்லாமல் நம்ம ஊர்ல படிச்ச பொண்ணுங்களுக்கும் கத்துத் தரலாம். இதுக்குன்னு ஆளு வக்கவேண்டிய அவசியம் இல்ல. ஏற்கனவே கத்துக்கினு இருக்கிறவங்க மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். இன்டர்நெட் போட்டுட்டா.. கம்பியூட்டர் இருந்த எடத்திலேர்ந்தே உலகத்தைப் பாக்க முடிஞ்ச ஓரு அருமையான சாதனம்! இப்படி செஞ்சா மாணவர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருமே பயனடையலாம்."
   எழுந்து நின்று சொன்னவள் அமர்ந்தாள். ஒரு பெண் எழுந்தாள்.
   'ஆமாண்ணா.. நா டவுனுல தான் பத்தாவது படிக்கறேன். ரெண்டு வருஷமா பஸ்சுல போய்வரதால டவுன் எனக்குப் பழகி போயிடுச்சி. மீனா அக்கா சொன்னமாதிரி செஞ்சா எங்களுக்கும் வசதியா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சி அங்கேயே கத்துகறத விட இங்க இருந்தா எங்களுக்கு வசதியா இருக்கும். நேரமும் மிச்சம்." என்றாள்.
   'அப்போ பள்ளிக்கூடத்த பெரிசு படுத்த வேணாங்கிறிங்களா..?"
   'வேணாங்கில. இந்த வருஷம் வேணாம். பிறகு பாத்துக்கலாம்." மீனா சொல்ல எல்லோருமே இதையே ஆதரிக்க இதுவே முடிவானது.
   'சரி. வேற ஏதாவது சொல்லணும்ன்னா சொல்லலாம்." சக்திவேல் சொல்ல மீனா கை தூக்கினாள்.
   'என்ன சொல்லு?"
   'உங்க ஊருல ஆத்துக்கு வடபுறமா.. பக்கத்து கிராமத்துக்கு ஓரத்துல இருக்கிற நெலம் உங்களுக்கு சொந்த மானது தானே..?"
   அவள் இப்படி கேட்க.. அவள் அருகில் அமர்ந்திருந்த சேகர்.. 'உங்க ஊருன்னு ஏன் சொல்லுற. நம்ம ஊருன்னு சொல்லு." கடுகடுப்பாகச் சொன்னான்.
   'நம்ம  எடந்தான். அதுக்கென்ன..?" சக்திவேல் கேட்டான்.
   'ஏன் அந்த எடத்த தரிசாவே வச்சிருக்கீங்க?"
   'அது ஊருக்கு ரொம்ப தொலைவுல இருக்கு. அது மட்மில்ல பக்கத்தூருகாரனுவ ஏதாவது பிரச்சன பண்ணுவானுங்க. சரியா கவனிக்க முடியாது. ஆத்தோரத்துல இருக்குது. லேச செம்மண் கலந்த நெலம்." என்றார் ஒரு பெரியவர்.
   'இருந்தா என்ன? மண்ண கொஞ்சம் கொண்டு போயி மண்வள ஆராய்ச்சி காரங்க கிட்ட கொடுத்தா அவங்க ஆராஞ்சி பாத்து அந்த நெலத்துல என்ன உரம் சேத்தா என்ன தன்ம வரும். என்ன பயிர் செய்யலாம்ன்னு சரியா சொல்லிடுவாங்க. தரிசா தானே கெடக்குது. ஏதாவது மரம் வச்சா பிறகு பயனாவும் இல்லையா..? இப்போத்தான் விவசாயத்துக்கினு எவ்வளவோ நவீன கருவிங்க வந்திடுச்சே.. நீங்க ஏன் அந்த நெலத்த உங்க ஒழைப்பால மதிப்பாக்கக் கூடாது? தரிசா இருக்கிற வரைக்கும் அது வெறும் மண்ணு தான். உழைச்சா அதுக்கு மதிப்பு வந்திடும் இல்லையா..?" கேட்டாள்.
   அங்கிருந்தவர்கள் இதை அசை போட்டபடி சக்திவேலைப் பார்த்தார்கள்.
   'இதுவும் நல்ல விசயம் தான். இதுக்கான முயற்சிய நாங்க கூடிய சீக்கிரம் தொடங்கறோம். ரொம்ப நன்றி மீனா.' என்றான்.
   கூட்டம் கலைந்தது. மீனா யோகி ரத்தினத்திடம் பேசிக் கொண்டு இருந்தாள். ஒரு சிறுவன் வந்து அவளிடம் சொன்னான்.
   'அக்கா.. உன்னோட ப்ரென்சுங்க உன்ன வர சொன்னாங்க."
   'ம். தோ வர்றேன்னு சொல்லு."
   அவனை அனுப்பிவிட்டு ரத்தினத்திடம் பேச வேண்டியதைப் பேசிவிட்டு நண்பர்களைத் தேடிச் சென்றாள்.
   மனத்தில் சந்தோசத்தை உணர்ந்தாள். நண்பர்கள் சந்தோஷத்தை மட்டுமல்ல. துன்பத்தையும் பங்கு போட்டுக் கொள்பவர்கள் தானே..!
   உண்மையான நட்பு தன்னுடைய துன்பத்தைச் சொல்லி அவர்களையும் துன்பத்தில் தள்ளிவிடக் கூடாது என்று நினைப்பது தான்! 
   மீனாவும் நினைத்துக் கொண்டாள்.. தனது துன்பம் தன்னுடனே இருக்கட்டும் என்று!
   ஆனால்.. உடுக்கை இழந்தவன் கை போல தானாகவே வந்து உதவுவது தான் உண்மையான நட்பு என்பதை மறந்து விட்டாள் போலும்!!

  
   வானத்திற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் இன்;று குருடாகத்தான் இருந்தது. கழுவிவிட்ட கரும்பலகையைப் போல. ஒரு விமானம் மின்மினிப் பூச்சியாகப் பறந்து கொண்டிருந்தது.
   மீனா பள்ளிக்கூட வகுப்பில் நுழைந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். ஆறு பேரும் இருந்தார்கள். யார் முகத்திலும் சிரிப்பு மருந்துக்கும் இல்லை! அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கவும் இவளே பேச ஆரம்பித்தாள்.
   'என்ன..? எல்லாரும் நல்லா இருக்கிறீங்களா..?"
   'நாங்க நல்லா இருக்கிறது இருக்கட்டும். நீ ஏன் இப்படி மாறி போன?" சேகர் கேட்டான். கோபம் இருந்தாலும் நிதானமாகப் பேசினான்.
   'மீனா ஒனக்கு என்னப் பிரச்சனை..? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு." இது ஜுவானந்தம்.
   'ஏன் எங்கள விட்டு விலகிப்போக நெனைக்கிற..?" இது சசிதரன்.
   மீனா பேசாமலேயே அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் இலேசாகக் கலங்கத் துவங்கின.
   'மீனா இதுக்கெல்லாம் பதில் சொல்லலைன்னாலும் பரவாயில்ல. ஆனா இந்த ஒரேயொரு கேள்விக்கி மட்டும் பதில் சொல்லு. நீ சக்திவேலை விரும்புறியா..? இல்லையா..?" சரவனன் அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான்.
   'இல்லை சரண். எனக்கு அந்தத் தகுதியில்ல!"
   நிதானமாகச் சொன்னாள். அனைவருக்கும் அதிர்ச்சி!!
   'என்ன சொல்லுற நீ..?" சிவா கோபத்தோடு கேட்டான்.
   'ஆமா சிவா. சக்திவேல் இந்த ஊருக்கே நிழல் தர்ற பெரிய மரம். நாமெல்லாம் அதோட நெழல்ல தங்கி இளைபாறிவிட்டு போயிடணுமே தவிர.. அங்கேயே தங்கிட நெனைக்கக்கூடாது. அந்த மரம் தர்ற நெழலுக்கும் பழத்துக்கும் நம்மால பதில் உதவி செய்ய முடியாது சிவா. அதுவும் நா அந்த நெழல்ல நின்னு அதுக்குக் கொடக்கூலி கேட்டுத் தரத் தகுதியில்லாததால என்ன வெளியில இல்லயில்ல. வெய்யிலுல தள்ளி விடுறவங்களும் இருக்காங்க சிவா.." குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
   'யார் உன்ன அப்படி செஞ்சது?" கோபமாகக் கேட்டான் சரவணன்.
   'யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு எல்லாருமே வேணும். ஆனா எனக்குத்தான் யாருமேயில்ல."
   'மீனா.. நீ இப்படிப் பேசக்கூடாது. நா இருக்கறேன். நீ சரின்னு ஒரு வார்த்தைச் சொல்லு. நா ஒன்ன என்னோட சகோதரியா சட்டபடி ஏத்துக்கறேன். நான்னு இல்ல. எங்க ஆறு பேரையும் உன்னோட உறவா ஏத்துக்கோ." அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சளாகச் சொன்னான்.
   மீனா அடக்கிய கண்ணீர் ஆறாக இறங்கியது. கையை அவன் கையிலிருந்து உருவினாள்.
   'வேணாம் சரண். ஒனக்கு ஒன்னு தெரியுமா? சின்ன வயசுல நா யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாக்கூட அனாத நாயே.. நானா ஒனக்கு அம்மா..ன்னு திட்டுவாங்கித் திட்டுவாங்கியே.. நா யாரையுமே அம்மா அண்ணன் அக்கா மாமான்னு ஒறவுமொற வச்சி கூப்பிடறது கெடையாது. அது பழகிடுச்சி! பெரிசா படல. ஆனா என்ன வளத்தவங்களே.. என்ன அனாதைன்னு சொன்ன அந்த நிமிஷமே நா செத்துப் போயிடN;டன் தெரியுமா..?
   ஆனா சரண்.. எனக்கு இந்த உறவு முறையவிட நீங்க ஆறு பேரும் பெருசா தெரியிறீங்க! உங்கள என்னோட அம்மா.. அப்புறம் சக்திவேலு இவங்களல்லாம் விட உயர்ந்த எடத்துல வச்சிறுக்கிறேன். உங்க ஆறுபேரோட நட்பு என்னோட கடைசி நிமிஷ உயிர் இருக்கிற வரைக்கும் நீடிச்சி இருக்கணும். நா எதையுமே மனசால ஆசப்பட்டது கெடையாது. ஆனா இந்த ஆசய நீங்க நிறைவேத்தணும்.
   என்ன பொருத்தவரைக்கும் தாய்பாசம் காதல் இதவிட நட்பு சிறந்தது. இன்னைய நிலையில நீங்க மட்டும் தான் எனக்கு இருக்கிறீங்க. உங்கள நா எந்த விதத்துலேயும் எழக்க விரும்பல."
   'எதுக்காக இழந்துடுவேன்னு நெனைக்கிற?"
   'நா காலேஜுப்ரோகிராம் முடிச்சிட்டு வந்த அன்னைக்கி அந்த வேந்தன் என்ன வழிமறிச்சிக் குடி போதையில என்னன்னமோ சொல்லித் திட்டினான். அவன் உங்க ஆறு பேரையும் சக்திவேலையும் சாகடிக்காமட விடமாட்டேன்னு சொன்னான். அவன நெனச்சாலே எனக்கு பயமா இருக்குது. அதனால தான் முடிவெடுத்தேன். என்னால இந்த ஊருல யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு.
   சக்திவேல் என்னை விரும்பரார்ன்னு எனக்குத் தெரியும். ஆனா வேந்தனும் என்னதான் கட்டிக்குவேன்னு சொல்லி மெறட்டுறான். இந்தப் பிரச்சனையில நா உங்களையோ சக்திவேலையோ எழக்க  முடியாது! அது மட்டுமில்ல. எனக்காக யாரும் எந்தப் பிரச்சனையிலும் தலையிடக் கூடாது. பிரச்சனைன்னு வந்தா.. நானே அத போக்கிக்க முயற்சி பண்ணுறேன்;. நா டவுனுல இருக்கிற வரைக்கும் அவனால எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனா இங்க வந்தாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு.
   அதனாலத்தான் சொல்றேன். எனக்காக யாரும் வராதீங்க. இது தான் நா உங்ககிட்ட வேண்டி கேட்டுக்கிற உதவி! தயவு செஞ்சி என்னோட வழியில என்னை விட்டுடுங்க." கைகூப்பி சொன்னாள்.
   ஆறு பேருமே அவள் செய்கையை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். மீனா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தாள்.
                           (தொடரும்)                     
      

Tuesday 23 October 2012

போகப் போகத் தெரியும் - 27



   நேற்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டபடி மீனா தன் உடமைகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்;. நேற்றைய நிகழ்ச்சிகள் இன்று ஞாபகாத்தங்களாகி விடுகிறது.  இப்பொழுது என்பதும் அந்த நொடியிலேயே ஓடி விடுகிறது. அப்படியானால் காலத்திற்குத் தான் எத்தனை கால்கள்?
   மீனா அனைத்தையும் அடுக்கிவிட்டு நிமிர்ந்தாள். அப்பொழுது அங்கே சக்திவேல் இல்லை. அவளுக்குத் தெரியும்! இந்த நேரத்தில் நிச்சயமாக அவன் வீட்டில் இருக்கமாட்டான் என்று!
   கமலா தான் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மீனா எதையோ தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தாள். சிறிது நேரம் கழித்து மாடிக்குப் போனாள்.
   அவள் இப்பொழுது இங்கே வந்தது இதற்குத்தானே..!
   எப்படியாவது சக்திவேலின் ஒரு புகைப்படத்தையாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அவளது எண்ணம்!
   மாடியில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது அவனது படம் இருந்ததைப்  பார்த்திருக்கிறாள்.  அது தான் இப்பொழுது அவளுக்கு வேண்டும்.
   சட்டத்திலிருந்து மெதுவாக அவன் படத்தை உருவினாள்.
   என்ன அதிசயம்!!
   படத்திற்குள் படம்! அதுவும் மீனாவுடையப் படம். கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்திருக்க வேண்டும். சிகப்புச் சராரா உடையில் இருந்தாள். அவளின் படத்தை அங்கே பார்த்ததும் மனம் படபடப்பாகியது. சட்டத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு அருகில் இருந்த புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை உருவி அதனுள் எடுத்தப் படத்தை வைத்து கொண்டு கீழிறங்கினாள்.
   மனம் பட்டாம்பூச்சியாகப் பறந்தது. சந்தோஷம் முகத்தில் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. மறைக்க முயன்றாள். முடியவில்லை. கமலா தன்னை வினோதமாகப் பார்ப்பதை போல் உணர்ந்தாள். அவள் தன் முகத்தைப் பார்க்காதவாறு திருப்பிக் கொண்டாள்.
   தனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு அகிலாண்டேசுவரி அம்மாள் எதிரில் வந்து நின்றாள்.
   'சக்தியம்மா.. நா கௌம்புறேன்;.." அவளின் முகத்தை பார்த்து மெதுவாகச் சொன்னாள்.
   'ம்..ம்.. சரி சரி போ. திரும்பி அடிக்கடி வராத. எம்மகன ஒன்னோட அழகக் காட்டி மயக்கிடலாம்ன்னு மட்டும் நெனைக்காத. அவன் ஒன்னமாதிரி அனாதைய கட்டிக்க மாட்டான். அவனோட மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கிறா.. அத நல்லா மனசுல பதிய வச்சிக்கோ. பணம் காசு ஏதாவது தேவன்னா.. சொல்லு. தர்றன். பணத்துகாகச் சக்திவேலுதான் ஏம்புருஷன்னு இனிமே யார்கிட்டயும் சொல்லாத. ம்.. கௌம்பு."
   ஏதோ எழுதிவைத்ததை மனப்பாடம் செய்து சொல்வது போல் சொன்னாள். பார்வையும் சுவர்றைப் பார்த்தபடி இருந்தது.
   இதைக்கேட்ட மீனா சிலையாக நின்றுவிட்டாள்! அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பிருந்த மகிழ்ச்சி காய்ந்து தீய்ந்து போய்விட்டது.
   அவர் சொன்ன வார்த்தைகள் உண்மைதானா..? அவளால் இப்படியான கசப்பான வாரத்தைகளைக் கூட துப்பமுடியுமா..?
   அதுவும் துப்பியது தன் முகத்தில் அல்லவா..? புண் ஆறினாலும் வடு மறையாதே..! மீனாவால் இதை ஜுரணிக்க முடியவில்லை. திரும்பவும் அவர் சொன்ன வார்த்தைகளைப் பின் நோக்கிக் கேட்டாள். வெறுத்த மனது விதியை நொந்தது.
   கையிலிருந்த பெட்டியை வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று அந்த பிளாஸ்டிக் பொட்டலத்தைக் கொண்டுவந்து அந்த அம்மாள் முன் நீட்டினாள்.
   'என்ன இது?"
   'ஒங்க புள்ளகிட்ட இருக்கிற பணத்துக்கோ அழகுக்கோ நா அவர விரும்பல. அவர் கிட்ட இருக்கிற  நல்ல மனசும் சுத்தமான எண்ணமும் இத மட்டும் தான் நா ஆசப்பட்டது. இது தப்பா கூட இருக்கலாம். அதனால எனக்கு உங்க மகனும் வேணாம். அவர் வாங்கித்தந்த பொருளும் வேணாம். இந்தாங்க."
   அவர் அருகில் வைத்துவிட்டு அதன் மீது அவன் கொடுத்த கைபோனையும் வைத்தாள்.
   'நா கௌம்புறன்." கிளம்பினாள்.
   'நில்லுடி" அதிகாரக் குரல் அவளை நிற்க வைத்தது.
   'அவன் தந்த எல்லா பொருளையும் தந்துட்ட. ஆனா.. அவன் போட்ட மேதிரம் மட்டும் வெல அதிகமானதுன்னு தர்ற மனசு வரலையா..?"
   அவர் மோதிரத்தைக் கேட்கவும் மீனாவின் மனம் மட்டுமல்ல முகமும் இருண்டது.
   'இந்த மோதரம ;மூவாயிரம் நாலாயிரம் இருக்குமா..? பணத்த குடுத்துடுறன்."
   'மூவாயிரம் நாலாயிரமா..? ஒருலட்ச ரூவாடி.."
   'என்னது? ஒரு லட்சமா..?"
   'ஆமா. அதுல இருக்கற ஆறு கல்லும் வைரம். கயற்றி குடுத்துட்டு போ."
   மீனா சற்று யோசித்தாள். பிறகு தன் பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த நகைபெட்டியில் இருந்த நெக்லசை எடுத்தாள். அந்த அம்மாள் கையில் திணித்தாள்.
   'வைரம் தான வேணும்? இதுவும் வைரநெக்லஸ் தான்! இத வாங்க எங்க ஊருல ஆளே இல்ல. இவ்ளோ நாளா என்னோட அம்மா இத பாதுகாப்பா வைக்க சொன்னாங்க. ஆனா இது எனக்கு தேவயில்ல. இந்த மோதரத்துக்குப் பதில் இந்த நெக்லச எடுத்துகோங்க போதுமா..? நா கிளம்புறேன்.."
   கோபமாகக் கிளம்பிப்போனாள்.
   சற்று நேரம் கையில் இருந்த நெக்லசையே பார்த்துக் கொண்டிருந்த அகிலாண்டேசுவரி 'ஐயோ.. மீனா என்ன மன்னிச்சிடுமா.." என்று சொல்லியபடி கைகளால் முகத்தை மூடியபடி அழுதாள்!
   அருகில் நின்றிருந்த கமலா அதிசயமாக அந்த அம்மாளைப் பார்த்தாள்!


  ²²²   ²²²  ²²²   ²²²   ²²²   ²²²²   ²²²


   இனி இந்த ஊருக்கே வரக்கூடாது. என்று தான் மீனா முடிவெடுத்திருந்தாள்.
   முடிவெடுப்பது என்பது சில நேரங்களில் முன்னுக்கு வரும் முயற்சிக்குக் கூட முட்டுக்கட்டையாகி விடுகிறது. முடிவு என்பது எப்பொழுதுமே ஏதோ ஒன்றின் துவக்கம் தான்!
   அவளுடைய முடிவு சக்திவேல் தொலைபேசியில் ~இன்று நடக்கும் ஊர்ப் பொதுக் கூட்டத்திற்கு நீ அவசியம் வர வேண்டும் ;  என்று சொன்ன பொழுதே அதன் இறுக்கம் தளர்ந்து போய் விட்டது.
   அவனும் அதிகமாக எதையும் பேசவில்லை. நலம் விசாரித்துவிட்டு இந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து கொண்டான். அவளின் பதிலைக் கூட எதிர் பார்க்கவில்லை.
   இது தான் அதிகாரம் என்பதோ?
   அவளுக்கு அவனது அலட்சியம் மனத்தை இலேசாக புண்படுத்தினாலும் அவனுடன் பேசிய இந்த வார்த்தைகளை எண்ணி மகிழ்ந்திருந்தாள்.
   இது தானே பெண் மனது? தனக்குப் பிடித்தவர்கள் அடித்தலும் அது ஆசையின் அடையாளம் என்று நினைத்து விடுவது!
   ஆனாலும் அவள் அப்பொழுதும் அந்த ஊருக்குப் போகக்கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து மணியளவில் மாதவன் தனது சுசுகியுடன் வந்து அழைக்கவும் அவளால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.
   சக்திவேலின் வீட்டில் நுழையும் பொழுது மனது படபடப்பாகத் தான் இருந்தது. அந்த அம்மாள் என்ன சொல்வாளோ..?
   அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் முள்ளாகக் குத்தின மனத்தில்! அவள் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள்.  ஆனால் தன் முகத்தைப் பார்க்காமல் நிலைக் கண்ணாடியைத் துடைப்பது சாத்தியமாகாதே..!
   வேறு வழி..? மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். அலுவலக அறையி;ல் யாரோ ஓர் ஊர்க்காரருடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் இவளைப் பார்த்ததும் முகம் மலர 'வா மீனா" என்றான்.
   மீனா இலேசாக முறுவளித்து விட்டுச் சென்றாள். நேராக அகிலாண்டேசுவரி அம்மாள் இருந்த அறைக்குள் சென்றாள். அவளைக் கண்டதும் அவரின் கண்களில் சந்தோஷ பூ பூத்தது! ஒரு சில விநாடிகள் தான். உடனே சட்டென்று வாடிவிட்டது!
   'என்ன விசயம்?" குரலில் கடுமை.
   'இன்னைக்கி இந்த ஊருல கூட்டமாம். என்னையும் உங்க புள்ள வரச் சொல்லி அழச்சிருந்தாரு." மெதுவாகச் சொன்னாள்.
   'ஏன்? நீ வரலன்னா கூட்டம் நடக்காதா..?"
   'நானும் அதத்தான் கேட்டன். ஆனா நா வந்தே ஆகணும்ன்னு சொல்லி ஆளு அனுப்பி அழச்சிக்கினு வந்தாங்க."
   'ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. தான் நெனச்சத சாதிச்சிடணும்ன்னு நடந்துக்கு வாங்க. ஆனா பொண்ணுங்க தான் புரிஞ்சி நடந்துக்கணும். ஒன்னோட தகுதி என்னான்னு நா ஏற்கனவே சொல்லி தான் இருக்கேன். அதையும் மீறி வந்திருக்கே. கூட்டம் முடிஞ்சதும் கௌம்புற வழியப் பாரு. என்னா..?" வார்த்தை நனைந்த நெருப்புத் துண்டாக வந்தது.
   'இல்ல சக்தியம்மா. இத சொல்லத்தான் வந்தேன். கூட்டம் முடிய மணி எப்படியும் எட்டாயிடும். அப்புறம் பஸ்ச புடிச்சி போவணுமின்னா.. ரொம்ப கஷ்டம். அதனால இன்னைக்கி ராத்திரி மட்டும் இங்க தங்கிட்டு நாளைக்கி காலையிலேயே போயிடுறேன்." கெஞ்சலாகக் கேட்டாள். வேந்தனை மனத்தில் நினைத்துக் கொண்டு.
   'சரிசரி. இங்க நாம பேசனது யாருக்கும் தெரிய வேணாம். போ."
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
   'மீனா.. ஒன்ன தம்பி கூப்பிடுது." கமலா வந்து சொல்ல அலுவலக அறைக்கு வந்தாள்.
   'வா மீனா. உக்காரு." அவன் சொல்ல அமர்ந்தாள்.
   'இப்போ சொல்லு. நா உங்கிட்ட என்ன சொன்னேன்? நீ ஏன் இப்படி நடந்துகிற..?"
   புரியாமல் நிமிர்ந்தாள்.
   'புரியலயா..? எக்ஸாம் முடிஞ்சதும் ஊருக்கு வந்திடணும்ன்னு தான சொன்னேன். ஏன் வரல? ஊருல எல்லாரும் நீ வரலைன்னதால என்ன தான் கேட்குறாங்க தெரியுமா..?"
   'எனக்கு ஒரு முதியோர் இல்லத்துல வேல கெடச்சியிறுக்கு. இந்த லீவுல வேல செஞ்சாக்கா எனக்கு அந்த பணம் ஒதவியா இருக்கும். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் பணம் கட்டினாலும் எனக்குன்னு சில தேவைங்க இருக்கில்லையா..? அதுக்கெல்லாம் இந்தப் பணம் தேவைப்படும்." என்றாள் மிக மெதுவாக.
   'ஏன்? எங்கிட்ட கேட்டா நா செய்யமாட்டேனா..?"
   'வேணாம். எனக்கு யாரோட ஒதவியும் வேணாம். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் செய்யிற ஒதவியே அதிகம். இது போதும்."
   நிமிராமல் பதில் சொன்னாள். அவன் சற்று நேரம் அவளை உற்று பார்த்தான்.
   'சரி உன்னிஸ்டம். ஆமா.. என்னோட ரூமுல இருந்து ஒரு டைரிய எடுத்துக்கினு போனியே.. அத படிச்சியா..?"
   அவன் அப்படி கேட்க அவள் முகம் சிவந்தது. அன்று அவள் அதை டைரி என்று நினைத்து எடுக்கவில்லை. அவசரத்தில் அவனுடைய புகைப்படத்தை மறைப்பதற்காகத் தான் அந்தப் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு புத்தகம் என்று நினைத்துத் தான் எடுத்துக் கொண்டு போனாள்!
   மறுநாள் அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் அதைத் திறந்த பொழுது தான் அது ஒரு டைரி என்று அவளுக்குத் தெரிந்தது.
   அதில் அனைத்தும் கைபட எழுதியதுதான். ஆனால் என்ன பயன்? அது அவளுக்குத் தெரிந்த தமிழோ ஆங்கிலமோ இல்லை! அனைத்தும் கன்னட எழுத்துக்கள். அதில் ஓர் எழுத்துக் கூட அவளுக்குப் படிக்கத்தெரியாது.
   யாரிடமாவது கேட்கலாம் என்று நினைத்தால்.. அவன் எழுதியதில் என்ன விசயம் ஒளிந்திருக்குமோ.. பேசாமல் மூடி வைத்துவிட்டாள். இப்பொழுது அந்த டைரியைத் தான் அவன் கேட்கிறான். நல்ல வேலை. கையுடன் கொண்டு வந்திருந்தாள். எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் இலேசான சிரிப்புடன் சொன்னான்.
   'நா டைரிய கேக்கல. படிச்சியான்னுத் தான் கேட்டேன்?"
   'இல்ல. எனக்குக் கன்னடம் தெரியாது.."
   'நா வேணா அர்த்தம் சொல்லட்டுமா..?"
   'வேணாம். அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசயில்ல."
   'தெரிஞ்சாத் தானே நிஜம் என்னன்னு ஒனக்கு புரியும்!"
   'வேணா.." தலையை ஆட்டினாள். 'வேணாம். எனக்கு நிஜம் வேணாம். நெழலே போதும். அதுல வில்லனோ வில்லியோ இல்ல. இப்படியே இருந்துடறேன்."
   அவன் அவளை யோசனையுடன் சற்று நேரம் பார்த்து விட்டு 'மீனா.. நிழல்.. .." எதுவோ சொல்ல வருவதற்குள்.. கைபோன் அழைக்க எடுத்துப் பேசியவன் முடித்துத் திரும்பினான்.
   'மீனா.. வா போலாம்.. நமக்காகக் காத்துக்கினு இருக்காங்களாம்.." எழுந்தான்.
   'நீங்க போங்க. நா பின்னாலேயே வந்திடுறேன்."
   அப்படிச் சொன்னவளை முறைத்துவிட்டுக் கிளம்பினாள்.                          


                                       (தொடரும்)       

Thursday 4 October 2012

போகப் போகத் தெரியும் - 26



   மீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று!
   மீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று! அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.
   மூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.
   அறிவழகி காபி டம்ளர் அடுக்கிய தட்டை மகளிடம் நீட்டினாள். மீனா வாங்கவில்லை. கோபமாகத் தன் தாயை முறைத்தாள்.
   'மொறைக்காதடி. நாமெல்லாம் நெனச்சமாதிரி வாழ முடியாத ஜென்மங்க. கெடைக்கிற வாழ்க்கைய நமக்கு தகுந்த மாதிரி வாழப் பழகிக்கணும். இந்தா புடி. போயி மாப்புள கிட்ட குடு." என்றாள் கவலையை விழுங்கின அதிகாரத்துடன்!
   மீனா தாயை நிமிர்ந்து பார்த்தாள். 'ஏம்மா.. நீ எதுக்குத் தனியா வாழ்ந்த? ஒம்மனசுல நெனச்சவன் கெடைக்கலன்னு தான.. ஏன் நீ வேற ஒருத்தன கட்டிக்கினு அவனுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்து இருக்கலாம் இல்ல? ஒனக்கு இருந்த மனசு எனக்கு இருக்கக் கூடாதா..?"
   'வேணாம் மீனா. வீணா புடிவாதம் புடிக்காத. எனக்கு வாழ்க்க கெடைக்கலன்னாலும் என்னைய வச்சி காப்பாத்த என் அண்ணன் இருந்தாரு. ஆனா நீ..? ஒனக்கு எனக்குப் பெறகு யாரு இருக்கா..? அனாதைங்க யதையும் ஆசப்படக் கூடாதும்மா.."
   அவள் ஆறுதலுக்காகத்தான் சொன்னாள். ஆனால் மீனா.. அந்த வார்த்தையில் உடைந்து போய்விட்டாள். 'அனாதை" இந்த வார்த்தையை எத்தனையோ பேர்கள் சொல்லியிருந்தாலும்.. தன்னை வளர்த்த தாயே இன்று தன்னை 'அனாதை" என்று சொல்லிக் காட்டியது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் இருந்தது.
   அமைதியாக நின்று தன்னை ஒருநிலைப் படுத்தினாள். அறிவழகி கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் திரும்பி இவளைப் பார்த்தார்கள். அவளுக்கு யாருக்கும் காபியைக் கொடுக்க மனம் வரவில்லை. சிலையாக நின்றுவிட்டாள்.
   அவள் கண்களில் தேங்கிய கண்ணீர் வைரம் போல் ஜொலித்தது. அன்பிற்காக ஏங்கி விடும் கண்ணீர் ஆண்டவனின் இதயத்தை உடனே தட்டிவிடுகிறது போலும்!
   'மீனா.. உள்ள போ."
   யார் அப்படி சொன்னார்கள் என்று அவளால் யோசிக்கவும் முடியவில்லை. பேசாமல் நின்றிருந்தவளை கமலா அழைத்துக் கொண்டு அறையினுள் சென்றாள்.
   சக்திவேலுவின் குரலைக் கேட்டதும் மரியாதைக்காக அனைவரும் எழுந்து நின்றார்கள். 'வா..தம்பி.." ஒரு பெரியவர் தான் வார்த்தையில் வரவேற்றார்!
   சக்திவேல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
   'என்ன விசயமா வந்தீங்க..?" கேட்டான்.
   'நம்ம அறிவழகி பொண்ணு மீனாட்சிய எம்பையனுக்குப் பேசி முடிக்கலாம்ன்னு தான். பொண்ண பாத்தாச்சி. கையோட நிச்சயம் பண்ணிட வேண்டியது தான்." பையனின் அப்பா வெற்றிலை காவி பற்களைக் காட்டிச் சிரிப்புடன் சொன்னார்.
   'ம்.. நிச்சயம் பண்ணுறது இருக்கட்டும். நீங்க தான ஓடத்தூர்ல பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு வந்தவங்க?"
   'ஆமாம்பா. பொண்ணு ஒன்னும் ரொம்ப படிக்கலையாம். பத்தங்கிளாசு தானாம். அழகுகூடக் கம்மிதான். அதனாலத்தான் வேணாம்ன்னு சொல்லிட்டோம்." என்றார் பெருமையாக!
   'ஐயா மன்னிச்சிடுங்க. ஓடத்தூர்காரங்களுக்கும் இந்த ஊர்காரங்களுக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது. நீங்க அங்க பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு எங்க ஊருல பொண்ணு எடுத்தா பிறகு பிரச்சனதான் வரும். அதனால இந்தப் பொண்ணுன்னு இல்ல. இந்த ஊருல வேற எந்தப் பொண்ணையும் கொடுக்கமாட்டோம். நீங்க சாப்ட்டு கௌம்புங்க."
   எழுந்து கைகூப்பி முடிவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
   இவர்கள் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனார்கள்.
   'பாவம். அனாத பொண்ணு. நாய்கிட்ட கெடச்ச மட்டத்தேங்கா மாதிரித்தான். சின்னாபின்னமாவப் போவுது."
   அவர்களில் ஒருத்தி வேண்டுமென்றே அறிவழகி காது பட சொல்லிவிட்டு;ச் சென்றாள்!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
  
   'அம்மா. நா போயிட்டு வர்றேன்."
   மீனா நேற்று நடந்த நிகழ்ச்சி தன்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல மறுநாள் காலையில் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள்.
   கன்னத்தில் கைவைத்த படி அமர்ந்திருந்த அறிவழகி ஆவேசத்துடன் எழுந்தாள்.
   'ஏய் மீனா.. நில்லு. நீ ஒன்னும் காலேஜுக்கி போவவேணாம். நா பத்துமணி பஸ்சுக்கு ஊருக்கு போறேன். நீயும் எங்கூட வா." என்றாள் கோபமாக.
   'நானா.. எதுக்குமா..?" புரியாதவளாகக் கேட்டாள் மீனா.
   'எதுக்கா..? இனிமே நாம வாழப்போற எடம் என்னோட அண்ணன் வுடுத்தான். படிச்சது போதும். போயி துணியெல்லாத்தையும் எடுத்து வையீ." என்றாள் அதிகாரமாக.
   மீனா அதிர்ச்சியாகத் தன் தாயைப் பார்த்தாள். அறிவழகியின் பேச்சில் அதிக அழுத்தம் இருந்தது. என் இப்படி பேசுகிறாள்..? என்ன காரணமாக இருக்கும்? திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் இது எதையும் கவனிக்காதவன் போல் அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தான்.
   அவனருகில் அகிலாண்டேசுவரியும் கமலாவும் இவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். யாராவது தனக்காகப் பரிந்து பேச மாட்டார்களா..? ஏங்கியது மனம். ஆனால் அவளுக்காக யாரும் பேச முன் வரவில்லை.
   'ஏய்.. சொல்றனில்ல. போயி துணிமணியெல்லாம் எடுத்துகினு கௌம்பு." திரும்பவும் அறிவழகி கத்தினாள்.
   தனக்காகப் பேச மற்றவர்கள் வரவில்லை என்றால் என்ன? தனக்குக் தைரியம் இல்லையா.. என்ன..?
   'நா வரமாட்டேன்.." அழுத்தமாகச் சொன்னாள்.
   'வரமாட்டியா..? ஏன்..?"
   'நா படிக்கணும்."
   'அங்க வந்து படிச்சிக்கோ."
   'முடியாது. நா அங்க வந்தா ஒன்அண்ண பசங்க என்ன படிக்கவுட மாட்டானுங்க. நா மாட்டேன்."
   அவள் அப்படி சொன்னது தான் தாமதம்! அறிவழகி அறிவிழந்து தன் மகளின் முடியைக் கொத்தாகப் பிடித்து முகத்தில் அறைந்தாள்.
   'ஏன்டீ.. அனாத நாயே.. நா சொல்றதுக்கு எதுத்தா பேசுற. ஒனக்காகவே வாழ்ந்தேனே.. ஒன்னோட சந்தோசம் தான் என்னோட சந்தோசம்ன்னு நெனச்சேனே.. என்னையா எதுத்துப் பேசுற? போ.. போயி கௌம்பு."
   'நா அங்க வரமாட்டேன்." அடியையும் வலியையும் பொருட் படுத்தாமல் மீனா நிமிர்ந்து நின்று சொன்னாள்.
   'வர மாட்டியா.. வரமாட்டியா..?" அறிவழகி அழுது கொண்டே மேலும் மேலும் அடித்தாள்.
   ஓர் அளவுக்கு மேல் பொருக்காத சக்திவேல் எழுந்து வந்து சட்டென்று அவள் கையைத் தடுத்தான்.
   'அத்தே.. மொதல்ல அவள அடிக்கிறத நிறுத்துங்க."
   அவன் கண்கள் சிவக்கக் குரலை ஓங்கிச் சொன்னான். அறிவழகி தன் மகளை அடிப்பதை நிறுத்திவிட்டு இவனிடம் திரும்பினாள்.
   'தோ பாருப்பா. இவ என் பொண்ணு. அவள அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ இதுல தலையிடாத.." அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு மீனாவிடம் திரும்பினாள்.
   'ஏய்..மீனா.. எழுந்து கௌம்பு. அனாத நாயே.. ஒனக்கு பொறப்புதான் சரியில்ல. ஜாதகமாவது சரியா இருந்துச்சா..? எல்லாம் ஒன்னோட தலஎழுத்து. இனிமே உன்னைய இங்க வுட்டுட்டு போவ முடியாது.. ஏதோ அனாதய எடுத்து வளத்துட்டன். ஒன்ன எவங்கையிலயாவது புடிச்சி குடுத்துட்டா.. எனக்கு ஒரு தொல்ல ஒழியும். ம்.. கௌம்பு." கத்தி பேசினதில் மூச்சி இறைத்தது.
   மீனா பேசாமல் தரையில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
   'எந்திருடி நாயே.. எந்திருக்கமாட்ட..?" மேலும் அடிக்கப் போனவளின் கையைச் சக்திவேல் கோபமாகப் பற்றினான். அவன் முறைத்த பார்வை அவளைப் பயங்கொள்ள வைத்தது.
   'தோ பாருப்பா. இது எனக்கும் எம்மவளுக்கும் நடக்கிற பிரச்சன. இவள இனிமேல இங்க வுட்டுவக்க முடியாது." சற்றுக் குரல் தணிந்து சொன்னாள்.
   'ஏன்.. என்னக்காரணம்..?" புருவங்கள் முடிச்சிடக் கேட்டான்.
   'எனக்கு ஒடம்புக்கு முடியல. என்னோட அண்ணனும் படுத்த படுக்கையாத் தான் இருக்காரு. எனக்காக எவ்வளவோ செஞ்ச அவருக்கு நா இப்போ ஒதவியா இருக்கோணும். அதுக்குத்தான் இவளுக்குக் கல்யாண ஏற்பாடு செஞ்சேன். கடைசில அது முடியாம போயிடுச்சி. அந்த வேந்தங்கிட்ட மாட்டி இவ சின்னா பின்னமாறத விட எங்கண்ணன் புள்ளைங்க யாருக்காவது கட்டி வச்சிட்டா எங்கடமை முடிஞ்சிடும். அதுக்கு தான். மீனா புடிவாதம் புடிக்காத. எந்திறுச்சி கௌம்பு." அதட்டினாள்.
   'அத்த.. அவ வரமாட்டா. நீங்க வேணா கௌம்பிப் போங்க." நிதானமாகச் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   'இவ்ளோ உரிமயா சொல்லுற.. நீ அவள கட்டிக்கிறியா..? சொல்லு. இப்டியே வுட்டுட்டு போயிடறேன்."
   ஒரு விரலை உயர்த்திக் காட்டிக் கேட்டாள் அறிவழகி!
   அவள் அப்படிக் கேட்டதும் அழுது கொண்டு அமர்ந்திருந்த மீனா கண்களைத் துடைத்துக் கொண்டு சக்திவேலை நிமிர்ந்து பார்த்தாள். அகிலாண்டேசுவரி கமலாவின் பார்வையும் சக்திவேலின் மீது பதிந்து இருந்தது.
   அவன் ஒரு நிமிட யோசனைக்கு பின் சொன்னான்.
   'நா அவள கட்டிக்கிறதும் கட்டிக்காததும் வேற விசயம். அவள நா படிக்க வைக்கிறேன்னு வாக்கு குடுத்து இருக்கேன். அவ படிச்சி முடிக்கிற வரைக்கும் என்னோட கண்கணிப்புலயே இருக்கட்டும். நீங்க கௌம்புங்க.' என்றான்.
   'முடியாது. இனிமேல அவள நா இங்க வுட்டுவைக்க முடியாது. அது மொறையுங் கெடையாது." அவனுடைய பதில் இவளை அலட்சியப் படுத்திப் பேச வைத்தது.
   இதையெல்லாம் கவனித்த மீனா வெறுமையாகச் சிரித்தாள். எழுந்தாள். தாவணியைச் சரி செய்தாள். கலைந்த தலைமுடியைச் சரி செய்து க்ளீப் வைத்தாள். அறிவழகியைப் பார்த்தாள்.
   'அம்மா.. நா இங்க இருக்கிறது தான ஒனக்கு புடிக்கல. நா இனிமே இங்க இருக்க மாட்டேன். போதுமா..? அதுக்காக ஒன்னோட அண்ணன் வீட்டுக்கும் வர மாட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கினே அங்கேயே இருந்துகினே படிக்கிறேன் போதுமா..? நீ கௌம்பு. ஒன்னோட வீராப்பு கொணத்துக்காக என்னோட படிப்ப என்னால வீணாக்க முடியாது. எனக்கு நீயும் வேணாம். இவங்களும் வேணாம். நா அனாத தான். ஏதோ எடுத்து வளத்தியே.. ஒனக்கு பெரிய கும்பிடு. அவுங்க படிக்க பணம் கட்டி சோறு போட்டாங்க. உங்களுக்கும் ரொம்ப நன்றி. இனிமே நா யாருக்கும் பாரமா இருக்கவிரும்பல. நா கௌம்புறேன்."
   கீழே சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
   வானம் கடைசியாக இருந்த மழைநீரை வடிகட்டியது. இன்னும் சற்று நேரத்தில் வெறுமையாகிவிடும். மீனாவின் மனத்தைப்போல!
                     

                              (தொடரும்)

Tuesday 18 September 2012

போகப் போகத் தெரியும் - 25


    பிற்பகல் மணி இரண்டு.
   சூரியனின் கதிரைக் கருமேக தேவதை தனது காதலால் ஒலியிழுக்கச் செய்துவிடலாம் என நினைத்து வானத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது.
   கறுப்பு தேவதையை அணைக்க முடியாத காதல் கொண்ட சூரியன் ஏக்கப் பெருமூச்சி விட்டதினால் பூமி பகல் பொழுதிலும் குளிர்ந்த காற்றுடன் இதமாக நனைந்தது.
   'மீனா.. ஏதோ காலேஜுல நிகழ்ச்சி இருக்குன்னியே.. போவலையா..?" கமலா கேட்டாள்.
   'இல்ல. ஒடம்பு சரியில்லன்னு நாளைக்கி சொல்லிக்கிறேன்." மீனா கவலையுடன் சொன்னாள்.
   இயலாமை பொய் சொல்லத் தூண்டுகிறது.
   'மீனா.. உன்னைய நம்பி இருக்கவங்கள நீ நம்பிக்க துரோகம் பண்ணலாமா..?"
   'கூடாது தான். ஆனாக்கா எனக்கு வேற வழி தெரியலையே.. என்ன செய்யறதாம்..? நீங்களே சொல்லுங்க பாக்கலாம்?"
   'இந்தா வழி." கையில் இருந்த பிளாஸ்ட்டிக் பையை நீட்டினாள். 'இது சத்திவேல் தம்பி வாங்கினு வந்து தந்துச்சி. போட்டுக்கினு சீக்கிறமா கௌம்பு! அதுவே கூட்டிக்கினு போய் காலேஜுல உடுறேன்னு சொன்னுச்சி." என்றாள்.
   மீனா சட்டென்று வாங்கிக் கொண்டாள். மனம் மலர்ந்ததை முகம் காட்டிக் கொடுத்தது. தனது அறையினுள் சென்றவள் பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.
   அவள் அணிந்திருந்த இரத்தச் சிகப்பு நிறத்தில் முத்துக்களும் வெள்ளி சரிகைகளும் மினுக்குகளும் வைத்துப் பதித்துதைத்த ஆடை அவளைத் தேவலோகப் பெண்ணே கண்முன் தோன்றியது போல் இருந்தது. அதிலும் அதனுடன் அவள் அணிந்திருந்த அணிகளங்கள்; சேர்ந்து அவள் அழகுக்கு மேலும் அழகூட்டியது.
   கமலா அவள் அழகை ரசித்துப் பார்த்தாள்.
   ஆனால் சக்திவேல்..!
   அவன் தன் கண்களைச் சற்று நேரம் இமைக்கவே மறந்துவிட்டான். சீதையைக் கண்ட இராமனைப் போல் அவளைக் கண்களாலேயே விழுங்கிவிட்டான்! அவ்வளவு ஆர்வம் கலந்த பார்வை அவன் கண்களில்!
   அகிலாண்டேசுவரி மீனாவைப் பார்த்ததைவிட தன் மகனைத்தான் முறைத்தாள். சக்திவேல் தன் தாயைப் பார்த்தால் தானே..? அவன் தான் மீனாவின் அழகில் மெய்மறந்து போய் இருக்கிறானே..
   அவன் இந்த உடையை வாங்கிய பொழுது  அது இவ்வளவு அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை போலும்..
   எப்பொழுது தன்னுடைவைகள் அழகானது என்று ஒருவன் மற்றவர்கள் சொல்லாமல் உணருகிறானோ.. அவன் அப்பொழுது தான் அதன் மதிப்பை அறிந்து பெருமிதம் கொள்கிறான்.
   'சக்திவேல்.. மணியாவுது. சீக்கிரமா போயி உட்டுட்டு வா.." அதிகாரம் கலந்த அகிலாண்டேசுவரியின் குரல்!
   சக்திவேல் சுயநினைவுக்கு வந்து தலையாட்டினான்.

  ²²²   ²²²    ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   இரவு. பெண்ணின் புருவம் போன்ற வளைந்த பிறை மழைநீர் தேங்கிய குட்டையில் விழுந்து கிடந்தது.
   கல்லூரி நிகழ்ச்சி முடிந்து தானே வந்துவிடுவதாகச் சொன்ன மீனா இன்னும் வரவில்லை.
   பள்ளிக்கூட வாசலில் தன் நண்பர்களுடன் இருந்த சக்திவேல் சந்தேகத்துடன் வழியை நோக்கி இருந்தான். அன்றைய நிகழ்ச்சிக்கு வெற்றிவேல் வந்திருந்தான். ஆனால் வேந்தனோ லட்சுமணனையோ அங்கே பார்க்கவில்லை.  அதனால் சந்தேகம் வலுக்கப் போய் பார்த்துவிட்டு வருவது என்று கிளம்பினான்.
   அப்பொழுது தான் கவனித்தான்! சற்று தூரத்தில் ஓர் உருவம்.. வெளிச்சத்தை விட்டுவிட்டு இருட்டைத் தேடித்தேடிச் சற்று ஒளிந்து ஒளிந்து சென்றது.
   அது மீனா தான்! சக்திவேல் கன்டுபிடித்துவிட்டான். அவனைத் தாண்டிப் போக இருந்தவளை  'மீனா.." கூப்பிட்டான்.
   அவள் நின்றாள். ஆனால் அருகில் வரவில்லை.
   'மீனா இங்க வா.." திரும்பவும் கூப்பிட்டான்.
   'என்ன விசயம்?" குரல் உடைந்த மீனா அருகில் வராமலேயே கேட்டாள்.
   'கொஞ்சம் பேசணும்.." சொல்லிக் கொண்டே சந்தேகத்துடன் அருகே போனான்.
   'இல்ல.. நாளைக்கி பேசலாம்.. எனக்கு எனக்கு.." அதற்கு மேல் அழுகையை அடக்க முடியாதவள் கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஓடினாள்.
   அவளின் சராரா உடையில் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தாலும் கிழிந்து தொங்கிய ஜாக்கெட் முழு முதுகையும் விளக்கு வெளிச்சத்தில் காட்டி மறைந்தது. சக்திவேல் யோசனையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   அழுது கொண்டே ஓடிவந்தவள் தனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் புகுந்து கதவைத் தாளிட்டு கொண்டாள்.
   அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வெளிவந்தது. சற்று நேரம் அழுதவள் ஓய்ந்தாள்.
   அழுகையும் சில சமயங்களில் ஆறுதல் அளிக்கிறது. பொழிந்துவிட்ட மேகம் வெறுமையாக இருக்கும்! அழுது விட்ட மனமும் வெறுமையாகி வேதாந்தம் போதிக்கிறது.
   அவளை இப்படி அழவைத்த வேந்தனை நினைத்தாள். என்ன மனிதன் இவன்? அவனால் எப்படி இன்று இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்ள முடிந்தது.;..?
   பேரூந்தைவிட்டு இறங்கி நடந்தவளை வாய் பொத்தி தூக்கிக் கொண்டு போய்.. எப்படியான தகாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான்! மீனா கோபத்தில் திருப்பித் திட்ட எத்தனை முறை கன்னங்களில் அறைந்தான்? அடித்தாலும் பரவாயில்லை!
   உடம்பில் ஒரு ஒட்டுதுணியையும் விட்டு வைக்காமல் அவிழ்த்து எறிந்துவிட்டு சொன்னான்.  'ஒன்ஒடம்ப முழுசா துணியே இல்லாம பாத்துட்டன். இப்போ நீ பாதி கற்பு எழந்தவ. நாளைக்கி யவனையும் உன்னால கட்டிக்க முடியாது. இப்ப நா நெனச்சாக்கூட ஒன்ன சின்னா பின்னமாக்கிட முடியும்;;. ஆனா அப்டி செய்ய மாட்டேன். ஏன்னா.. நீ இன்னா சொன்ன..? தாலிகட்டுன பொண்டாட்டிய தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல? தாலிய கட்டிட்டு தொடறன். இப்ப நீ எனக்குப் பாதிப் பொண்டாட்டி.. போடி போ. போயி யாருகிட்டவேணா சொல்லிக்கோ. எனக்குக் கவலையே இல்ல. எவன் வர்றான்னு நானும் பாக்கறன். அந்தச் சத்திவேலு அந்த ஆறு பையனுங்க தான.. வரட்டும். அவனுங்கள வெட்டி சாகடிகாம என் உசிறு போவாதுடி. வக்கிறன் அவனுங்களுக்கு வேட்டு. மோதரம் போடுறானா அவன்? அவன் கைய வெட்றன் மொதல்ல. போ. போயி எல்லாத்தையும் சொல்லு."
   வெறியுடன் கத்தினான். மீனா கையில் கிடைத்த துணியை சுற்றிகொண்டு இறக்கை இழந்த பறவையாக நடந்தாள்.
  


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   'நேத்து என்ன நடந்துச்சி..?"
   கல்லூரிக்குக் கிளம்பினவளை நிறுத்திக் கேட்டான் சக்திவேல். கையில் சிவப்பு நிற துப்பட்டா இருந்தது.
   'அது ஒன்னுமில்ல. நேத்து வர்ற வழியில காத்துல துப்பட்டா பறந்துடுச்சி. தேடிப்பாத்தன். கெடைக்கில. துப்பட்டா இல்லாம எப்படி வர்றதுன்னு தெரியாம அசிங்க பட்டுக்கினு இருட்டுல பதுங்கி பதுங்கி வந்தேன்."
    கூசாமல் பொய் சொன்னாள். ஏற்கனவே யோசித்து வைத்தது தான்;! ஆனால் இவன் கையில் எப்படி வந்தது இந்தத் துப்பட்டா..?
   'அப்படீன்னா.. நீ உண்மைய எப்பவுமே சொல்ல மாட்டேயில்ல..?"
   கோபம் வார்த்தையில் தெரிந்தது.
   'இது தாங்க உண்ம."
   அவன் பெருமூச்சி விட்டான். 'மீனா.. பிரச்சனைங்க வரக்கூடாதுன்னு நீ பிரச்சனைகள மூடி மறைக்கப் பாக்குற. ஆனா முடியாது. அது ஒரு நாளைக்கி வெடிச்சிக்கினு வெளிய வரும் போது ரொம்ப ஆபத்துல கொண்டு போய்விட்டுடும். ஞாபகம் வச்சிக்கோ. எங்கிட்ட சொல்லலன்னாலும் பரவாயில்ல. ஆனா ஜாக்கறதையா இருந்துக்கோ. இனிமே வெளிச்சத்தோட வீட்டுக்கு வந்துடு. இல்லன்னா நாங்க யாராவது வர்றோம்." என்றான்.

    அவளும் சனிக்கிழமை பகல் பொழுதிலேயே வந்துவிட்டாள். இவளுக்காக அறிவழகி வந்து காத்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று முழுவதும் அன்னையின் மடியிலேயே படுத்திருந்தாள். சக்திவேல் வெளியூர் போயிருந்தான்.
   மீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று!
   மீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று! அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.
   மூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.                             

                                  (தொடரும்)

முன் கதைச் சுறுக்கம்.




போகப் போகத் தெரியும் தொடர்கதையின் முன் கதைச் சுறுக்கம்.

    மீனா.... இந்தக் கதையின் நாயகி! ஓர் அனாதைபெண். அவளைக் குழந்தையாக இருக்கும் பொழுது அறிவழகி என்பவள் ஆற்றங்கரையில் கண்டெடுத்து வளர்க்கிறாள்.
    மீனா ஆத்தூர் என்ற ஊரை வழிநடத்திச் செல்லும் சக்திவேல் என்பவனை விரும்புகிறாள். சக்திவேலின் தாய் தன் மகனுக்கு இரத்த சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜோசியன் சொன்னதால் சொந்தத்தில் பெண் தேடிக் கொண்டிருக்கிறாள். இதற்கு நடுவில் வெற்றிவேல் என்பவனும், அவன் தம்பி வேந்தன் என்பவனும் மீனாவை விரும்புகிறார்கள். வெற்றிவேல் ஊருக்கும் சக்திவேல் ஊருக்கும் தொடக்கத்திலிருந்தே பிரட்சனை இருந்தாலும் புதியதாக வந்து மீனாவால் மேலும் பிரட்சனைத் தொடர்கிறது.

    தற்போது மீனாவைச் சக்திவேல் வீட்டில் அடைக்கலமாக இருக்கிறாள். சக்திவேலின் தாய் அகிலாண்டேசுவரி இவளை வெறுக்கும் காரணம் தெரியாமலும் சக்திவேலின் புத்தகத்திலிருந்து எடுத்த வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கண்டும் மீனா குழம்பிப் போய் இருக்கிறாள்.

தொடருங்கள்...

Thursday 6 September 2012

போகப் போகத் தெரியும் - 24






   மீனா வந்ததிலிருந்து சக்திவேல் மீனா என்றொரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் நடந்து கொண்டதால் மீனா யோசித்தாள்.
   அவள் சனிக்கிழமைகளில் கல்லூரியிலிருந்து வரும் பொழுதும் திங்கள் கிழமைகளில் காலையில் கல்லூரிக்குத் திரும்பிப் போகும் பொழுதும் அவன் தன் நண்பர்களுடன் ஊர் பள்ளிக்கூடத்தின் திண்ணையில் இருந்து கொண்டு இவளைப் பார்ப்பான். இவளும் அவனை ஓரக்கண்களால் பார்த்துச் சிரித்துக் கொள்வாள். அவ்வளவு தான்.
    வீட்டில் அது கூடக் கிடையாது. சில நாட்களில் அவன் வீட்டிலேயே இருக்க மாட்டான்.
    யாரிடமாவது விசாரித்தால் அவன் பெங்களுர் போய் இருப்பதாய் பதில் கிடைக்கும்.
    வீட்டில் இருக்கும் பொழுது நிறைய தொலைபேசி அழைப்பு வரும். அதில் ஒரு பெண் குரல் தான் சக்திவேலைக் கேட்க்கும். அவன் அந்தக் குரலுடன் பேச ஆரம்பித்து விட்டால் பொழுது கரைந்து விடும். சிரித்துப் பேசுவான். இவளுக்குப் புரியாது. காரணம்... அவன் கன்னடத்தில் அல்லவா பேசுகிறான்...!
    இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவளுக்குத் தொடக்கத்தில் கோபமாகத் தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? உண்மையில் அவன் அவளுக்கு என்ன உறவு? காதலி என்று சொல்லலாமா...?
    எந்த உறவும் இல்லாமலேயே உறவைக் கொண்டாட வருவது தானே காதல்!!
    ஆனால் இது காதல்தான் என்று சொல்லிக்கொள்ள எந்த பதிலும் அவனிடமிருந்து வரவில்லையே! அன்று சின்னத்தம்பியாக இருந்த பொழுது தன்னைக் காதலிப்பதாகச் சொன்னவன்... அவனே பின்பு சக்திவேலாகி என் மனத்தில் வேறோரு பெண் இருக்கிறாள் என்று சொன்னவனும் இவன் தானே...!
    அன்று வெற்றி பெற்றதின் பரிசாகத் தன் நண்பர்களின் எதிரிலேயே முத்தம் கேட்டு பேச்சால் அவளைச் சீண்டியவன்... அதன் பிறகு தனிமையில் எதையும் பேசினதில்லையே...!!
      ஒரு சமயம் முறையுள்ளவர்களைக் கேலி கிண்டல் செய்து விளையாடுவது போல் விளையாடினானோ...! அதைத் தான் நாம் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டோமா...? இருக்கலாம்...
    அப்படியென்றால் அவன் தன்னைக் காதலிக்கவில்லை என்பது உண்மை தான்! அவனுக்கு எப்படி தன் மீது காதல் வரும்? சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜாதகம் சொல்கிறது. பணக்காரன். படித்தவன். பண்பாளன். இவனுக்குப் பெண் கொடுக்க பணக்காரர்கள் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்க... அனாதையான தனக்கா அவன் தாலி கட்டுவான்...
    சரி தனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவன் காதலிக்கும் பெண்ணுடனாவது நன்றாக வாழட்டும். மனதார வாழ்த்தினாள்.
    இது தானே உண்மையான காதல்!
    அப்படியானால் தனக்குப் பிடித்தவனை அடுத்தவருக்கு விட்டுக் கொடுப்பது தான் காதலா...?
    ஆமாம். இதுவும் ஒருவகை காதல் தான். தனக்கு எட்டாத பழம் சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று நினைக்காமல் நம்மைவிட வலிமையானவர்கள் ருசிக்கட்டுமே என்று தகுதி உள்ளவர்களுக்குத் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர்களை விட்டு நகர்ந்து விடுவதும் ஒரு வகையில் காதல் தான்...
    ஏமாற்றம் அடைந்தவன் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமல் அடுத்தவனால் தான் வந்தது என்று தன்னைச் சமாதானம் செய்து கொள்வது இல்லையா...?
    அதிலும் இங்கே வெற்றிவேலும் வேந்தனும் இவளுடைய தகுதி என்னவென்று அவளிடமே சொல்லித் தானே இருந்தார்கள்?
    ஒரு புத்திசாளி தன்னுடைய எதிரிகளிடமிருந்து நிறைய விசயங்கள் கற்றுக் கொள்கிறான். இதோ மீனாவும் தன்னுடைய தகுதியை எடைபோட்டுக் கொண்டாள். தனக்குச் சக்திவேலை அடைய எந்தத் தகுதியும் இல்லை என்று.
    ஆனால் தகுதியைப் பார்த்து வருவதா காதல்?
    இருந்தாலும் அவனுக்கு எல்லாவித்த்திலும் பொருந்திய அந்தப் பெங்களுர்ப் பெண் நிருஜாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.
    எப்படிப் பார்ப்பது? சக்திவேல் ஏதாவது புகைப்படம் வைத்திருப்பானா...? அப்படி வைத்திருந்தாலும் மாடியில் அவன் அறையில் தான் வைத்திருப்பான்!
    இதுவரை அவள் மாடிக்குப் போனது கிடையாது. அவள் மட்டுமல்ல. கமலாவைத் தவிர யாருமே மாடிக்குப் போகக்கூடாது. கமலா கூட அறையைச் சுத்தம் செய்ய, அழுக்கு உடைகளைக் கொண்டுவர என்று மட்டும் தான் போவாள்.
    கமலாவிடம் நிருஜா விசயத்தைக் கேட்கலாமா என்று நினைத்தாலும் எந்த அளவிற்கு இவர்களுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பது தெரியாது. அவள் நிச்சயமாக நெருங்கின சொந்தமாக இருக்க முடியாது!
    கிணறு தோண்டப் பூதம் கிளம்பின கதையாக மாறி விட்டால்...? வேண்டாம். பேசாமல் இருந்து விட்டாள்.
    ஒரு நாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலாவே மாடி அறையைச் சுத்தம் செய்ய மீனாவை அனுப்பினாள். அன்று சக்திவேல் ஊரில் இல்லை.
    அறை நாகரிகப் பாணியில் குளிர் சாதனவசதி செய்யப்பட்டு பெரியதாக இருந்தன. அவளின் கைகள் வேலை செய்து கொண்டே இருந்தாலும் கண்கள் ஏதேனும் புகைப்படம் கிடைக்குமா என்று தேடிய வண்ணமாகவே இருந்தது. ஏமாற்றம் தான் கண்களுக்கு!
    கட்டிலைச் சரிசெய்து போர்வையை உதறிய பொழுது கீழே விழுந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். அது ஒரு கன்னட புத்தகம்!
    முதல் பக்கத்தைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி! அதில் அவளுடைய புகைப்படம் இருந்தது! எப்பொழுது எடுத்தது? அதுவும் பாவாடை சட்டையில்! மனத்தில் இலேசான சந்தோசம் ஒட்டிக்கொண்டது.
    மேலும் மேலும் சில பக்கங்களைத் திருப்ப மேலும் சிலபடங்கள்!
    ஆனால் இப்பொழுது மனம் சந்தோஷம் கொள்ளவில்லை. சஞ்சலம் தான் அடைந்தது. காரணம் அதில் ஒரு படம் தான் அவளுடையது. மற்ற நான்கும் வேறு ஒரு பெண்ணுடையது. படத்தில் இருந்த பெண் மிக அழகாக இருந்தாள். அனேகமாக இவள் தான் நிருஜாவாக இருக்கும். அவளே முடிவுக்கு வந்து விட்டாள்.
    அவளைப் பார்க்க இவளுக்குப் பொறாமை கூட வந்தது. பெருமூச்சு விட்டுவிட்டு அப்புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டுத் தன்னுடைய படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கீழிறங்கினாள்.
    ஒன்றைவிட நான்குக்குத் தானே மதிப்பதிகம்! நான்கு படத்தில் இருக்கும் மதிப்புத் தன்னுடைய ஒரு படத்திற்கு இருக்காது என்பது அவளது எண்ணம்.
    ஆனால் சக்திவேல் எதற்காகத் தன்னுடைய ஒரு புகைப்படத்தை வைத்திருக்கிறான் என்பதை அவள் யோசிக்கவில்லை.
    சில நேரங்களில் கவலைகள் சிந்தனை செய்ய விடுவதில்லை! தான் கண்டது தான் காட்சி என்றாகி விடுகிறது. காரணம்... தான் கண்ட காட்சியைத் தன்னுள்ளே நினைத்துப்பார்க்க வெளிச்சம் தேவையில்லை என்கிறதே மனம்!!
    இந்த விசயத்தை அவளால் எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. யாரிடம் தன் வேதனையைப் பங்கு போட்டுக்கொள்ள முடியும்?
    ஊமை கண்ட கனவுதான் தனது காதல்! முடிவு எடுத்தாள். தன் காதலை மனத்திலேயே விழுங்கி இதயத்தில் நினைவுசின்னமாக்கி விடுவது என்று!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
    
    கவலைகள் வந்தால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். காரணம் முதல் கவலை இன்னும் ஜீரணம் ஆகாமல் இருந்ததால் அடுத்தது வரும் சாதாரண விசயம் கூட மிகப் பெரிய கவலையாகத் தெரியும். பெரிய கோட்டின் பக்கத்தில் சிறிய கொடு தத்துவம் தான்.
    ஒருநாள் காலையில் அகிலாண்டேசுவரியும் சேகரின் அம்மாவும் எங்கோ சென்றுவிட்டுப் பொழுது சாய்ந்தபிறகு தான் வந்தார்கள்.
    மீனாவிற்கு இது அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் என்னவென்றால்... அன்றைய நாளில் இருந்து அந்த அம்மாள் மீனாவைப் பார்க்கும் பார்வையில் வெறுப்பு கலந்திருந்தது தான்!
    காரணம் தெரியவில்லை என்றாலும் மீனா எப்பொழுதும் போலத்தான் நடந்து கொண்டாள். ஆனால் அவர் அதை விரும்பாதது அவளுக்கு மிக நன்றாகப் புரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே...
    அவள் மனத்தில் வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வந்தது... எந்த உறவுமே உலகத்தில் நிரந்தரம் இல்லையா...? உலகமே நிரந்தரம் அற்றது என்னும் பொழுது உறவுக்குள் நிரந்தரமா...
    மீனா தன்னை நினைத்தாள். அவளுக்கு எந்த உரிமையான உறவும் நீடித்ததில்லை. அறிவழகியின் அன்பைத் தவிர! அதுவும் அறுந்து விட்டால்...?
    அன்பு அறுந்து போகுமா...? வெறுப்பு வந்தால் அறுந்து விடுவது தான் அன்பு. அப்படியானால் உண்மையான தூய்மையான அன்பு என்று எதுவும் இல்லையா...?
    இல்லை தான். தேனோ, பாலோ, மலர்களோ ஏன் நீரும் கூட தூய்மையானது இல்லை என்னும் பொழுது அழுக்கடைந்த மனித மனம் மட்டும் தூய்மையானதாக இருக்கும் என்றா எதிர்பார்க்க முடியும்...?
    காய்ந்த மனத்தில் மலர்ந்த சிரிப்பு வெறுப்பு கலந்து உதிர்ந்தது அவளின் முகத்தில். மனத்திற்கு நீர்வார்க்க எந்த மனிதனால் முடியும்? யார் தனக்காக இருக்கிறார்கள்?
    தன்னைவிட்டு ஒதுங்க நினைப்பவர்களை விட்டு நாமே ஒதுங்கி இருந்துவிட்டால்... அதனால் அவள் நாசுக்காக ஒதுங்கியே இருந்தாள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

   மறுநாள் கல்லூரியில் கலைநிகழ்ச்சி. அதில் மீனாவும் கண்மணியும் நடனம் ஆட ஒத்திகைப் பார்த்துத் தயாராக இருந்தார்கள்.
    ஒரு விசயத்தில் தயாராக இருப்பது என்பது பாதிக்கிணறு தாண்டியதைப் போன்றது என்பார்கள்...
    மீனா அதற்காகத்தான் அன்று மஞ்சள் சாயம் ஏறிப்போன தன் சராரா உடையைத் துவைத்துக் கொண்டிருந்தாள். என்ன போட்டும் என்ன கசக்கியும் அதில் இருந்த கரை போகவில்லை. எல்லாம் வாழைமட்டை சாற்றுடன் கலந்த மஞ்சள் நீர் சாயம் என்பதால் அந்த உடையில் பட்டைப் பட்டையாகவும் சில இடங்களில் திட்டுத் திட்டாகவும் கரை அழுத்தமாகத் தெரிந்தது.
   அவள் அதிக முயற்சி எடுத்துக் கசக்கினாள். ஊஹீம்... கரை போகவில்லை...! அங்கே வந்த கமலாவிடம் விசயத்தைச் சொன்னாள்.
    அவள் “மீனா... இந்த இடத்தில் நானா இருந்தா... நேரா அவருகிட்ட போயி உன்னால தான் என் டிரஸ் இப்படி ஆச்சி. எனக்கு இதே மாதிரி ஒரு டிரஸ் வாங்கிக் குடுன்னு கேட்டிருப்பேன்என்றாள்.
    இவள் உசுப்பிவிட்ட வேகம்... ஏற்கனவே எவ்வளவு துவைத்தும் கரை போகவில்லை என்ற ஆத்திரம்... மீனா சக்திவேலிடம் வந்தாள். அவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்.
    “சக்திவேல்...“ அதிகாரமாகக் கூப்பிட்டாள்!
    அவன் அதிர்ச்சியுடன் இவளை நிமிர்ந்து பார்க்க அவள் கோபமெல்லாம் கரைந்து விட்டது!
    “என்ன...?“ அவன் குரலும் சற்றுக் கடுமையாக வந்தது.
    “வந்து... வந்து... நாளைக்கி சாய்ந்தரம் காலேஜில ஒரு புரோகிராம்! நானும் கண்மணியும் சேர்ந்து ஒரு டான்சு ஆடப் போறோம். என்னோட டிரஸ்சை நீங்க மஞ்ச தண்ணி ஊத்தி சாயமாக்கிட்டீங்க. அதனால எனக்கு அதே மாதிரி ஒரு டிரெஸ் வேணும்...மென்று விழுங்கிச் சொன்னாள்.
    “டிரெஸ்சா...? அதெல்லாம் என்னால வாங்கித்தர முடியாது. படிக்க பணம் கட்டுறேன். சாப்பாடு, துணிமணி இவ்வளவு தான் என்னால முடியும். நீ கேக்கிற காஸ்ட்லி ஐட்டமெல்லாம் என்னால வாங்கித் தர முடியாது.“
    தொலைக்காட்சியில் இருந்து கண்களை எடுக்காமல் சொன்னான்.
    மீனா சற்று நேரம் நின்றிருந்தவள் நகர்ந்தாள். மனம் வலித்தது.
    தன் நிலையறிந்து தானம் கேட்பது முறையில்லை தானே... என்றது மனம்.
    வலிக்கும் மனத்திற்கு ஆறுதல் மொழிதான் மருந்து. ஆனால் அந்த மருந்தை அவளுக்குப் போட்டுவிடத்தான் யாருமில்லை. மீன் போல் அழுதாள்.

                 (தொடரும்)